நாமக்கல் மாவட்டத்தின் சிறிய டவுன் பகுதியான மோகனூரில் இருந்து பிறந்த இன்று இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமான டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ்-ன் சேர்மன் ஆக இருக்கும் என்.சந்திரசேகரனின் வளர்ச்சி அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது.
டாடா சன்ஸ் தலைவரான பின்பு சந்திரசேகரன் பெரும் பகுதி நேரத்தை மும்பையிலேயே கழித்து வரும் நிலையில் சொந்தமாக ஒரு வீட்டை மும்பையில் வாங்கியுள்ளார்.
ஆடம்பர அப்பார்ட்மென்ட்
தென் மும்பை பகுதியில் ஜஸ்லோக் மருத்துவமனை அருகில் இருக்கும் 25 மாடி ஆடம்பர அப்பார்ட்மென்ட்டில் தான் கடந்த 5 வருடமாக டாடா சன்ஸ் சேர்மன் என்.சந்திரசேகரன் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த அப்பார்ட்மென்ட்-யே தற்போது வாங்கியுள்ளார்.
6000 சதுரடி
28 மாடி கொண்ட அப்பார்ட்மென்ட்-ல் 11 மற்றும் 12வது மாடியை சேர்த்து டியூப்லெக்ஸ் வீடாக வாங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வீட்டின் மொத்த பரப்பளவு 6000 சதுரடியாக உள்ளது, மேலும் இந்த அப்பார்ட்மென்ட்-ன் பெயர் 33 சௌத் ஆகும்.
98 கோடி ரூபாய்
2017 பிப்ரவரி 21 முதல் மாதம் 20 லட்சம் ரூபாய் மாத வாடகைக்கு சந்திரசேகரன் இந்த வீட்டில் தங்கியிருக்கும் வேளையில், தற்போது இந்த வீட்டையே சுமார் 98 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.
சந்திரசேகரனின் மனைவி, மகன்
3 நாட்களுக்கு முன்பு இந்த 6000 சதுரடி வீட்டை சந்திரசேகரன், அவரது மனைவி லலிதா, மகன் பிரணவ் ஆகியோரின் பேரில் பத்திர பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வீட்டை சமீர் போஜ்வானியின் கட்டுப்பாட்டில் உள்ள விற்பனையாளர் ஜிவேஷ் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் விற்பனை செய்துள்ளது.
ஒரு சதுரடி 1.6 லட்சம்
2008ல் சமீர் போஜ்வானி மற்றும் வினோத் மிட்டல் ஆகியோரால் கட்டப்பட்ட இந்த அப்பார்ட்மென்ட்-ஐ தற்போது ஒரு சதுரடி 1.6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2 மாடி வீட்டை சந்திரசேகரன் சுமார் 98 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.
5 ஆண்டு
டாடா குழுமம் பிப்ரவரி 20, 2027 வரையில் டாடா சன்ஸ் சேர்மனாக அறிவித்து பதவி நீட்டிப்பு செய்துள்ள நிலையில் மாத வாடகைக்கு இருந்த வீட்டை தற்போது சந்திரசேகரன் வாங்கியுள்ளார். சந்திரசேகரன் 2021 நிதியாண்டில் சுமார் ரூ. 91 கோடி வருடாந்திர சம்பளத்துடன் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் கார்ப்பரேட் தலைவராக உள்ளார்.
முகேஷ் அம்பானி
இந்த 33 சௌத் அப்பார்ட்மென்ட் அருகில் தான் முமேஷ் அம்பானியின் ஆடம்பர அடுக்குமாடி கட்டிடமான அன்டிலியா உள்ளது. இதன் மூலம் சந்திரசேகரனும் முகேஷ் அம்பானியும் பக்கத்து வீட்டுக்காரர்களாக மாறியுள்ளனர்.