சமீபத்திய காலமாக ஆட்டோமொபைல் துறையில் மின்சார வாகன புரட்சியானது வேகமெடுத்துள்ளது எனலாம்.
குறிப்பாக இந்திய அரசு மின்சார வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றது. இதன் மூலம் வாகன நிறுவனங்கள் உற்பத்தியினை அதிகரிக்க ஆர்வம் காட்டலாம் என அரசு நம்புகின்றது.
மேலும் மின்சார வாகனங்களை நோக்கிய பயணம் என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகவும் மாறியுள்ளது. மின்சார வாகனங்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் இந்தியாவினை பொறுத்தவரையில் அதிகம் இல்லை. மாறாக தற்போது தான் அதிகரிக்க தொடங்கியுள்ளது. எனினும் மின்சார வாகனங்கள் தான் எதிர்காலத்தில் மாற்று என ஒவ்வொரு நிறுவனமும் உணரத் தொடங்கியுள்ளன.
டாடாவின் சூப்பர் திட்டம்
அதன் வெளிப்பாடு தான் சமீபத்திய காலமாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள், தங்களது வாகன சந்தையை தக்க வைத்துக் கொள்ள படிப்படியாக மின்சார வாகனங்களிலும் முதலீடுகளை செய்து வருகின்றன.
அந்த வகையில் நாட்டின் முன்னணி வாகன நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனம், மின்சார வாகன உற்பத்திக்காக அடுத்த 5 ஆண்டுகளில் படிப்படியாக 15,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
புதிய வாகனங்கள் திட்டம்
மின்சார வாகன சந்தையானது வளர்ந்து வரும் நிலையில், இந்த பிரிவில் 10 புதிய வாகனங்களை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸின் பயணிகள் வாகன வணிகத்தின் தலைவர் ஷைலேஷ் சந்திரா கூறியுள்ளார். இந்த 10 வாகனங்களும் பல்வேறு வித விருப்பங்களுடன் வெளியாகவுள்ளன என்று சந்திரா கூறியுள்ளார்.
முதலீடு
முன்னதாக தனியார் முதலீட்டு நிறுவனமான TPG-யின் மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மின்சார வாகன உற்பத்திகாக 1 பில்லியன் டாலர் முதலீட்டினை திரட்டியது. இதற்கிடையில் டாடா மோட்டார்ஸ்-ன் வாகன பிரிவின் மதிப்பு 9.1 பில்லியன் டாலர் வரையில் மதிப்பிடப்பட்ட நிலையில், அடுத்த 4 வருடத்தில் புதிய கார்களின் அறிமுகத்தின் மூலம் 20% விற்பனையைக் கிரீன் எனர்ஜி வாகனங்கள் வாயிலாகப் பெற இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக ஏற்கனவே ஒரு அறிக்கையில் சந்திரா கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.
22,000 வாகனங்கள் விற்பனை
மின்சார வாகன சந்தையை விரிவுபடுத்த விரைவில் சார்ஜிங் வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. நிறுவனம் அதனை மேம்படுத்துவதற்காகவும் உறுதி பூண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் கிட்டதட்ட 400 சார்ஜிங் நிலையங்கள் உள்ளதாகவும், அதனை இன்னும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும் சந்திரா தெரிவித்துள்ளார்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 22,000 மின்சார வாகனங்களை இதுவரையில் விற்பனை செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் பங்கு விலை
டாடா மோட்டார்ஸ் பங்கு விலையானது கடந்த அமர்வில் சற்று அதிகரித்து, என்.எஸ்.இ-யில் 413.65 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
இதே பிஎஸ்இ-ல் சற்று அதிகரித்து 413.65 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்ச விலை 536.50 ரூபாயாகும். 52 வார குறைந்தபட்ச விலை 268.50 ரூபாயாகும்.


Click it and Unblock the Notifications