தைவான் நாட்டின் பெகாட்ரன் கார்பரேஷன் மற்றும் டாடா எல்கட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தமிழ்நாட்டில் ஸ்மார்ட்போன் மற்றும் அதன் உதிரிப்பாகங்களைத் தயாரிக்கும் புதிய தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்துள்ளது.
இப்புதிய தொழிற்சாலைக்காகப் பெகாட்ரன், டாடா எல்கட்ரானிக்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் முதற்கட்டமாக சுமார் 6,863 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளனர். மேலும் வர்த்தக வளர்ச்சிக்கு ஏற்பட உற்பத்தி அளவீட்டை மேம்படுத்தத் தொடர்ந்து முதலீடு செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
ரூ.6,863 கோடி முதலீடு
பெகாட்ரன் மற்றும் டாடா எல்கட்ரானிக்ஸ் இக்கூட்டணியில் உருவாகும் ஸ்மார்ட்போன் உதிரிப்பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலை திட்டத்தில் டாடா சுமார் 5,763 கோடி ரூபாயும், பெகாட்ரன் 1,100 கோடி ரூபாயும் முதற்கட்டமாக முதலீடு செய்ய உள்ளதாகத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா - சீனா பிரச்சனை
கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் பிரச்சனை காரணமாக, சீனாவில் இருந்து பல முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் வெளியேறியது. இப்படி வெளியேறிய ஸ்மார்ட்போன் நிறுவனங்களை இந்தியா அதிகளவில் ஈர்த்துள்ளது.
ஸ்மார்ட்போன் ஏற்றுமதி
இதன் மூலம் இந்தியா அடுத்தச் சில வருடங்களில் ஸ்மார்ட்போன் ஏற்றுமதியிலும், ஸ்மார்ட்போன் உதிரிப்பாகங்கள் ஏற்றுமதியிலும் உலக நாடுகளுக்கு இந்தியா ஹப் ஆக மாற வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்த இலக்கை அடைய மத்திய பல்வேறு சலுகைகளை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
16 வெளிநாட்டு நிறுவனங்கள்
குறிப்பாகச் சில மாதங்களுக்கு முன்பு கொரோனா மற்றும் லாக்டவுன் மூலம் ஏற்பட்ட இந்திய பொருளாதாரச் சரிவை மேம்படுத்த மத்திய அரசு நாட்டின் உற்பத்தி அளவீடுகளை அதிகரிக்க வேண்டும் எனத் திட்டமிட்டு வெளியிட்ட PLI திட்டத்தின் கீழ் சுமார 16 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க மத்திய அரசு கடந்த அக்டோபர் மாதம் ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு ஜாக்பாட்
பெகாட்ரன் நிறுவனத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் சோலார் பேணல்களை தயாரிக்க சன் எடிசன் என்ற நிறுவனம் சுமார் 4,629 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இதைத் தொடர்ந்து எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் மற்றும் பேட்டரி-யை தயாரிப்பதற்காக ஓலா எலக்ட்ரிக் சுமார் 2,354 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது.
தமிழ்நாடு பொருளாதாரம்
இத்திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டுக்கு மக்களுக்கு அதிகளவிலான வேலைவாய்ப்புகள் கிடைப்பது மட்டும் அல்லாமல் இந்தியாவின் உற்பத்தி கனவு இலக்கில் பெரும் பகுதி வர்த்தகத்தைத் தமிழ்நாடு பெரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தமிழ்நாட்டில் அதிகளவிலான நிறுவனங்கள் புதிதாகத் தொழில் துவங்குவதன் மூலம் வேலைவாய்ப்புகளைத் தாண்டி நாட்டின் தமிழ்நாட்டின் பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.