இந்தியாவின் மிகப்பெரிய விமானச் சேவை நிறுவனமாக மாறி வரும் ஏர் இந்தியா சமீபத்தில் அதன் தாய் நிறுவனமான டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து விமானச் சேவை நிறுவனங்களை ஒன்றாக இணைக்கும் முயற்சியில் மாபெரும் வெற்றியை அடைந்தது மட்டும் அல்லாமல் அடுத்த ஒரு வருடத்திற்கு இந்த இணைப்பை முடிக்கத் திட்டமிட்டு உள்ளது.
இந்த நிலையில் இந்தியாவுக்குள் அதிகப்படியான இடங்களும், வெளிநாடுகளுக்கும் அதிகப்படியான இடங்களுக்கும் விமானப் போக்குவரத்து சேவை அளிக்கும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
இதேபோல் மலிவு விலை விமானச் சேவை முதல் எக்ஸ்கியூட்டிவ் விமானச் சேவை அளிக்கும் நிறுவனமாகவும் உள்ளது. இந்த நிலையில் டாடா குழுமம் ஏர் இந்தியாவை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல முக்கியமான திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
டாடா குழுமம்
டாடா குழுமம் தற்போது எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், ரீடைல் வர்த்தகத்தின் விரிவாக்கத்தில் எந்த அளவிற்கு முக்கியத்துவம் அளிக்கிறதோ, அதைவிட அதிகமான முக்கியத்துவத்தை ஏர் இந்தியா மீது வைத்துள்ளது.
என் சந்திரசேகரன்
மத்திய அரசிடம் பெரும் தொகை கொடுத்து வாங்கிய ஏர் இந்தியாவை விரைவில் லாபகரமான நிறுவனமாக மாற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார் டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன்.
ஏர் இந்தியா
இந்த நிலையில் டாடா குழுமத்தின் ஏர் இந்தியா சுமார் 500 விமானங்களை ஆர்டர் செய்யும் திட்டத்தை நெருங்கியுள்ளது. உலகின் முன்னணி விமானத் தயாரிப்பு நிறுவனங்களான ஏர்பஸ் மற்றும் போயிங் ஆகியவற்றிடம் சுமார் 500 விமானங்களை ஆர்டர் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
500 விமானங்கள்
இதில் 400 நேரோ பாடி விமானங்களையும், 100 வைட் பாடி விமானங்களையும் வாங்கத் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 500 விமானங்களின் ஆர்டர் குறித்து டாடா, ஏர்பஸ், போயிங் ஆகிய நிறுவனங்கள் எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
100 பில்லியன் டாலர்
500 விமானங்களை வாங்க வேண்டும் என்றால் குறைந்த 100 பில்லியன் டாலராவது செலவு செய்ய வேண்டும், பல்க் ஆர்டர் என்பதால் ஏர்பஸ் மற்றும் போயிங் அதிகப்படியான டிஸ்கவுன்ட் கொடுத்த வாய்ப்பு உள்ளது. இதனால் சில பில்லியன் டாலர் விலை குறைய வாய்ப்பு உள்ளது.
இணைப்பு
சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் டாடா குழுமம் வெற்றி அடைந்த நிலையில் டாடா குழுமம் தற்போது ஏர் இந்தியா என்னும் ஒரு நிறுவனத்தின் கீழ் விஸ்தாரா, ஏர் ஏசியா இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய 3 நிறுவனங்களை இணைத்து நாட்டின் 2வது பெரிய விமானச் சேவை நிறுவனமாக உயர்த்த உள்ளது.
217 விமானங்கள்
இந்த இணைப்பிற்குப் பின்பு விஸ்தாரா, ஏர் ஏசியா இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய பிராண்டுகளின் பெயரை நீக்கப்படும். மேலும் தற்போதைய நிலவரப்படி ஏர் இந்தியாவில் 111 விமானங்களும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பிரிவில் 24 விமானங்களும், விஸ்தாரா நிறுவனத்தில் 54 விமானங்களும், ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தில் 28 விமானங்கள் என மொத்தம் 217 விமானங்கள் கொண்டு ஏர் இந்தியா இயங்க உள்ளது.
விமானச் சேவை
ஏர் இந்தியா கட்டுப்பாட்டில் இருக்கும் 217 விமானங்கள் மற்றும் புதிதாக ஆர்டர் செய்யும் 500 விமானங்கள் மூலம் இதன் மூலம் ஏர் இந்தியா மலிவு விலை விமானச் சேவை முதல் வெளிநாட்டு விமானச் சேவை வரையில் ஏர் இந்தியா பிராண்ட் பெயரில் கொடுக்க முடியும். இது மட்டும் அல்லாமல் இந்திய விமானச் சேவையில் பெரும் தாக்கத்தை இந்த ஆர்டர் மூலம் செய்ய முடியும்.