2020 கொரோனா தொற்றுக்குப் பின்பும், சீன முதலீடுகளை இந்திய அரசு தடுத்த பின்பும் இந்திய சந்தையில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய முதலீட்டு நிறுவனங்கள் அதிகளவில் முதலீடு செய்து வருகிறது. குறிப்பாகக் கொரோனா தொற்றில் இருந்து வேகமாக மீண்டும் வரும் இந்திய சந்தைக்கு இந்த முதலீடு பெரிய உந்து சக்தியாக உள்ளது என்றால் மிகையில்லை.
இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமான டாடா குழுமத்தில் அமெரிக்காவின் முன்னணி பங்கு முதலீட்டு நிறுவனமான TPG சுமார் 7,500 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்யத் தயாராகியுள்ளது.
டாடா மோட்டார்ஸ்.
இந்தியாவில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி மற்றும் விற்பனையில் அனைத்து நிறுவனங்களையும் ஓரம் கட்டி வேகமாக வளர்ந்து வரும் டாடா மோட்டார்ஸ். இப்பரிவு வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும் எனத் திட்டம் தீட்டியுள்ளது. இதேபோல் மத்திய அரசும் இந்தியாவில் மாற்று எரிபொருள் வாகனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு
சமீபத்தில் மத்திய அரசு பிளெக்ஸ் இன்ஜின், ஹைட்ரஜன் செல், சிஎன்ஜி, எலக்ட்ரிக் கார் உற்பத்திக்கு அதிகளவில் ஆதரவு அளித்து வருகிறது. இந்திய ஆட்டோமொபைல் துறை பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களில் இருந்து மொத்தமாக மாறமுடியவில்லை என்றாலும் இந்த மாற்றம் உறுதியாகியுள்ளது.
மாற்று எரிபொருள் வாகனங்கள்
இதன் மூலம் தற்போது இந்தியாவில் மாற்று எரிபொருள் வாகனங்களைத் தயாரிக்கும் அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் பங்குச்சந்தையில் அதிகளவிலான முதலீட்டை பெற்று வருகிறது.
டாடா எலக்ட்ரிக் வாகன பிரிவு
இதன் வாயிலாக டாடா குழுமத்தின் முக்கிய வர்த்தகப் பிரிவான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகன பிரிவில் அமெரிக்காவின் முன்னனி பங்கு முதலீட்டு நிறுவனமான TPG சுமார் 1 பில்லியன் டாலர் அதாவது 7,500 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்யப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
டாடா மோட்டார்ஸ் உடைந்தது
இதற்கு ஏற்றார் போல் டாடா மோட்டார்ஸ் சில மாதங்களுக்கு முன்பு தனது பயணிகள் வாகன பிரிவையும், வர்த்தக வாகன பிரிவையும் தனித்தனி நிறுவனமாகப் பிரித்து டாடா மோட்டார்ஸ்-ன் கிளை நிறுவனங்களாக மறுசீரமைப்பு செய்யும் பணியில் இறங்கியது. இதற்கான பணியில் நடுவில் இருக்கும் வேளையில் இப்புதிய முதலீடு அறிவிப்பு முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் ஆக அமைந்துள்ளது.
பயணிகள் வாகன பிரிவு
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன நிறுவனத்தின் கீழ் தான் எலக்ட்ரிக் வாகன வர்த்தகப் பிரிவும் உள்ளது. தற்போது சந்தை மதிப்பில் எலக்ட்ரிக் வாகன பிரிவு மட்டுமே 8-9 பில்லியன் டாலர் அளவில் மதிப்பிடப்படும் நிலையில், TPG நிறுவனம் 1 -1.5 பில்லியன் டாலர் வரையில் முதலீடு செய்யத் தயாராக உள்ளது.
அரபு முதலீடுகள்
எலக்ட்ரிக் வாகன உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற ஓரே காரணத்திற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை இரண்டாக உடைத்து முதலீட்டை ஈர்த்து வருகிறது. TPG மட்டும் அல்லாமல் டாடா மோட்டார்ஸ் அபுதாபி முதலீட்டு அமைப்பு மற்றும் சவுதி PIF ஆகிய நிறுவனத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.