கர்நாடகாவின் குடகு மாநிலத்தில் இருக்கும் 942 ஏக்கர் டீ எஸ்டேட்-ன் அதிகாரத்தை டாடா குழுமம் உள்ளூர் நீதிமன்ற வழக்கால் இழக்க உள்ளது.
இந்த நீதிமன்ற தீர்ப்பின் மூலம் கர்நாடக அரசு டாடா கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் 942 ஏக்கர் டீ எஸ்டேட்-ஐ வன துறையிடம் ஒப்படைக்க தயாராகி வருகிறது.
942 ஏக்கர் டீ எஸ்டேட்
இந்தக் குறிப்பிட்ட 942 ஏக்கர் டீ எஸ்டேட் பகுதியை அரசு தரவுகளில் 2008ஆம் ஆண்டுக் காடு எனக் குறிப்பிட்டு இருந்தது இதை redeemed sagu என மாற்ற வேண்டும் என டாடா காஃபி பெட்டிஷன் போட்ட நிலையில், விராஜ்பேட்டை நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி லோகேஷ் எம்.ஜி நிராகரித்தார்.
வன துறை
இதனால் இந்த நிலம் தற்போது எவ்விதமான குத்தகையிலும் இல்லை என்பது உறுதியாகி, டீ எஸ்டேட் பகுதியை வன துறைக்கு ஒப்படைக்க உள்ளதாகக் குடகு துணை கமிஷனர் பி.சி.சதீஷா தெரிவித்துள்ளார். 2008 ஏப்ரல் மாதம் வருவாய் துறை டாடா காஃபி நிறுவனத்தின் குத்தகை கட்டுப்பாட்டில் இருக்கும் 942 ஏக்கர் நிலத்தை விவசாய நிலம் என்பதைத் திருத்தி வன பகுதி என அறிவித்தது.
குத்தகை ஒப்பந்தம்
இப்பகுதியில் எவ்விதமான விவசாயமும் வர்த்தகமும் செய்ய முடியாத நிலைக்கு டாடா தள்ளப்பட்டது, இது மட்டும் அல்லாமல் பழைய குத்தகை ஒப்பந்தத்தை ரத்துச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது. இதை மீண்டும் சாகு அதாவது விவசாயம் செய்யக் கூடிய பகுதி என அறிவிக்க வேண்டி டாடா காஃபி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது, இந்த மனுதான் தற்போது நிராகரிக்கப்பட்டு உள்ளது.
டாடா காஃபி நிறுவனம்
டாடா கன்ஸ்யூமர் பிராடக்ட் நிறுவனத்தின் கிளை நிறுவனம் தான் டாடா காஃபி, ஆசியாவிலேயே 2வது மிகப்பெரிய இன்ஸ்டென்ட் காஃபி ஏற்றுமதி நிறுவனமான உள்ளது. கடந்த வருடம் டாடா காஃபி சுமார் 2,289 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது, டாடா காஃபி நிறுவனம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் காபி மற்றும் தேயிலை தோட்டங்களை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
99 வருடம் மட்டுமே
தற்போது 942 ஏக்கர் டீ எஸ்டேட் பகுதியை வன பகுதியாக அறிவித்துள்ளது மட்டும் அல்லாமல் குத்தகை காலத்தை 999 வருடத்தில் இருந்து 99 வருடமாகக் குறைத்துள்ளது. மேலும் விராஜ்பேட்டை நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி லோகேஷ் எம்.ஜி மேல் முறையீட்டுக்கு வருவாய் நீதிமன்றத்தில் தீர்த்துக்கொள்ளுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.