இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் டாடா குழுமம் சந்திரசேகரன் தலைமையில் மிகப்பெரிய அளவிலும் வேகமாகவும் வளர்ச்சி அடைந்து வருகிறது.
குறிப்பாக சந்திரசேகரன் தலைமையிலான டாடா குழுமம் தற்போது ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் வர்த்தகத்தில் அதிகளவில் கவனம் செலுத்தி வரும் வேளையில் டாடாவின் வளர்ச்சி புதிய உச்சத்தை அடைய உள்ளது, சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்த வருடம் அதிகப்படியான பங்கு மதிப்பில் வளர்ச்சியைப் பதிவு செய்த முன்னணி நிறுவனங்களில் டாடா குழும நிறுவனங்களில் பல இடம்பெற்று இருந்தது.
இதன் மூலம் முதலீட்டாளர்கள் மத்தியிலும் டாடா குழுமம் அதிகப்படியான கவனத்தைப் பெற்று வரும் நிலையில் சந்திரசேகரன் தான் இலக்காகக் கொண்டு இருக்கும் 4 துறைகளை அறிவித்துள்ளார்.
என்.சந்திரசேகரன்
டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமாகவும், தாய் நிறுவனமாகவும் விளங்கும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான என்.சந்திரசேகரன் நேற்று தனது ஊழியர்களுக்கு அளித்த புத்தாண்டு செய்தியில் பல முக்கியமான தகவல்களைத் தெரிவித்துள்ளார், இதில் முதலீட்டாளர்களுக்கு, சக போட்டி நிறுவனங்களுக்கும் முக்கியமானதாக விளங்கியது சந்திரசேகரன் முக்கிய இலக்காகக் கொண்டு இருக்கும் 4 துறைகள் தான்.
டாடா குழுமம்
சந்திரசேகரன் டாடா குழும ஊழியர்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் டிஜிட்டல், நியூ எனர்ஜி, சப்ளை செயின், ஹெல்த் ஆகியவை தான் முக்கியமான இலக்காக நிர்ணயம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
5G முதல் TataNeu
இந்த 4 துறையிலும் பெரிய அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்ய ஏற்கனவே பல புதிய திட்டங்களை 5G முதல் TataNeu, Tata electronics சோதனை செய்யப்பட்டு வருகிறது. இது நிறுவனத்தின் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தும் எனச் சந்திரசேகரன் டாடா ஊழியர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
3 டிரில்லியன் டாலர்
ஒரு நிறுவனமாக இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் நம்முடைய கடமையைச் செய்ய வேண்டும், இதன் மூலம் 2024ஆம் ஆண்டுக்குள் இந்தியா 3 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாற்றும் இலக்கை அடைவோம் எனத் தெரிவித்துள்ளார்.
ஐஎம்எப்
மேலும் சந்திரசேகரன் ஐஎம்எப் அமைப்பு சர்வதேச பொருளாதாரத்தின் சராசரி வளர்ச்சி அளவீடு 4.9 சதவீதமாக அறிவித்துள்ள நிலையில், இந்தியாவின் வளர்ச்சி அளவீடு 8.5 சதவீதமாக உள்ளது என்பதையும் சந்திரசேகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.