இந்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் ஏர் இந்தியா-வை கடன் சுமையைத் தாங்க முடியாமல் விற்பனை செய்ய முடிவு செய்துள்ள நிலையில், ஏர் இந்தியா கைப்பற்றும் ஏலத்தில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் சிறப்பு நிறுவனமன Talace வெற்றிபெற்று உள்ளதாக Oct 8 அறிவிக்கப்பட்டது. இன்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக டாடா குழுமத்திற்கு ஏர் இந்தியாவின் நிர்வாகத்தை மொத்தமாக ஒப்படைத்தது.
இதன் மூலம் இந்திய மக்களுக்கு பல ஆண்டு காலம் சேவை அளித்த ஏர் இந்தியா என்ற மிகப்பெரிய சகாப்தம் முடிந்தது.
தாய் வீடு
ஆனால் ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமம் கைப்பற்றினால் தனது தாய் வீட்டிற்கே திரும்பியது போன்று இருக்கும். அது எப்படி..? இந்திய அரசு சுதந்திரத்திற்குப் பின்பு Jehangir Ratanji Dadabhoy Tata (J.R.D.Tata) உருவாக்கிய டாடா ஏர்லையன்ஸ் நிறுவனத்தை அரசு கைப்பற்றி ஏர் இந்தியாவாக மாற்றியது.
ஏர் இந்தியாவை டாடா அடம்பிடித்துக் கைப்பற்றியதிற்கு பின்பு மிகப்பெரிய வரலாறு உள்ளது..
ஜே.ஆர்.டி டாடா உருவாக்கிய டாடா ஏர் சர்வீசஸ்
ஏப்ரல் 1932ஆம் ஆண்டில் ஜே.ஆர்.டி டாடா, டாடா சன்ஸ் நிறுவனத்தின் கீழ் விமானப் போக்குவரத்து பிரிவை உருவாக்கி அதன் கீழ் டாடா ஏர் சர்வீசஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கினார். முதலில் இந்த நிறுவனம் தபால்களை ஏற்றிச் செல்லும் சேவைக்காக உருவாக்கப்பட்டது.
தபால்களை டெலிவரி
இதற்காக ஜே.ஆர்.டி டாடா ஒற்றை இன்ஜின் கொண்ட de Havilland Puss Moths இரு விமானத்தை வாங்கிச் சேவையைத் துவங்கினார். மேலும் டாடா ஏர் சர்வீசஸ் நிறுவனத்தின் வர்த்தகம் விரிவாக்கம் செய்யத் தபால்களை டெலிவரி செய்யும் வர்த்தகம் இம்பீரியல் ஏர்வேஸ் நிறுவனத்திடம் டாடா கைப்பற்றியது.
பிரிட்டன் ராயல் ஏர் போர்ஸ்
இதன் பின்பு அக்டோபர் 1932ல் டாடா ஏர் சர்வீசஸ் தனது தபால் டெலிவரி சேவையைக் கராச்சியில் இருந்து பாம்பே-வுக்குச் செய்யப்பட்டது. அதன் பின்பு மெட்ராஸ்-க்கு விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த விமானத்தைப் பிரிட்டன் விமானப் படையான ராயல் ஏர் போர்ஸ்-ன் பைலட்-ம் ஜே.ஆர்.டி டாடா-வின் நண்பருமான நெவில் வின்சென்ட் இயங்கினார்.
60,000 ரூபாய் லாபம்
முதல் வருடத்தில் மட்டுமே இவ்விரு சிறிய விமானங்கள் வாயிலாகவே 1,60,000 மைல் பறந்து, 155 பயணிகள் சேவை அளித்து, 9.72 டன் அளவிலான தபால்களைக் கார்ச்சி - பாம்பே - மெட்ராஸ் ஆகிய இடங்களுக்கு டெலிவரி செய்தது. இதன் மூலம் சுமார் 60,000 ரூபாய் அளவிலான லாபத்தை 1932-1933 காலகட்டத்தில் ஜே.ஆர்.டி டாடா பெற்றார்.
டாடா ஏர்லையன்ஸ் துவக்கம்
டாடா ஏர் சர்வீசஸ் மூலம் பயணிகள் விமானச் சேவை சூடுபிடிக்கத் துவங்கிய காரணத்தால் பயணிகள் விமானச் சேவைக்காகவே ஜே.ஆர்.டி டாடா, டாடா ஏர்லையன்ஸ் என்ற நிறுவனத்தைத் துவங்கினார். இதற்காக மைல் மெர்லின் என்ற 6 இருக்கைகள் கொண்ட விமானத்தை ஜே.ஆர்.டி டாடா வாங்கினார்.
1938ல் சேவை விரிவாக்கம்
1938ல் டாடா ஏர் சர்வீசஸ் நிறுவனத்தை டாடா ஏர்லையன்ஸ் ஆக மாற்றினார். இதன் பின்பு பயணிகள் விமானச் சேவையை மற்றும் தபால் பரிமாற்ற சேவை கார்ச்சி - டெல்லி - பாம்பே - மெட்ராஸ் - சிலோன் வரையில் விரிவாக்கம் செய்யப்பட்டது.
2ஆம் உலகப் போர்
மேலும் 2ஆம் உலகப் போரின் போது டாடா ஏர்லையன்ஸ், பிரிட்டன் நாட்டின் ராயல் ஏர் போர்ஸ் உடன் இணைந்து ராணுவ வீரர்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்துச் செய்யப் பெரிய அளவில் உதவியது. இதோடு போரில் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றவும், விமானங்களைப் பழுதுபார்க்கும் பணிகளிலும் டாடா ஏர்லையன்ஸ் பங்குபெற்றது.
பொது நிறுவனமாக மாற்றம்
2ஆம் உலகப் போருக்கு பின்பு டாடா ஏர்லையன்ஸ் தன்னுடைய தபால் மற்றும் பயணிகள் விமானத் தேவை முழுமையாக இயக்க துவங்கியது. இதன் பின்பு ஜூலை 1946ல் பொது நிறுவனமாக மாற்றப்பட்டு முழுப் பயணிகள் சேவை நிறுவனமாக மாற்றப்பட்டது.
இந்திய சுதந்திரம்
இந்திய சுதந்திரத்திற்குப் பின்பு 1948ல் இந்திய அரசு பயணிகள் விமானச் சேவை துவங்குவதற்காக டாடா ஏர்லையன்ஸ் நிறுவனத்தில் 49 சதவீத பங்குகளைக் கைப்பற்றியது. இதன் பின்பு மலபார் பிரின்சஸ் என்ற பெயர் கொண்ட விமானத்தின் மூலம் பாம்பே முதல் லண்டன் வரையில் முதல் வெளிநாட்டுப் பயணச் சேவையைத் துவங்கியது.
தேசியமயமாக்கல்
1953ல் இந்திய அரசு, ஏர் கார்பரேஷன்ல் சட்டத்தை அறிமுகம் செய்து ஜே.ஆர்.டி டாடா மூலம் டாடா சன்ஸ் நிறுவனத்தில் இருந்த டாடா ஏர்லையன்ஸ் நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளை அரசு கைப்பற்றியது. இதன் பின்பு டாடா ஏர்லையன்ஸ் நிறுவனத்தை ஏர் இந்தியா எனப் பெயர் மாற்றம் செய்து தேசியமயமாக்கம் செய்யப்பட்டது.
ஜே.ஆர்.டி டாடா
ஜே.ஆர்.டி டாடா 1977 வரையில் ஏர் இந்தியாவின் சேர்மன் ஆக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1948-50 வரையில் பாங்காக், ஹாங்காங், டோக்கியோ, நைரோபி, ரோம், பாரிஸ், டுசெல்டார்ஃப் மற்றும் சிங்கப்பூர் எனப் பல வெளிநாடுகளுக்கு ஏர் இந்தியா தனது விமானச் சேவையை விரிவாக்கம் செய்யப்பட்டது.
உள்நாட்டு விமானச் சேவைக்கு இந்தியன் ஏர்லையன்ஸ் என்றும், வெளிநாட்டு விமானச் சேவைக்கு ஏர் இந்தியா என்ற நிறுவனம் கொண்டு இயங்கியது.
தாராளமயமாக்கல்
2000-01 ஏர் இந்தியாவை மீண்டும் தனியார்மயமாக்க முயற்சி எடுக்கப்பட்ட நிலையில் தோல்வியில் முடிந்தது. அதன் பின்பு 2001ல் Michael Mascarenhas செய்த ஊழல் மூலம் ஏர் இந்தியா சுமார் 8 மில்லியன் டாலர் அளவிலான நஷ்டத்தை எதிர்கொண்டது. இங்கு இருந்து தான் பல வர்த்தகப் பிரச்சனைகளை ஏர் இந்தியா எதிர்கொள்ளத் துவங்கியது.
ஏர் இந்தியா பயணம்
இதைத் தொடர்ந்து 2004 மலிவு விலை சேவை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிர்ஸ் அறிமுகம்.
2007ல் ஏர் இந்தியா - இந்தியன் ஏர்லையன்ஸ் நிறுவனங்கள் ஏர் இந்தியா லிமிடெட் ஆக இணைக்கப்பட்டது.
2007ல் ஏர் இந்தியா தனது வர்த்தகத்தை மேம்படுத்த ஸ்டார் அலையன்ஸ் உடன் கூட்டணி வைத்தது.
2009 மார்ச் இணைக்கப்பட்ட நிறுவனத்தின் மொத்த நஷ்டத்தின் அளவு 1 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்தது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உதவியின் மூலம் கடன் சுமையைக் குறைத்துக் கூடுதலான கடனையும் பெற்றது ஏர் இந்தியா. இக்காலகட்டத்தில் அரசும் அதிகளவிலா நிதியை உட்செலுத்தத் துவங்கியது.
2011ல் அடிப்படைகளைச் சரியாகப் பின்பற்றாத காரணத்தால் ஸ்டார் அலையன்ஸ் கூட்டணியில் இருந்து ஏர் இந்தியா வெளியேறியது.
2013 முதல் ஏர் இந்தியா கடன் சுமையைத் தாங்க முடியாமல் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
தாய் வீட்டுக்குத் திரும்பிய ஏர் இந்தியா
2013ல் துவங்கிய முயற்சி இன்று முடிவடைந்துள்ளது, இந்திய அரசு டாடா-விடம் இருந்து கைப்பற்றிய நிறுவனத்தைத் தற்போது மீண்டும் டாடா குழுமம் கைப்பற்றுகிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் டாடா வின் நிறுவனம் மீண்டும் டாடா-விற்கே கிடைத்துள்ளது.
18000 கோடி ரூபாய்
ஏர் இந்தியா விற்பனை அக்டோபர் 8ஆம் தேதி உறுதியான நிலையில், இந்த விற்பனை மூலம் மத்திய அரசு சுமார் 18000 கோடி ரூபாய் பெற உள்ளது. இதில் 2700 கோடி ரூபாய் அரசுக்குப் பணமாகவும், மீதமுள்ள தொகை ஏர் இந்தியா தனது கடனை தீர்க்க பயன்படுத்த உள்ளது. அனைத்திற்கும் மேலாக ஏர் இந்தியா மூலம் தினமும் ஏற்படும் பல கோடி ரூபாய் நஷ்டத்தில் இருந்து மத்திய அரசு தப்பித்துள்ளது.