இந்திய ஆட்டோமொபைல் துறை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருவது மட்டும் அல்லாமல் பெரும் மாற்றத்தையும் பதிவு செய்து வருகிறது. ஆம், பெட்ரோல், டீசல் கார்களைத் தயாரித்து வந்த பல நிறுவனங்கள் தற்போது சிஎன்ஜி கார்களையும், எலக்ட்ரிக் கார்களையும் தயாரிக்க முடிவு செய்து, அதன் உற்பத்தியை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்யவும் களத்தில் இறங்கியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் 10,000 எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்த முதல் ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் தனது உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக முதலீட்டை திரட்ட துவங்கியுள்ளது.
டாடா குழுமம்
டாடா குழுமம் பொதுவாக வெளி சந்தையில் இருந்து முதலீட்டை ஈர்க்காது, ஆனால் டாடா மோட்டார்ஸ் வேகமாக வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காகவும், கடந்த 10 வருடத்தில் டாடா மோட்டார்ஸ் இழந்த வர்த்தகச் சந்தையை விரைவாகப் பிடிக்க வேண்டும் என்பதற்காகவும் வெளிநாட்டு முதலீடு நிறுவனங்களில் இருந்து முதலீட்டை திரட்ட முடிவு செய்துள்ளது.
நிர்வாக மறுசீரமைப்பு
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத்தில் சமீபத்தில் பல நிர்வாக மறுசீரமைப்புச் செய்யப்பட்ட நிலையில், தற்போது எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கும் பிரிவை தனி நிறுவனமாகப் பிரித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் EVCo
இந்நிலையில் டாடா மோட்டார்ஸ் லிமிடெட் எலக்ட்ரிக் வாகன கம்பெனி (TML EVCo)-யில் அமெரிக்கப் பங்கு முதலீட்டு நிறுவனமான TPG சுமார் 7,500 கோடி ரூபாய் அளலிலான முதலீட்டை பெற்றுள்ளது. இந்த எலக்ட்ரிக் வாகன பிரிவை மட்டும் சுமார் 9.1 பில்லியன் டாலர் மதிப்பிடப்பட்டு இந்த முதலீடு செய்யப்பட்டு உள்ளதால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மதிப்பு மொத்தமாகப் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.
டெஸ்லா Vs
இந்த முதலீட்டின் மூலம் இந்தியாவில் வர்த்தகத்தைத் துவங்க காத்திருக்கும் டெஸ்லாவுக்கு டாடா மோட்டார்ஸ் EV நேரடி போட்டியாக உருவெடுக்க உள்ளது. இந்த முதலீட்டின் மூலம் உற்பத்தி மட்டும் அல்லாமல் எலக்ட்ரிக் வாகன பிரிவின் வர்த்தகத்தையும் மேம்படுத்த உள்ளது டாடா.
15 சதவீத பங்குகள்
TML EVCo நிறுவனம் உருவாக்கப்பட்ட பின்பு TPG நிறுவனத்திற்கு இப்பிரிவில் இருந்து சுமார் 11 முதல் 15 சதவீத பங்குகளை அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது எனப் பங்குச்சந்தையில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
19 சதவீதம் உயர்வு
இதன் மூலம் டாடா மோட்டார்ஸ் பங்குகள் இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 18.19 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் மூலம் ஒரு பங்கு விலை 497.50 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும் மொத்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு இன்று 1.78 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
18 மாதம்
TPG அடுத்த 18 மாதத்தில் இந்த 7,500 கோடி ரூபாய் தொகையை முதலீடு செய்ய உள்ள நிலையில் TML EVCo நிறுவனம் 50 மில்லியன் A1 சிசிபிஎஸ்-ம் (compulsorily convertible preference shares), 25 மில்லியன் A2 சிசிபிஎஸ் பங்குகளும் அளிக்க உள்ளது.