பிரிட்டீஸ் சொகுசு கார் பிராண்டான ஜாகுவார் லேண்ட் ரோவரின் உரிமையாளரான டாடா மோட்டார்ஸ் நிறுவனம், செப்டம்பர் 30வுடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் 314.5 கோடி ரூபாயாக இழப்பினை கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
உலகெங்கிலும் பரவி வரும் கொரோனா பரவலின் காரணமாக இந்த நஷ்டத்தினை கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக தேவை வெகுவாக குறைந்துள்ளது.
முந்தைய நிதியாண்டில் இதே செப்டம்பர் காலாண்டில் 216.56 கோடி ரூபாயாக நஷ்டம் கண்டிருந்தது. இதுவே நடப்பு நிதியாண்டின் ஜூன் காலாண்டிலேயே இந்த நிறுவனம் நிகர நஷ்டமாக 8,437.99 கோடி ரூபாயாக இழப்பினை சந்தித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுவே ஒருங்கினைந்த வருவாய் இரண்டாவது காலாண்டில் 18.2 சதவீதம் குறைந்து, 53,530 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 65,431.95 கோடி ரூபாயாக இருந்தது. வணிக வாகனம் மற்றும் கே எல் ஆர் வாகன விற்பனை வீழ்ச்சியால், இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த காலாண்டில் கூட்டு நிறுவனங்களின் நிகரலாபம் 36 கோடி ரூபாயாக இருந்தது. முந்தைய ஆண்டில் இது 363 கோடி ரூபாயாக இருந்தது மதிப்பிடத்தக்கது. மதிப்பாய்வு செய்யப்பட்ட இந்த காலாண்டில் மற்றா வருமானம் 189 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டில் 199 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
டாடா மோட்டார்ஸின் பிரிட்டீஸ் துணை நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் செப்டம்பர் காலாண்டில் நேர்மறையான பணப்புழக்கத்திற்கு திரும்பியது. முதல் காலாண்டில் கொரோனாவின் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டாவது காலாண்டில் சற்று மீண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது வளர்ச்சி 52.2 சதவீதம் அதிகரித்துள்ளது. எனினும் கடந்த ஆண்டினை விட 28.5 சதவீதம் குறைந்துள்ளது. இது இரண்டாவது காலாண்டில் வரிக்கு முந்தைய லாபம் 65 மில்லியன் பவுண்டுகளாக லாபத்தினை ஈட்டியுள்ளது. இதே முந்தைய ஆண்டில் 413 மில்லியன் பவுண்டுகளாக இருந்தது.
இந்த நிலையில் டாடா மோட்டார்ஸின் பங்கு விலையானது 4 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து, 141.15 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.