மத்திய அரசின் வாகன அழிப்பு திட்டம் ஏப்ரல் 1, 2022 முதல் அமலுக்கு வரவுள்ளது. அரசின் இந்த திட்டம் பழைய வாகனங்கள் மற்றும் குறைபாடுள்ள வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கவும், மாசுபாட்டை குறைக்கவும் இந்த வாகன அழிப்பு திட்டம் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல ஆண்டுகளாகவே இந்திய ஆட்டோமொபைல் துறையினரின் முக்கிய கோரிக்கையாக இருந்து வந்த வாகன அழிப்பு திட்டம், கடந்த பட்ஜெட் 2021ல் அறிவிக்கப்பட்டது. இது ஆட்டோமொபைல் துறையினரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதன் படி, தனி நபர் வாகனங்களுக்கு 20 வருடங்கள் கழித்தும், வர்த்தக வாகனங்கள் 15 ஆண்டுகள் கழித்தும் ஸ்கிராப்பிங் செய்யும் திட்டம் கொண்டு வரப்படலாம். இது உண்மையில் அமலுக்கு வரும்போது, வாகனத்துறைக்கு பெரிய ஊக்கத்தினை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பழைய வாகனங்களை அழிக்கும் நிறுவனம்
இதற்கிடையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹவுரா, கர்னல், ஹைதராபாத் மற்றும் கிரேட்டர் உள்ளிட்ட நகரங்களில், வாகன ஸ்கிராப்யார்டுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இது வளர்ந்து வரும் வணிக வாய்ப்பை எதிர்பார்ப்பதாகவும் இதனையறிந்த நபர்கள் கூறியதாக லைவ் மிண்ட் செய்திகள் கூறுகின்றன. தற்போது தமிழக்கத்தில் இந்த யார்டு இல்லை என்றாலும், வருங்காலத்தில் விரிவுபடுத்தலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
விரிவாக்கம் செய்யலாம்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த நான்கு யூனிட்டுகளுடன் தொடங்கினாலும், ஸ்கிராப்பிங் வணிகத்தினை மேற்கொண்டு வணிகத்தினை விரிபடுத்தக்கூடும். மேலும் இதன் மூலம் டாடா மோட்டார்ஸ் டீலர்களுக்கு புதிய வருவாயினை உருவாக்கலாம் எனவும் கூறப்படுகிறது. வரவிருக்கும் மாதங்களில் இந்த நிறுவனம் பொதுத்துறை நிறுவனங்களுடன் இதுகுறித்து ஒத்துழைக்க கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.. ஆனால் ஆரம்பத்தில் அவர்கள் சொந்தமாகவும் செல்லலாம்.
வாகன விற்பனையாளர்களுக்கு நஷ்டம்
கடந்த சில ஆண்டுகளில் கணிசமான விற்பனை சரிவு காரணமாக, விற்பனையாளர்கள் பலருக்கும் நஷ்டம் இழப்பு ஏற்பட்டுள்ளது. வாகன துறையில் விற்பனையாளர்களின் நிதி ஆரோக்கியம் என்பது ஒரு முக்கியமான காரணியாகும். ஆக இந்த முதலீடு நீண்டகாலத்திற்கு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதாவது விற்பனையாளர்களுக்கும் உதவிகரமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
பழைய வாகனங்களுக்கு வரி
வாகன அழிப்பு திட்டம் மட்டும் அல்லாது, எட்டு வருடங்கள் பழமையான போக்குவரத்து வாகனங்களின் தகுதி சான்றிதழ் புதுப்பிக்கப்படுகையில், சாலை வரியில் 10 - 25%, பசுமை வரியாகப் விதிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது. இதே தனியார் வாகனங்கள் 15 வருடங்களுக்குப் பிறகு பதிவு சான்றிதழை புதுப்பிக்கும்போது இந்த பசுமை வரி விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
வரி அதிகரிக்கலாம்
அதோடு 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களின் பதிவை ரத்து செய்வதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு குறிப்பாக அதிகம் மாசடைந்த நகரங்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு அதிகப்படியான பசுமை வரி (சாலை வரியில் 50%) விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆக இதோடு இந்த ஸ்கிராப்பேஜ் பாலிசியும், துவண்டு போன வாகனத் துறையை மீட்டெடுக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸூக்கு பயன்
ஆக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வரவிருக்கும் இந்த திட்டத்திற்கு, இப்போதே தயாராகி வருகிறது எனலாம். எனினும் இது குறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பினை கொடுக்கவில்லை. எப்படியிருப்பினும் வாகன அழிப்பு திட்டம் என்பது வாகன துறைக்கு புத்துயிர் கொடுக்கலாம். குறிப்பாக வணிக வாகன நிறுவனங்கள் அதிக பயனடையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிகப்பெரிய வணிக வாகன நிறுவனம் என்பதால், மிகப்பெரிய அளவில் பயனடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.