இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகம் குறைந்த காலகட்டத்தில் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்திருக்கும் நிலையில், அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களைத் தாண்டி தற்போது ரிலையன்ஸ், டாடா ஆகிய நிறுவனங்களுக்கும் களத்தில் இறங்கியுள்ளது.
இதில் முக்கியமாக டாடா குழுமம் ரீடைல் வர்த்தகத் துறையில் பல ஆண்டுகளாக இருந்தாலும் பெரிய அளவிலான வர்த்தக வளர்ச்சியை இதுவரை அடையவில்லை. ஆனால் கொரோனா தொற்றுக் காலத்தில் மக்கள் அனைவரும் ஆன்லைன் வர்த்தகத் துறை சேவைகளை அதிகளவில் பயன்படுத்தத் துவங்கிய காரணத்தால் டாடா தொடர்ந்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது.
ஏற்கனவே டாடா பிக்பேஸ்கட் நிறுவனப் பங்குகளைக் கைப்பற்றித் தனது மளிகைப்பொருட்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை துறையில் பெரிய அளவில் முன்னேறியுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் அடுத்தடுத்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
டாடா - 1MG டீல்
டாடா சன்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான டாடா டிஜிட்டல் ஆன்லைன் பார்மஸி நிறுவனமான 1MG பங்குகளைக் கைப்பற்ற பல மாதங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் தற்போது நிறைவுபெற்றுள்ளது. சுமார் 65 சதவீத 1MG பங்குகளை 110 மில்லியன் டாலருக்கு கைப்பற்றியுள்ளது டாடா டிஜிட்டல்.
டாடா - CureFit டீல்
இதேபோல் மக்கள் அதிகளவில் உடல் ஆரோக்கியம் மற்றும் உடல் கட்டமைப்புகளில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், இதை உணர்ந்த டாடா டிஜிட்டல் இத்துறையில் சிறந்து விளங்கும் CureFit நிறுவனத்தில் சுமார் 75 மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்துள்ளது. CureFit நிறுவனம் இதுவரை 418 மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடாக ஈர்த்துள்ளது.
டாடா - Justdial பேச்சுவார்த்தை
டாடா குழுமம் சில மாதங்களுக்கு முன்பு ஜஸ்ட்டயல் நிறுவனத்தைக் கைப்பற்ற ஆர்வம் காட்டியது. ஆனால் ஜஸ்ட்டயல் இதற்கு மறுத்துவிட்டது. ஆனால் தற்போது ஜஸ்ட்டயல் தனது நிறுவனத்தை விற்பனை செய்ய டாடா, ஜியோ, ஜப்பான் சாப்ட்பேங்க் ஆகிய நிறுவனங்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் டாடா வெற்றிபெற அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
டாடா - Dunzo பேச்சுவார்த்தை மறுப்பு
மேலும் டாடா ஆன்லைன் டெலிவரி சேவையில் இறங்க வேண்டும் எனத் திட்டமிட்டு இத்துறையில் சிறந்து விளங்கும் Dunzo நிறுவனத்தின் 50 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளைக் கைப்பற்றப் பேச்சுவார்த்தை நடத்துவதாகத் தகவல் வெளியானது. ஆனால் இதை Dunzo மறுத்துவிட்டது, இதேவேளையில் Dunzo நிறுவனம் சுமார் 150 முதல் 200 மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீட்டை ஈர்க்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.