ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா சன்ஸ் வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனால் 68 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டாடா நிறுவனத்திடமே ஏர் இந்தியா செல்கின்றது.
சமீபத்தில் இது குறித்த கருத்துகள் ஊடகங்கள், சமூக வலைதளங்களில் பரவலாக பரவியது. ஆனால் அது தவறானது என மத்திய அரசு விளக்கம் கொடுத்தது. எனினும் தற்போது அதிகாரப்பூர்வமாக ஏர் இந்தியா நிறுவனத்தினை டாடா குழுமம் கைபற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடன் சிக்கல்
கடந்த சில ஆண்டுகளாகவே பெரும் கடன் பிரச்சனையில் சிக்கித் தவித்து வந்த ஏர் இந்தியா நிறுவனம், ஊழியர்களுக்கு கூட சரியான நேரத்தில் சம்பளம் கொடுக்க முடியாமல் ஒரு கட்டத்தில் தவித்து வந்தது. எரிபொருளுக்கான கட்டணங்களை கூட கொடுக்க முடியாமல் தவித்து வந்தது.
கொரோனாவால் மோசம்
இதனை கொரோனா இன்னும் மோசமாக்கியது. கொரோனா காலத்தில் விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், அரசு தீவிரமாக ஏர் இந்தியாவினை தனியார்மயமாக்கும் முயற்சியினை கையில் எடுத்தது. ஆரம்பத்தில் பகுதி பங்குகளை அரசு வசம் வைத்துக் கொண்டு, மீத பங்குகளை விற்க முயற்சி செய்து வந்தது.
கொரோனா காலத்தில் பின்னடைவு
ஆனால் யாரும் ஆர்வம் காட்டாத நிலையில், பின்னர் முழு பங்கினையும் விற்பனை செய்ய முடிவு செய்தது. இந்த நிலையில் தான் முழு பங்கினையும் விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது. இது கொரோனா காலத்தில் இந்த முயற்சியானது பின்னடைவை சந்தித்த நிலையில், கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கிய நிலையில் மிக தீவிரமாக முயற்சி எடுத்து வந்தது.
டாடா சன்ஸ் விருப்பம்
இதற்கிடையில் தான் செப்டம்பர் 15 அன்று ஏர் இந்தியாவினை ஏலத்தில் எடுக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. இதில் தான் ஏர் இந்தியாவினை வாங்க டாடா சன்ஸ் நிறுவனமும் ஆர்வம் காட்டியது. இது குறித்து கடந்த வாரத்தில் அமித் ஷா தலைமையிலான குழு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியது.
ஏர் இந்தியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்த நிலையில் தான் தற்போது 18,000 கோடி ரூபாய்க்க்கு டாடா குழுமம் வாங்கியதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏர் இந்தியா தனியார்மயமானதை மத்திய அமைச்சர்கள் குழு உறுதி செய்ததாக மத்திய அரசு செயலர் தெரிவித்துள்ளார்.