இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமாக விளங்கும் டாடா குழுமத்தின் டெலிகாம் பிரிவான டாடா கம்யூனிகேஷ்ன்ஸ் நிறுவனம் கிளவுட் சேவை விரிவாக்கத்திற்காகவும், இந்தியாவில் தனது கிளவுட் சேவை மூலம் வர்த்தகத் துறையை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல உலகின் முன்னணி டெக் சேவை நிறுவனமான கூகிள் கிளவுட் உடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தகத்தில் டாடா கம்யூனிகேஷன்ஸ் பங்குகள் 998 ரூபாயில் இருந்து 1,105.80 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
டாடா கம்யூனிகேஷன்ஸ் மற்றும் கூகிள் கிளவுட் கூட்டணி மூலம் தனது பொதுக் கிளவுட் சேவை தளத்தை டாடா இனி கூகிகள் கிளவுட் சேவைகளுக்கு விரிவாக்கம் செய்ய முடியும். இதன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள், சேவைக்கு மட்டும் அல்லாமல் பழைய சேவைகளையும் கூகிள் கிளவுட் சேவை தளத்தில் நிர்வாகம் செய்ய முடியும்.
மேலும் இந்தியாவில் இருக்கும் நிறுவனங்கள் இனி டாடா கம்யூனிகேஷன்ஸ் IZO மேனேஜ்டு கிளவுட் சேவை மூலம் கூகிள் கிளவுட் சேவையை டிப்லாய் செய்யவும், அனுமதிகளைப் பெறவும் முடியும். மேலும் இந்தக் கூட்டணி மூலம் டாடா கம்யூனிகேஷன்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்குக் கிளவுட் ஆர்கிடெக்சர் திட்டமிடல், வொர்க்லோடு மைகிரேஷன், எனப் பல்வேறு சேவைகளை அளிக்க உள்ளது.
ஒரு நிறுவனம் கிளவுட் சேவைக்கு மாறும் போது மொத்த ஐடி எகோசிஸ்டத்திலும் மிகப்பெரிய அளவிலான மாற்றமும், அதற்கான உதவிகளும் தேவைப்படும். இதைத் தான் கூகிள் கிளவுட் சேவைகளுக்காக டாடா கம்யூனிகேஷன்ஸ் செய்ய உள்ளது.
கொரோனா பாதிப்பு ஏற்பட்ட காலத்தில் உலகில் பல கோடி நிறுவனங்கள் தங்களது சேவை மற்றும் வர்த்தகத்தைக் கிளவுட் சேவைக்கு மாற்றி வருகிறது. இதனால் இந்தியாவில் இருக்கும் அனைத்து ஐடி மற்றும் டெலிகாம் நிறுவனங்களும் கிளவுட் சேவைக்காகத் தங்களைத் தயார்படுத்தி வருகிறது.