ஹீரோ மோட்டோ கார்ப், மாருதி சுசூகி, ஹோண்டா ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து நாட்டின் மிக முக்கியமான ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் மூலப்பொருட்களின் விலை உயர்வால் தனது தயாரிப்புகளின் விலையை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ்
சில குறிப்பிட்ட காலம் மட்டுமே இந்த விலை உயர்வு நடைமுறையில் இருக்கும் என்றும், விலை உயர்வு எவ்வளவு இருக்கும் என்றும் நிர்வாகம் ஆலோசனை செய்து வருவதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. விரைவில் விலை உயர்வு குறித்து அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
டாடா மாடல் கார்கள்
இந்த அறிவிப்பின் மூலம் டாடா மோட்டார்ஸ் தனது முக்கியத் தயாரிப்புகளான சபாரி, ஹேரியர், நெக்சான், டியாகோ, அல்ட்ராஸ், டிகார் ஆகிய மாடல் கார்களின் விலை உயர உள்ளது. இப்புதிய விலை உயர்வை அறிவிக்கும் முன்பாகக் கார் வாங்கத் திட்டமிட்டு உள்ளவர்கள் கார் புக் செய்வது சிறந்தது.
3 முறை விலை உயர்வு
2021ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 3 முறை விலை உயர்த்தியுள்ளது டாடா மோட்டார்ஸ், ஜனவரி 2021ல் சுமார் 26,000 ரூபாய் வரையில் கார் மாடல்களுக்கு ஏற்ற வகையில் உயர்த்தப்பட்டது, இதேபோல் மே 2021ல் கார் விலை 1.8 சதவீதம் வரையில் உயர்த்தப்பட்டது.
மூலப்பொருட்களின் விலை உயர்வு
தற்போது 3வது விலை உயர்வு பற்றி டாடா மோட்டார்ஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது, இந்த விலை உயர்வுக்கு மிக முக்கியக் காரணம் மூலப்பொருட்களின் விலை உயர்வு தான். கடந்த ஒரு வருடத்தில் மூலப்பொருட்களின் பணவீக்கம் 8 முதல் 10 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.
சிப் சப்ளை
இதற்கிடையில் ஆட்டோமொபைல் நிறுவனத்திற்கான சிப் சப்ளை முதல் காலாண்டை விடவும் 2வது காலாண்டில் மோசமாக இருக்கும் எனக் கணித்துள்ளது டாடா மோட்டார்ஸ். உலகளவில் கார் சிப்-களுக்கான தட்டுப்பாடு அதிகமாக இருக்கும் காரணத்தால் இந்தச் சிப் தட்டுப்பாடு நிலவுகிறது.
டாடா மோட்டார்ஸ் பங்குகள்
இந்த அறிவிப்புகள் மூலம் டாடா மோட்டார்ஸ் பங்குகள் இன்றைய வர்த்தக முடிவில் 8.52 சதவீதம் வரை சரிந்தது 316.60 ரூபாயாகச் சரிந்தது குறிப்பிடத்தக்கது. இன்று ஒரு நாளில் மட்டும் டாடா மோட்டார்ஸ் பங்குகள் சுமார் 29.50 ரூபாய் சரிந்துள்ளது.