பெரும் வரத்தகச் சரிவுக்குப் பின்பு இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான வளர்ந்திருக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது உற்பத்தி, வர்த்தகம், ஏற்றுமதியை அதிகரிக்கத் தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவை விட்டு வெளியேறுவதாக அறிவித்த போர்டு நிறுவனத்தின் முக்கிய உற்பத்தி தளமான குஜராத் மாநிலத்தின் சனந் தொழிற்சாலையைக் கைப்பற்றும் போட்டியில் டாடா மோட்டார்ஸ் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.
போர்டு நிறுவனம்
அமெரிக்காவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான போர்டு நிறுவனம் கடந்த வருடம் அதிகப்படியான நஷ்டத்தை அடைந்துள்ள காரணத்தால், அதிக வருமானம், லாபம் இல்லாத சந்தைகளில் இருந்து வெளியேற முடிவு செய்தது. இதன் வாயிலாகச் செப்டம்பர் 2021ல் இந்தியாவில் இருக்கும் சென்னை மற்றும் குஜராத் தொழிற்சாலையை மூடிவிட்டு வெளியேறுவதாக அறிவித்தது.
எம்ஜி மோட்டார்ஸ், ஓலா
இந்நிலையில் இந்தத் தொழிற்சாலைகளை யார் கைப்பற்ற போவது என்பதில் அதிகப்படியான போட்டி இருந்த நிலையில் எம்ஜி மோட்டார்ஸ், ஓலா ஆகிய நிறுவனங்களை ஓரம்கட்டிவிட்டு டாடா மோட்டார்ஸ் போட்டியில் முன்னேறியுள்ளது.
டாடா மோட்டார்ஸ்
மேலும் டாடா மோட்டார்ஸ் மற்றும் ஃபோர்டு இந்தியா ஆகியவை குஜராத் மாநிலத்தின் அரசு நிர்வாகத்தை அணுகி தொழிற்சாலையை விற்பனை செய்த பிறகு ஊக்குவிப்பு கட்டமைப்புகள் குறித்து ஆலோசனை செய்த சந்தித்துள்ளது. இதன் மூலம் டாடா மோட்டார்ஸ் தான் போர்டு குஜராத் தொழிற்சாலையைக் கைப்பற்றப் போகிறது என்பது உறுதியாகியுள்ளது.
600,000 கார்கள் உற்பத்தி
டாடா மோட்டார்ஸ் தற்போது நாட்டில் உள்ள தனது சொந்த தொழிற்சாலைகளில் 85 சதவீத திறனில் இயங்கி வருகிறது. இந்நிலையில் 2023ஆம் நிதியாண்டுக்குள் இந்தியாவில் மட்டும் 5,00,000 முதல் 600,000 கார்களை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது.
ஃபோர்டு தொழிற்சாலை
இந்த மிகப்பெரிய இலக்கை அடைய டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு ஃபோர்டு தொழிற்சாலையைக் கையகப்படுத்துவது மூலம் உற்பத்தியை அதிகரிக்க மிகப்பெரிய அளவில் உதவும். இந்த விற்பனையில் குஜராத்தில் இருக்கும் இன்ஜின் தொழிற்சாலை பிரிவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை
இந்நிலையில் போர்டு சென்னையில் இருக்கும் தொழிற்சாலையில் தனது எலக்ட்ரிக் வாகன கனவுகளை அடைய பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் டாடா மோட்டார்ஸ் சென்னை தொழிற்சாலையைத் தான் கைப்பற்ற திட்டமிட்டது.
50 பில்லியன் டாலர்
ஆனால் போர்டு சமீபத்தில் 50 பில்லியன் டாலர் முதலீட்டில் தனது எலக்ட்ரிக் வாகன உற்பத்தி திட்டத்தைச் செயல்படுத்த சென்னை தொழிற்சாலையைப் பயன்படுத்த முடிவு செய்த நிலையில் டாடா மோட்டார்ஸ் குஜராத்தில் சனந் தொழிற்சாலையைக் கைப்பற்ற உள்ளது.