மும்பை: நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ், கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் பெருத்த அடி வாங்கியுள்ளது எனலாம்.
ஏனெனில் ஜூன் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர இழப்பு 15,876 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இது கடந்த ஆண்டு கண்ட நஷ்டத்தினை விட நான்கு மடங்கு அதிகமாகும். இதற்கு கொரோனா வைரஸ் பரவல் தான் காரணம் எனவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
நிகர நஷ்டம்
நாட்டின் மிகப்பெரிய வணிக வாகன நிறுவனமான இது, கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 3,703 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டதாக அறிவித்துள்ளது. நாட்டில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், குறைந்த வாகன உற்பத்தி மற்றும் மந்தமான விற்பனையின் பின்னணியில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய் 48% வீழ்ச்சி கண்டு, 31,983 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
ஜாகுவார் லேண்ட் ரோவரின் வருவாய்
டாடா மோட்டார்ஸின் துணை நிறுவனமான பிரிட்டீஸ் சொகுசு கார் நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவரின் (ஜேஎல்ஆர்) வருவாய், கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 40% குறைந்து, 27,374 கோடி ரூபாயாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதே ஜூன் காலாண்டில் 3,500 கோடி ரூபாய் நஷ்டத்தினை பதிவு செய்துள்ளது. இதே முந்தைய ஆண்டில் 2,391 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
விற்பனை பலத்த சரிவு
எனினும் ஜூலை மாதத்தில் ஜே எல் ஆர் 74,067 யூனிட்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதே ஜூன் காலாண்டில் 42% விற்பனை குறைந்துதாகவும் அறிவித்திருந்தது. கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஐரோப்பாவில் தொற்று நோய் காரணமாக, அதன் உற்பத்தி ஆலைகள் மற்றும் பெரும்பாலான சில்லறை விற்பனையகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.
சீனாவில் விற்பனை மீட்சி
ஆனால் அதன் பிறகு தற்போது சிறுக சிறுக விற்பனை சற்று அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதன் மிகப்பெரிய சந்தையான சீனாவில் தற்போது வலுவான மீட்சியைக் கண்டுள்ளது. முதல் காலாண்டில் விற்பனை 2.5% மட்டுமே குறைந்துள்ளது. சீனாவின் லாக்டவுன் மற்ற நாடுகளை விட முன்னதாக சற்று நீக்கப்பட்ட நிலையில், இது சற்றே கைகொடுத்துள்ளது.
வருவாய் இம்புட்டு தான்
இந்த நிறுவனத்தின் முழுமையான வருவாய் வெறும் 2,687 கோடி ரூபாயாக மட்டுமே இருந்ததுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 80% வீழ்ச்சியடைந்துள்ளது. இதே உள்நாட்டு விற்பனையானது இந்த காலகட்டத்தில் 82% சரிந்துள்ளது. இது வெறும் 23,845 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்ததாக தெரிவித்துள்ளது.
உற்பத்தி நிறுத்தம்
கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்தே இந்த நிறுவனத்தின் வாகன உற்பத்தியானது, முடங்கியது. தற்போதும் கூட சில ரெட் அலர்ட் பகுதிகளில் முடங்கியுள்ளது. எனினும் சில பகுதிகள் மே இறுதியிலும், ஜூலை மாதத்திலும் உற்பத்தியினை தொடங்கியுள்ளன. எப்படி இருப்பினும் இரண்டு மாத உற்பத்தி நிறுத்தம் என்பது இந்த நிறுவனத்திற்கு பெருத்த நஷ்டமே.