இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி அதிகரித்து வருகிறது என்பதும், எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் நிறுவனங்கள் போட்டி போட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் டாடா குழுமம் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி மற்றும் ஒருசில துறைக்காக ரூ.60,000 கோடி புதிய முதலீட்டை திரட்ட திட்டமிட்டுள்ளது.
எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் டாடா தீவிரமாக களமிறங்குவதால் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன சந்தையில் புதிய புரட்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிதி திரட்டுதல்
டாடா குழும நிறுவனங்கள் நடப்பு 2022-23 நிதியாண்டில் ரூ.60,000 கோடி மதிப்பிலான தங்களது திட்டமிடப்பட்ட மூலதன செலவினங்களுக்காக (கேபெக்ஸ்) நிதி திரட்ட முன்னணி வங்கிகள் மற்றும் பங்கு முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
ரூ.60,000 கோடி திட்டம்
டாடா குழுமத்தின் ரூ.60,000 கோடி கேபெக்ஸ் திட்டத்தில் டாடா மோட்டார்ஸின் ரூ.32,000 கோடி, டாடா பவரின் ரூ.14,000 கோடி, டாடா ஸ்டீலின் ரூ.12,000 கோடி, டாடா கெமிக்கல்ஸின் ரூ.2,000 கோடி மற்றும் டாடா கன்ஸ்யூமர்ஸ் ஸ்டாண்டர்ட் நிறுவனத்திற்கு ரூ.361 கோடி ஆகியவை உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸ் தலைமையிலான குழு நிறுவனங்கள், டாடா பவர் மற்றும் டாடா ஸ்டீல், மின்சார வாகனங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன.
எலக்ட்ரிக் வாகனங்கள்
டாடா மோட்டார்ஸ் நிறுவன அதிகாரிகள் இதுகுறித்து கூறியபோது, 'வரவிருக்கும் ஆண்டுகளில் தொடர்ச்சியாக எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்துவதற்காக, 32,000 கோடி ரூபாயை கேபெக்ஸில் செலவிடுகிறது. இங்கிலாந்தை தளமாக கொண்ட அதன் துணை நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் 26,000 கோடி ரூபாய் செலவழிக்கும் என்றும், மீதமுள்ளவை இந்தியாவில் உள்ள தாய் நிறுவனத்தில் முதலீடு செய்யப்படும் என்றும் கூறினார்.
$1 பில்லியன் முதலீடு
அடுத்த ஒரு வருடத்தில் டாடாவின் எலக்ட்ரிக் வாகனங்களின் நிறுவனத்தில் 11-15% பங்குகளுக்கு $1 பில்லியன் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. வங்கியாளர்கள் அறிக்கையின்படி, இந்த பிரிவில் பெரும்பாலான முதலீடுகள் ஈக்விட்டி நிதியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
டாடா குழுமம்
அபுதாபியை தளமாக கொண்ட ஃபண்ட் முபதாலா கேபிடல் மற்றும் பிளாக்ராக் ரியல் அசெட்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் டாடா குழுமம் முதலீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு முதலீட்டாளர்களும் டாடா பவர் ரினியூவபிள் நிறுவனத்தில் 10.5% பங்குகளை எடுத்துள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.
டாடா பவர்
மேலும் டாடா பவர் ரூ.14,000 கோடியை மூலதன செலவில் ரூ.10,000 கோடி அதன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துணை நிறுவனத்தால் முதலீடு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் அடுத்த 5 ஆண்டுகளில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் மிகப்பெரிய அளவில் ரூ.75,000 கோடி முதலீடு செய்ய டாடா பவர் திட்டமிட்டுள்ளது.