ஏர் இந்தியா அதீத கடன் நெருக்கடியால் மீண்டும் தனது தாய் வீட்டுக்கே திரும்பிய நிலையில், டாடா குழுமம் எப்படியாவது ஏர் இந்தியாவை வெற்றிகரமான நிறுவனமாக மாற்ற வேண்டும் என்ற மாபெரும் திட்டத்துடன் உள்ளது.
மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் ஏர் இந்தியாவை டிசம்பர் மாதத்தின் இறுதி வாரம் அல்லது ஜனவரி மாதம் டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டிற்குக் கீழ் ஒப்படைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஏர் இந்தியாவை விரைவாக வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வரும் பொருட்டு டாடா பல முக்கியமான முடிவுகளை ஏற்கனவே எடுத்துள்ளது.
100 நாள் திட்டம்
டாடா குழுமம் ஏர் இந்தியா நிறுவனத்தின் ஆப்ரேஷனல் மற்றும் சர்வீஸ் தரத்தை உயர்த்துவதற்காக 100 நாள் திட்டத்தை வகுத்து வருகிறது. இந்திய விமானப் பயண வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏர் இந்தியா மீது இருக்கும் முக்கியமான வருத்தம் மோசமான வாடிக்கையாளர் சேவை தான். இதைச் சரி செய்ய டாடா குழுமம் ஆரம்பத்திலேயே பணியாற்றத் துவங்கியுள்ளது.
சிஇஓ பதவி
மேலும் டாடா குழுமம் ஏர் இந்தியாவைச் சிறப்பான முறையில் நிர்வாகம் செய்ய புதிய சிஇஓ பதவியை வெளிநாட்டவருக்கு அளிக்க முடிவு செய்துள்ளது. இந்த முடிவு மக்கள் மத்தியில் பலதரப்பட்ட விமர்சனத்தை உருவாக்கியுள்ள வேளையில் யார் அந்தப் புதிய சிஇஓ என்ற கேள்விக்குக் கிட்டத்தட்ட பதில் கிடைத்துள்ளது.
டெல்டா ஏர்லையன்ஸ்
டாடா குழுமம் கட்டுப்பாட்டிற்கு வரும் ஏர் இந்தியாவின் சிஇஓ பதவி அமெரிக்காவின் மிகவும் பிரபலமான டெல்டா ஏர்லையன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ பெர்ட் ரெய்டு-க்கு கிடைக்க அதிகப்படியான வாய்ப்புகள் இருப்பதாகவும், டாடா குழுமத்திற்கு மிகவும் விருப்பமான தேர்வாகவும் இவர் இருக்கிறார் என்றும் தெரிய வந்துள்ளது. இதேபோல் இதர பலரையும் டாடா குழுமம் தேர்வு செய்து இறுதிக்கட்டத்தில் வைத்துள்ளது.
100 நாள் திட்ட பணிகள்
டாடா குழுமம் திட்டமிட்டு உள்ள இந்த 100 நாள் திட்டத்தில் ஏர் இந்தியா டாடா கட்டுப்பாட்டிற்கு வந்த உடன் முதலும் முக்கியமான ஏர் இந்தியா விமான நிறுவனங்கள் சரியான நேரத்திற்குக் கிளம்பவும், லேண்டிங் செய்யவும் நடவடிக்கை எடுக்க உள்ளது. இதைத் தொடர்ந்து பயணிகள் புகார் மற்றும் கால் சென்டர் சேவைகளை மேம்படுத்தவும் முடிவு செய்துள்ளது.
7 உயர் அதிகாரிகள் ராஜினாமா
மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகக் குழு அதிகாரிகளை டாடா சன்ஸ் வெளியேற ஏற்கனவே உத்தரவிட்டு உள்ள நிலையில் சுமார் 7 உயர் அதிகாரிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
புதிய நிர்வாகக் குழு
இந்த நிலையில் டாடா சன்ஸ் கட்டுப்பாட்டிற்கு வரும் ஏர் இந்தியா-வில் உருவாக்கப்படும் புதிய நிர்வாகக் குழுவில் டாடா சன்ஸ் M&A குழு, ஏவியேஷன் பிரிவு வல்லுனர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் தனிப்பட்ட தலைவராக நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொச்சி விமான நிலையம்
மேலும் தென் இந்தியாவில் மிகவும் பிசியான விமான நிலையமாக விளங்கும் கொச்சி விமான நிலையத்தில், ஓரே ஓரு விமானச் சேவை நிறுவனம் தான் பங்குகளை வைத்துள்ளது, அது ஏர் இந்தியா மட்டுமே. தற்போது ஏர் இந்தியா-வை டாடா குழுமம் வாங்கும் காரணத்தால் கொச்சி விமான நிலைய பங்குகளைத் தற்போது டாடா குழுமம் பெற உள்ளது.