இந்தியாவில் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் தற்போது சந்திரசேகரன் தலைமையில் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில் டாடா குழுமம் அடுத்தகட்டத்திற்குச் செல்ல வேண்டும் என்பதற்காகவும், தற்போது செய்யும் வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதில் குறியாக உள்ளது.
இதற்காக டாடா குழுமம் வரலாறு காணாத வகையில் அதிகளவிலான நிறுவனத்தைக் கைப்பற்றுவதோடு, கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்திலும் புதிதாக முதலீட்டைத் திரட்டி வருகிறது.
டாடா தற்போது எந்தெந்த திட்டத்திற்காக முதலீட்டை திரட்டி வருகிறது..?!
டாடா சன்ஸ்
டாடா சன்ஸ் நிறுவனம் தற்போது கடனாகச் சுமார் 40,000 கோடி ரூபாய் அளவிலான தொகையைத் திரட்டும் திட்டத்தைப் பங்குதாரர்கள் முன்னிலையில் வைத்துள்ளது. இந்தக் கடன் பத்திரங்களாகவும், NCB வெளியிட்டு அதன் மூலம் முதலீட்டைத் திரட்ட முடிவு செய்துள்ளது. எதற்காக இவ்வளவு கடன்..?
40,000 கோடி ரூபாய் கடன்
கடந்த ஒரு வருடத்தில் டாடா சன்ஸ் நிறுவனம் பல நிறுவனங்களைக் கைப்பற்றியுள்ளது, இதன் விரிவாக்க பணிகளுக்கும், புதிதாகக் கைப்பற்ற உள்ள நிறுவனங்களுக்குத் தேவையான நிதியைத் திரட்ட முடிவு செய்து முதற்கட்டமாக 40,000 கோடி ரூபாய் கடனை பெறுகிறது.
தேஜஸ் நெட்வொர்க்ஸ்
சமீபத்தில் டாடா சன்ஸ் தனது டெலிகாம் சேவை பிரிவை விரிவாக்கம் செய்வதற்காகப் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு வர்த்தகம் செய்யும் தேஜஸ் நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் 43.3 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளது.
வெளிநாட்டு முதலீட்டு சந்தை
இது ஒருபுறம் இருக்க டாடா சன்ஸ் வெளிநாட்டு முதலீட்டுச் சந்தையில் தனிப்பட்ட முறையில் 1 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடாகத் திரட்ட முடிவு செய்துள்ளது. இந்த முதலீடு மொத்தமும் தமிழ்நாட்டில் செய்ய டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தொழிற்சாலை
டாடா குழுமம் சமீபத்தில் மொபைல் போன் மற்றும் எலக்ட்ரானிக் கருவிகள் உற்பத்தியில் இறங்கியது. இத்துறையில் குறுகிய காலகட்டத்திலேயே சிறப்பான வளர்ச்சி அடைந்தது. இதனால் டாடா குழுமம் இப்பிரிவு வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும் தமிழ்நாட்டில் புதிதாக ஒரு மொபைல் மற்றும் உதிரிப்பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலையை உருவாக்க முடிவு செய்துள்ளது.
7000 கோடி ரூபாய் முதலீடு
இந்தத் தொழிற்சாலை மூலம் இப்பிரிவில் குறிப்பிடத்தக்க வர்த்தகத்தை அடைவது மட்டும் அல்லாமல் நீண்ட கால அடிப்படையில் முக்கியத் திட்டங்களை வகுக்கவும் டாடா முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்திற்காகத் தான் 1 பில்லியன் டாலர் அதாவது 7000 கோடி ரூபாய் முதலீட்டைத் தனியாகத் திரட்டுகிறது டாடா சன்ஸ்.
சன்ரைஸ் தொழிற்சாலை
இதைத் தொடர்ந்து டாடா குழுமம் தற்போது சன்ரைஸ் தொழிற்சாலைகளில் அதிகளவிலான கவனத்தைச் செலுத்த முடிவு செய்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் ஹெல்த்கேர் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.
டாடா அட்வான்ஸ் சிஸ்டம்ஸ்
இதேபோல் டாடா சன்ஸ் நிறுவனத்தின் கீழ் இருக்கும் டாடா அட்வான்ஸ் சிஸ்டம்ஸ் மூலம் இந்தியாவில் டிபென்ஸ் துறையிலும், ஏரோஸ்பேஸ் துறையிலும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு வருகிறது.
கம்பியூட்டர் சிப் தட்டுப்பாடு
உலகம் முழுவதும் கம்பியூட்டர் சிப் தட்டுப்பாடு நிலவி வருகிறது, இந்தத் தட்டுப்பாடு அடுத்த சில ஆண்டுகளுக்குத் தொடரும் எனக் கூறப்படும் நிலையில், இந்தத் தட்டுப்பாட்டை வர்த்தகமாக மாற்ற முடிவு செய்துள்ளது டாடா குரூப்.
செமிகண்டக்டர் உற்பத்தி
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான என்.சந்திரசேகரன் தலைமையிலான டாடா குழுமம் செமிகண்டக்டர் உற்பத்தித் துறையில் இறங்கவும், இந்தியாவில் புதிய நிறுவனம் புதிய தொழிற்சாலையை உருவாக்கவும் முடிவு செய்துள்ளது.
ஏர் இந்தியா
இதற்கிடையில் டாடா குழுமம் ஏர் இந்தியா நிறுவனத்தைக் கைப்பற்றும் திட்டத்தில் அதிகளவிலான ஆர்வம் காட்டி வருகிறது. ஏர் இந்தியா விற்பனை மூலம் சுமார் 15,000 கோடி ரூபாய் அளவிலான தொகையை எதிர்பார்க்கும் நிலையில், டாடா குழுமம் 1 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்து ஏர் இந்தியாவைப் புதுப்பிக்கத் திட்டமிட்டுள்ளது.
50,000 கோடி ரூபாய் இலக்கு
இந்த மாபெரும் திட்டங்களுக்காகத் தான் தற்போது டாடா சன்ஸ் சுமார் 50,000 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடாகத் திரட்ட முடிவு செய்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் அமைக்கும் ஸ்மார்ட்போன் தொழிற்சாலை தான் நமக்கு ஜாக்பாட்.
டாடா சன்ஸ் ஆதிக்கம்
இப்படி டாடா குழுமம் கைப்பற்றும் அனைத்து நிறுவனங்களும், வர்த்தகப் பரிமாற்றங்கள் அனைத்துமே டாடா சன்ஸ் வாயிலாகச் செய்யப்படும் காரணத்தால், டாடா சன்ஸ் வர்த்தகத்தில் நேரடியாக இல்லாவிட்டாலும் டாடா சாம்ராஜ்ஜியத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.