ஆட்டோமொபைல் துறையில் நிலவி வரும் மந்த நிலையானது எப்போது தான் மாறுமோ இறைவா? ஏற்கனவே பல ஆயிரம் பேர் தங்களது வேலையை இழந்துள்ளனர். இந்த நிலையில் இன்னும் எத்தனை ஆயிரம் பேர் வேலையை இழக்க நேரிடுமோ என்ற கவலை நீடித்து வருகிறது.
இதை நிரூபிக்கும் விதமாகவே தொடர்ந்து வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களது அறிக்கைகளை அறிவித்து வருகிறது.
குறிப்பாக கடந்த டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சலுகைகள் பல இருந்தும் வாகன விற்பனையானது வீழ்ச்சி கண்டுள்ளன.
டாடா மோட்டார்ஸ் டிசம்பர் மாதத்தில் மொத்த வாகன விற்பனையானது 12 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் டிசம்பர் மாதத்தில் வெறும் 44,254 வாகனங்களை மட்டுமே உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இந்த நிறுவனம் கடந்த ஆண்டு இதே மாதத்தில் 50,440 வாகனங்களை விற்பனை செய்திருந்ததாகவும் அறிவித்துள்ளது.
இதில் மொத்த பயணிகள் வாகன விற்பனையானது 12,785 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், இது இதற்கு முந்தைய ஆண்டு இதே மாதத்தில் 14,260 யூனிட்கள் விற்பனை செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இது கிட்டதட்ட 10 சதவிகிதம் வீழ்ச்சியாகும்.
இது குறித்து டாடா மோட்டார் தலைவர் மயாங்க் பரீக் கூறுகையில், பிஎஸ் 6 விதிகளுக்கு ஏற்ப மாறுவதற்கு, சில்லறை விற்பனையை குறைப்பதே எங்களின் கவனமாக இருந்தது. ஆக ஜனவரி முதல் நாங்கள் பிஎஸ் 6 விதிகளுக்கு ஏற்ப வாகனங்களை தயாரித்து அனுப்புவோம் என்றும் கூறியுள்ளார். மேலும் நாங்கள் வரவிருக்கும் மாதங்களில் இதை இன்னும் அதிகரிப்போம். ஆக முந்தைய ஆண்டினை விட கடந்த டிசம்பரில் விற்பனை வீழ்ச்சி கண்டுள்ளது. எனினும் வரவிருக்கும் மாதங்களில் இது அதிகரிக்கும் என்றும் மறைமுகமாக கூறியுள்ளார்.
இதே டாடா மோட்டார்ஸின் வணிக வாகன பிரிவின் தலைவர் கிரிஸ் வாக் இது குறித்து கூறுகையில், மொத்த வாகன விற்பனையை விட சில்லறை விற்பனையானது 13 சதவிகிதம் அதிகமாக இருந்தது. மேலும் நாங்கள் தற்போது பிஎஸ் 6 விதிகளுக்கு ஏற்ப நெருங்கி வருகிறோம். இதற்கான அறிகுறிகள் தற்போது அதிகரித்து வருகின்றன. ஏனெனில் இது பற்றிய விசாரனைகள் அதிகரித்து வருகின்றன என்றும் கிரிஸ் கூறியுள்ளார்.