புதுமைகளையும், சவால்களையும் எப்போதும் விரும்பும் ஒருவராக விளங்கும் ரத்தன் டாடா, இந்திய ஆட்டோமொபைல் துறையில் செய்த மிகப்பெரிய புரட்சி என்றால் அது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நேனோ கார் தான்.
வெறும் 1 லட்சம் ரூபாயில் அறிமுகமான இந்த நேனோ கார் லோவர் மிடில் கிளாஸ் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்றாலும் தொடர்ந்து அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற முடியாத காரணத்தால் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.
ரத்தன் டாடா திட்டமிட்டப்படி டாடா மோட்டார்ஸ் தற்போது எலக்ட்ரிக் கார் தயாரிப்பிலும் விற்பனையிலும் முன்னோடியாக இருக்கும் வேளையில், ஒரு ஸ்பெஷலான காரை ரத்தன் டாடா பெற்றுள்ளார்.
எலக்ட்ரா EV நிறுவனம்
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பவர்டிரைன் அளிக்கும் முன்னணி நிறுவனமாக விளங்கும் எலக்ட்ரா EV நிறுவனம், டாடா மோட்டார்ஸ் உட்படப் பல முன்னணி நிறுவனங்களுக்கு எலக்ட்ரிக் கார் தயாரிப்பதற்கான பவர்டிரைன் அளித்து வருகிறது.
கோயம்புத்தூர்
டாடா மோட்டார்ஸ் எலக்ட்ரிக் கார்களை வேகமாகத் தரமாகவும் தயாரிக்க முக்கியக் காரணமாக இருக்கும் ElectraEV நிறுவனத்தை உருவாக்கியதே ரத்தன் டாடா தான். இந்த நிறுவனம் புனேவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கினாலும் கோயம்புத்தூர் தான் இந்நிறுவனத்தின் உற்பத்தி தலைமையிடம்.
எலக்ட்ரிக் நோனோ கார்
இந்நிலையில் எலக்ட்ரா EV நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்கள் தலைவர்கள் ரத்தன் டாடா மீது வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையைக் காட்டும் விதமாக, ரத்தன் டாடாவுக்கு மிகவும் பிடித்த கார்களில் ஒன்றான டாடா நோனோ கார்-ஐ அவருக்கு ஸ்பெஷலாக எலக்ட்ரிக் காராக மாற்றி வடிவமைத்துப் பரிசளித்துள்ளது.
72V எலக்ட்ரிக் கார்
டாடா நோனோ காரை 72V எலக்ட்ரிக் காராக மாற்ற ElectraEV நிறுவனத்தின் அனைத்து முக்கிய அதிகாரிகளும் பணியாற்றியுள்ளனர். இந்தக் காரை எங்களுடைய நிறுவனருக்கு வழங்குவதில் பெருமை அடைகிறோம், அவருடைய விலைமதிப்பற்ற கருத்துகள் மூலம் பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டோம் என ElectraEV தனது லின்கிடுஇன் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது.
சாந்தனு நாயடு
ElectraEV ரத்தன் டாடா-வுக்கு எலக்ட்ரிக் நோனோ காரை பரிசாக அளித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படத்தில் ரத்தன் டாடா, வெள்ளை எலக்ட்ரிக் நோனோ கார் உடன் ரத்தன் டாடாவின் எக்ஸ்கியூட்டிவ் அசிஸ்டென்ட் சாந்தனு நாயடுவும் இருந்தார்.