கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் இருந்த ரிலையன்ஸ் உட்படப் பல முன்னணி வர்த்தகச் சாம்ராஜ்ஜியங்கள் தற்போது டிஜிட்டல் மற்றும் ஈகாமர்ஸ் துறையில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தைத் தொடர்ந்து டாடா குழுமம் இத்துறையில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்து அனைத்து ரீடைல் வர்த்தகத்தையும் ஆன்லைன் வர்த்தகச் சந்தைக்குக் கொண்டு வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் இருக்கும் சிறு மற்றும் குறு வர்த்தகர்களை டிஜிட்டல் தளத்திற்குக் கொண்டு வருவதற்காகப் புதிய நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.
டாடா சன்ஸ்-ன் புதிய நிறுவனம்
டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் இந்தியாவின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் SME நிறுவனங்களுக்காகப் புதிய மாக்கெட்பிளேஸ்-ஐ உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
சீனாவின் அலிபாபா
சீனாவின் முன்னணி ஈகாமர்ஸ் மற்றும் டெக் நிறுவனமாக இருக்கும் அலிபாபா சீனாவில் இருக்கும் SME நிறுவனங்களுக்குப் பல்வேறு டிஜிட்டல் சேவைகளை அளித்து ஆன்லைன் வர்த்தகத் தளத்திற்குக் கொண்டு வந்து மிகப்பெரிய வர்த்தகப் புரட்சியைச் சீனாவில் செய்தது.
டாடா பிஸ்னஸ் ஹப் - புதிய நிறுவனம்
இதேபோன்ற முயற்சியைத் தான் தற்போது டாடா சன்ஸ் எடுத்துள்ளது. இப்புதிய சேவை மற்றும் வர்த்தகத்திற்காக டாடா பிஸ்னஸ் ஹப் என்ற நிறுவனத்தை உருவாக்கியுள்ளது, இப்புதிய நிறுவனத்திற்கு டிசிஎஸ் குழுமத்தின் மூத்த அதிகாரியான வெங்குசாமி ராமசாமி தலைமை விகிக்க உள்ளார்.
SME நிறுவனங்கள்
டாடா பிஸ்னஸ் ஹப் நிறுவனம் சிறு மற்றும் நடுத்தரப் பிரிவில் இருக்கும் நிறுவனங்களுக்குக் கிளவுட் தொழில்நுட்பத்தில் இயங்கும் ஐடி சேவைகளை அளித்து இப்பிரிவு வர்த்தகர்களை ஆன்லைன் சந்தைக்குள் கொண்டு வர உதவி செய்கிறது. இப்படி இதில் என்ன சேவைகள் கிடைக்கும்.
nexarc தளத்துடன் இணைப்பு
பொதுவாக SME நிறுவனங்கள் வளர்ச்சி அடைய முடியாமல் தவிக்க மிக முக்கியக் காரணமாக விளங்குவது மார்க்கெட்டிங் மற்றும் வாடிக்கையாளர் சேவையில் சரியாக இல்லாமல் இருப்பது தான். இதை டிசிஎஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள பல டிஜிட்டல் டூல் அடங்கிய nexarc தளத்துடன் இணைந்து அளிக்கிறது.
நிதி தேவைகள்
இதுமட்டும் அல்லாமல் nexarc தளத்தின் வாயிலாக SME நிறுவனங்களுக்குத் தேவையான நிதி தேவைகளையும் வங்கி மற்றும் நிதியியல் நிறுவனங்களுடன் இணைந்து பெற்றுத் தரும் சேவையும் டாடா அளிக்க உள்ளது. SME நிறுவனங்கள் வங்கிகளில் கடன் பெற முடியாமல் தவித்து வரும் நிலையில் டாடா nexarc மூலம் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படலாம்.
இந்தியாமார்ட் உடன் பேச்சுவார்த்தை
டாடா பிஸ்னஸ் ஹப் நிறுவனத்தின் சேவையைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய இந்தியாமார்ட் நிறுவனத்தைக் கைப்பற்றப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது ஆனால் இது தோல்வியில் முடிந்த நிலையில், தற்போது SME நிறுவனங்கள் சுயமாக இணைக்கும் பணிகளைச் செய்து வருகிறது டாடா.
200 பில்லியன் டாலர்
இந்தியாவில் டிஜிட்டல் சேவை மற்றும் வர்த்தகம் சேவையை வேகமாக வளர்ந்து வரும் நிலையில் 2027ஆம் ஆண்டுக்குள் இத்துறை சுமார் 200 பில்லியன் டாலர் மதிப்பீட்டை அடையும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.
டாடா, ரிலையன்ஸ் நிறுவனங்கள்
சில வருடங்களுக்கு முன்பு ஸ்டார்ட்அப் நிறுவனங்களும், புதிய தொழில் முனைவோர்கள் மட்டுமே இத்துறையில் இருந்த நிலையில் தற்போது நிலை முற்றிலும் மாறியுள்ளது. தற்போது ரிலையன்ஸ், டாடா உட்படப் பல முன்னணி நிறுவனங்கள் டிஜிட்டல் தளத்திற்குள் நுழைந்துள்ளது.