டெல்லி: கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை சீனாவில் 636 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 30,000 பேருக்கும் மேல் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் செய்திகள் கூறுகின்றன.
சர்வதேச அளவில் ஒரு பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்ற கொரோனா வைரஸ் தொற்று நோயானது, உலகம் முழுவதும் தங்கு தடையின்றி பரவ ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று தாக்குதல் பற்றிய முதல் அறிவிப்பினை சீனாவில் வெளியிட்ட முதல் மருத்துவரான, லி வென்லியாங்கையும் விட்டுவைக்காமல், கரோனா வைரஸ் தாக்குதலானது அந்த மருத்துவரின் உயிரையும், தற்போது பறித்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
கொரோனா எச்சரிக்கை
கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றி, டிசம்பர் 30-ம் தேதியன்றே மருத்துவரான லி வென்லியாங், பெரும் எச்சரிக்கை விடுத்தும், கொரோனாவின் தாக்குதல்கள் பற்றிய தகவல்களை, சீனாவின் காவல் துறை சார்ந்த கட்டுப்பாட்டிற்கும், கொரோனா வைரஸ் பற்றி எச்சரிக்கை விடுத்து இருந்தார். இந்த நிலையில் அவரது மரணம் பற்றி பல்வேறு முரண்பட்ட தகவல்கள் வெளியாகின்ற சூழலிலும் கூட, வெள்ளிக்கிழமை அதிகாலை 2:58-க்கு அவர் மரணமடைந்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மருத்துவரே இறப்பு
வுகான் மாகாணத்தின் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றுகின்ற மருத்துவரான, லி வென்லியாங், கடந்த 2019-ம் ஆண்டின் டிசம்பர்30-ம் தேதியில் சீனாவின் வுகானில், சார்ஸ் போன்ற புதிய வகை வைரஸ் பரவி வருகின்ற விஷயத்தை பற்றிய செய்தியினை தனது நண்பர்களிடமும், சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்தார். ஆனால் அதே நேரத்தில் லீ வென்லியாவிடம் சீன காவல் துறையினர்கள் இது போன்ற செய்திகளையும், வதந்திகளையும் பரப்பப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும் அவரை எச்சரித்திருந்தனர்.
பணி நிறுத்தம் நீட்டிப்பு
இப்படி ஒரு நிலையில் கொரோனாவின் கொடிய தாக்கத்தினால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் சீனாவில் வுகான் மாகாணத்தில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் சீனாவிலுள்ள டாடா மோட்டார்ஸின் சொகுசு கார் நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் தற்காலிகமாக தனது ஆலையில் உற்பத்தி பிரிவில் பணி நிறுத்தத்தினை நீட்டித்துள்ளது.
ஆலோசனை
இதனால் 3000 பேரை வீட்டில் இருந்தே பணி புரிய அந்த நிறுவனம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து டாடா மோட்டார்ஸின் தலைமை செயல் அதிகாரி பிபி பாலாஜி, வுகானில் இருந்து 800 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாங்ஷூவில் உள்ள செரி ஜாகுவார் லேண்ட் ரோவர் உற்பத்தி பிரிவில் பணி நிறுத்தம் செய்வதற்கான முடிவை நிறுவனம் அடுத்த வாரம் பரிசீலிக்கும் என்றும் கூறியுள்ளார்.
தேவையை பாதிக்கலாம்
ஜனவரி 30ம் தேதி அன்று கொரோனா வைரஸ் சொகுசு கார்களுக்கான தேவையை பாதிக்கக் கூடும் என்றும், நிலைமையை உன்னிப்பாக கண்கானித்து வருவதாகவும் பாலாஜி கூறியிருந்தார். டாடா மோட்டார்ஸின் ஒருங்கிணைந்த வருவாய் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 71,676 கோடி ரூபாயாக இருந்தது. இது இதற்கு முன்பு முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 76,916 கோடி ரூபாய் வருவாய் இருந்தது குறிப்பிடத்தக்கது.
சீனா சந்தை வளர்ச்சி
ஜே.எல்.ஆர் ஏற்படும் இழப்புகளைக் குறைக்க நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக செலவுகளைக் குறைத்தல், விற்பனையை அதிகரிக்க புதிய மாடல் அறிமுகங்கள் ஆகியவை அடங்கும். இதன் விளைவாக அக்டோபர் டிசம்பர் மாதங்களில் சீனாவின் சந்தை ஆண்டுக்கு 24% வளர்ச்சியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.