இந்தியாவில் புதிய கார் அல்லது பைக் வாங்க திட்டமிடுவோர் அனைவரும் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாமா வேண்டாமா என்பதை யோசித்த பின்பு தான் முடிவை எடுக்கிறார்கள். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் எலக்ட்ரிக் கார் மற்றும் பைக் பிரபலம் அடைந்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ பிடித்து எரிந்து எலக்ட்ரிக் பைக் வைத்துள்ளவர்களைக் கதிகலங்க வைத்த நிலையில், தற்போது எலக்ட்ரிக் கார் தீ பிடித்து எரிந்துள்ளது.
எலக்ட்ரிக் கார் தீ
இந்தியாவில் முதல் முறையாக ஒரு எலக்ட்ரிக் கார் தீ பிடித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு எலக்ட்ரிக் பைக் தீ பிடித்து எரிந்த சம்பவம் மக்களைப் பயமுறுத்திய நிலையில் மத்திய அரசு உடனடியாக ஆய்வு செய்து வாகனங்களின் பேட்டரியின் தர குறைபாடு தான் காரணம் என்று அறிவித்தது.
மும்பை தீ விபத்து
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில் முதல் முறையாக எலக்ட்ரிக் கார் தீ பிடித்து எரிந்துள்ளது. அதிலும் முக்கியமாக மக்கள் மத்தியில் அதிகம் மதிப்பைக் கொண்ட டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் Nexon EV கார் மும்பையில் தீப்பிடித்து எரிந்துள்ளது.
வீடியோ
இந்தச் செய்தியும் வீடியோவும் தற்போது கட்டுத்தீ போலப் பரவி வரும் நிலையில், டாடா மோட்டார்ஸ் நிர்வாகம் உடனடியாகக் களத்தில் இறங்கி இந்தத் தீ விபத்து குறித்து விசாரணை நடத்த முடிவு செய்து, அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
Tata Nexon தீ
புதன்கிழமை பிற்பகுதியில் மும்பையில் உள்ள வசாய் வெஸ்டில் (பஞ்சவதி ஹோட்டலுக்கு அருகில்) டாடா நெக்சான் கார் தீ பிடித்துள்ளது, மேலும் Tata Nexon தீயில் மூழ்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது.
விரிவான விசாரணை
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இதுவரை டாடா எலக்ட்ரிக் கார்கள் தீ பிடிக்காத நிலையில், இந்த ஒரு சம்பவத்தின் உண்மைகளை அறிய தற்போது விரிவான விசாரணை நடத்தப்படுகிறது" என்று தெரிவித்துள்ளது. இந்த விசாரணைக்குப் பின்பு முழுமையான விளக்கம் அளிக்கப்படும், இதேபோல் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம்
Tata Nexon EV இந்தியாவில் அதிக விற்பனையாகும் மின்சாரக் கார் ஆகும், மேலும் இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் குறைந்தது 2,500-3,000 கார்கள் விற்பனை செய்யப்படுகிற முன்னணி மற்றும் முக்கியப் பிராண்டாக உள்ளது.
டாடா மோட்டார்ஸ் ஆதிக்கம்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இதுவரை 30,000 Nexon EVகளை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் கார் பிராண்டுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது டாடா மோட்டார்ஸ், இதுமட்டும் அல்லாமல் பிற முன்னணி நிறுவனங்கள் E EV பிரிவில் டாடா மோட்டார்ஸ் உடன் தான் போட்டிப்போட்டு வருகிறது.
ஸ்லோ சார்ஜர்
Tata Nexon EV காரின் தீ விபத்தின் வீடியோ படி, காரின் உரிமையாளர் தனது அலுவலகத்தில் நிறுவப்பட்ட சாதாரண ஸ்லோ சார்ஜர் மூலம் தனது Nexon EVயை சார்ஜ் செய்தார். அவர் தனது வீட்டை நோக்கி 5 கிமீ தூரம் சென்ற பிறகு, காரில் இருந்து சில வித்தியாசமான சத்தங்கள் கேட்டு உள்ளது.
தீ விபத்து
அடுத்தச் சில நொடிகளில் Tata Nexon EV காரின் டாஷ்போர்டில் எச்சரிக்கை ஃப்ளாஷ்களைப் பார்த்ததாகவும், உடனே வாகனத்தை நிறுத்தி காரில் இருந்து இறங்குமாறு எச்சரித்ததாகக் காரின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். பின்னர், எரியும் Nexon EV காரை தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் தெளித்துக் கட்டுக்குள் கொண்டு வந்து உள்ளனர்.
@TataMotors @TataMotors_Cars @TeamBHPforum @NexonEVOwnerClb A nexon ev caught fire in vasai near mumbai. pic.twitter.com/CEQFQosxDg
— Ketan (@K10711988) June 22, 2022
— Ketan (@K10711988) June 22, 2022