இந்திய ரீடைல் சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ஜியோமார்ட் அறிமுகம் மற்றும் பியூச்சர் குரூப் வர்த்தகத்தைக் கைப்பற்றிய பின்பு மிகப்பெரிய போட்டி உருவாகியுள்ளது. ஏற்கனவே ரீடைல் சந்தையில் இருக்கும் அமேசான், வால்மார்ட் கட்டுப்பாட்டில் இருக்கும் பிளிப்கார்ட், பேடிஎம் ஆகிய அனைத்து முன்னணி நிறுவனங்களும் புதிய முதலீடுகளைத் திரட்டி வர்த்தகத்தைப் பல வகையில் விரிவாக்கம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேரடியாக ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் அமேசான் நிறுவனங்களுடன் போட்டிப் போடும் திட்டத்துடனும், இந்திய ரீடைல் சந்தையில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என முடிவுடனும் டாடா குழுமம் களத்தில் இறங்கியுள்ளது. இதற்கான சில மாதங்களுக்கு முன்பு டாடா குழுமம் பல்வேறு நிறுவனங்களில் கீழ் இருக்கும் தனது ரீடைல் வர்த்தகத்தை ஒரே நிறுவனத்தில் சேர்த்தது.
இதுமட்டும் அல்லாமல் ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் அமேசானுக்குப் போட்டியாகப் பல்வேறு சேவைகளை அடங்கிய சூப்பர் ஆப்-ஐ உருவாக்கும் பணியில் டாடா குழுமம் செயல்பட்டுக் கொண்டு இருக்கும் அதேவேளையில், முக்கியமான 2 இரண்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
டாடா அதிரடி முடிவுகள்
இந்திய நுகர்வோர் சந்தையில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தும் டாடா இன்று ஆடை முதல் ஸ்டீல், கார் எனப் பல ஆயிரம் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. ஆனாலும் ரீடைல் சந்தையில் இன்னும் டாடா முழுமையாக இறங்கவில்லை.
இந்நிலையில் தான் தனது ரீடைல் வர்த்தகத்தைக் குறைந்த காலகட்டத்தில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என முடிவு செய்து சந்தையில் முன்னோடியாக இருக்கும் பல்வேறு நிறுவனங்களின் வர்த்தகத்தைக் கைப்பற்றப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பேச்சுவார்த்தை
டாடா குழுமம் தற்போது இந்தியாமார்ட் நிறுவனத்துடனும், மளிகை பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்யும் முன்னோடி நிறுவனமான பிக்பேஸ்கட் நிறுவனத்துடனும் வர்த்தகம் அல்லது நிறுவனப் பங்குகளைக் கைப்பற்றுவதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
113 பில்லியன் டாலர்
வருடத்திற்கு 113 பில்லியன் டாலர் வருவாய் பெறும் டாடா குழுமம் கார் தயாரிப்பு முதல் டீ தயாரிப்பு வரையில் பல்வேறு துறை சார்ந்த வர்த்தகத்தில் இருக்கும் வேளையில், தற்போது ரீடைல் சந்தை என்னும் கடலில் குதிக்கத் திட்டமிட்டு அதற்கான பணிகளை அடுத்தடுத்துச் செய்து வருகிறது.
தற்போது டாடாவின் இந்தியாமார்ட் மற்றும் பிக்பேஸ்கட் உடனான பேச்சுவார்த்தையில் வெற்றிபெற்றால் டாடா குழுமம் மிகப்பெரிய வர்த்தகச் சந்தையை அடையும்.
இந்தியாமார்ட்
மும்பை தலைமையிடமாகக் கொண்டு இந்தியாவின் B2B சந்தையில், சுமார் 60 சதவீத வர்த்தகத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது இந்தியாமார்ட். இந்நிறுவனத்தின் பங்குகள் நடப்பு ஆண்டில் மட்டும் சுமார் 140 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தின் மதிப்பு சுமார் 2 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
3150 ஊழியர்கள் உடன் நாடு முழுவதும் சுமார் 84 அலுவலகங்களை வைத்துக்கொண்டு மிகப்பெரிய அளவில் வர்த்தகம் செய்கிறது இந்தியாமார்ட்.
பிக்பேஸ்க்ட்
ஆன்லைன் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் விற்பனையில் பல பெரும் நிறுவனங்கள் முயற்சி செய்து தோல்வி அடைந்த காலத்தில் பிக்பேஸ்கட் வெற்றிபெற்றது. இன்று இந்தியாவில் பல்வேறு நகரங்கள் மற்றும் டவுன் பகுதிகளில் பிக்பேஸ்கட் ஆன்லைன் சேவை அளித்து வருகிறது.
இன்றைய நிலையில் இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு 1 பில்லியன் டாலராகும்.
முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முகேஷ் அம்பானியிடம் போதிய அளவிலான பணம் இருந்தாலும் டாடா குழுமத்திடம் மிகப்பெரிய சப்ளை செயின் நெட்வொர்க் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் உள்ளது.
இதனால் எந்தொரு வர்த்தகமாக இருந்தாலும் இந்தியா முழுவதும் மிகவும் குறுகிய காலகட்டத்திற்குள் தனக்கான இடத்தை டாடா குழுமத்தால் பெற முடியும். தற்போது டாடா குழுமம் ரீடைல் சந்தை சார்ந்த வர்த்தகத்தில் வேகமாக இயங்க துவங்கியது முகேஷ் அம்பானிக்கு மிகப்பெரிய போட்டியாக விளங்கும்.