இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமான டாடா குரூப் டேலஸ் நிறுவனத்தின் வாயிலாக ஏர் இந்தியா நிறுவனத்தைக் கைப்பற்றிய நிலையில், நீண்ட காலமாகக் காத்திருந்த சிசிஐ அமைப்பின் ஒப்புதலும் தற்போது கிடைத்துள்ளது.
இதையடுத்து டாடா குழுமம் இந்திய விமானப் போக்குவரத்தில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்றும், அதிகளவிலான மக்களை விமானத்தில் பயணம் செய்ய வைக்க வேண்டும் என்றும் முக்கிய இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.
இதற்காகப் பட்ஜெட் விலையில் உள்நாட்டு முதல் வெளிநாட்டு விமானச் சேவைகளை அளிக்க டாடா குழுமம் முக்கியமான திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
ஏர் இந்தியா
மத்திய அரசு அடுத்தச் சில வாரத்தில் ஏர் இந்தியாவின் மொத்த நிர்வாகத்தையும் டாடா குழுமத்தின் கையில் கொடுக்க உள்ள நிலையில், மலிவான விலையில் விமானச் சேவையை அளிக்க வேண்டும் என்பதற்காக டாடா சிறப்பான திட்டத்தைத் தீட்டியுள்ளது.
டாடா குழுமம்
டாடா குழுமத்தின் கீழ் இருக்கும் மலிவு விலை விமானச் சேவை நிறுவனமான ஏர் ஏசியா இந்தியா உடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பிரிவை இணைக்கத் திட்டமிட்டு உள்ளது டாடா குழுமம். இந்த இணைப்புத் திட்டத்தின் மூலம் குறுகிய தூர பயணம் முதல் வெளிநாட்டு விமானப் பயணங்கள் வரையில் மலிவு விலையில் விமானச் சேவை அளிக்க முடிவு செய்துள்ளது டாடா.
ஏர் ஏசியா- ஏர் இந்தியா
இந்த இணைப்புத் திட்டம் மூலம் ஏர் ஏசியா இந்தியாவின் உள்நாட்டு விமானச் சேவையை விரிவாக்கம் செய்யவும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மூலம் வெளிநாட்டு விமானச் சேவையை விரிவாக்கம் செய்யவும் முடியும்.
ஏர்பஸ் மற்றும் போயிங்
இதேபோல் இரு விமான நிறுவனத்திடம் இருக்கும் ஏர்பஸ் மற்றும் போயிங் விமானங்களையும் இந்த இணைப்புத் திட்டத்தின் மூலம் முழுமையாகப் பயன்படுத்த முடியும். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் ஏசியா இணைப்பு மூலம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் டிக்கெட் புக்கிங் அனைத்தும் ஏர் ஏசியா புக்கிங் தளத்திற்கு மாற்றப்பட உள்ளது.
இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட்
இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்கனவே இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் டாடா குழுமத்தின் வருகை பெரும் போட்டியை உருவாக்கும், ஆனால் வாடிக்கையாளர் சேவை மற்றும் இன்கேபின் சர்வீஸ் மேம்பட்டால் மட்டுமே டாடா குழுமத்தால் போட்டியை தாக்கு பிடித்து அதிக வருமானத்தைப் பெற முடியும்.