இந்தியாவின் மிகப்பெரிய ரீடைல் வர்த்தகச் சந்தையைப் பிடிக்க அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் கடுமையாகப் போட்டிப்போட்டு வந்த நிலையில் கொரோனா லாக்டவுன் காலத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரிலையன்ஸ் ஜியோ ஜியோமார்ட் செயலியை அறிமுகம் செய்து ரீடைல் வர்த்தகத்தில் மளமளவெனக் கோட்டையை கட்டி தற்போது அமேசானுக்கு இணையாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
ஜியோமார்ட்-ன் அதிரடி வளர்ச்சியில் முகேஷ் அம்பானியுடன் போட்டிப்போட யாருமே இல்லை என்ற நிலை உருவான நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமான டாடா ஈகாமர்ஸ் மற்றும் ரீடைல் சந்தைக்குள் சூப்பர் ஆப் உடன் நுழைய உள்ளதாக அறிவித்தது. டாடா குழுமத்தின் இந்த முடிவு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் ரீடைல் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக இருக்கும் என்றால் மிகையில்லை.
இந்நிலையில் தற்போது டாடா குழுமத்தின் ரீடைல் கனவு நினைவாக அடுத்தடுத்து முக்கியமான பணிகள் நடந்து வருகிறது.
டாடாவின் ரீடைல் திட்டம்
113 பில்லியன் டாலர் மதிப்பிலான டாடா குழுமம் 2019ஆம் ஆண்டு முதல் இந்திய ரீடைல் சந்தைக்குள் நுழைய வேண்டும் எனத் திட்டமிட்டு வந்த டாடா குழுமம், தனது ரீடைல் வர்த்தகம் அனைத்தையும் டாடா கன்ஸ்யூமர் நிறுவனத்தின் கீழ் மறுசீரமைப்புச் செய்து ஒரே நிறுவனமாக மாற்றியது.
இதன் பின்பு டிஜிட்டல் கனவுடன் ரீடைல் சந்தைக்குள் நுழையத் திட்டமிட்ட போது டாடா குழுமம் டாடா டிஜிட்டல் என்ற பிரத்தியேக நிறுவனத்தை 2020ல் துவங்கியது.
பிக் பேஸ்கட் பேச்சுவார்த்தை
இப்புதிய டாடா டிஜிட்டல் நிறுவனத்தின் கீழ் தான் ரீடைல் வர்த்தகத்திற்காகப் பிக் பேஸ்க்ட் நிறுவனத்தைக் கைப்பற்றும் திட்டத்திற்கான பேச்சுவார்த்தை துவங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்தப் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.
டாடா Vs ரிலையன்ஸ்
இதனால் விரைவில் பிக் பேஸ்கட் வர்த்தகம் டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டிற்குக் கீழ் வர உள்ளது. இது வெற்றிபெறும் பட்சத்தில் டாடா குழுமம் ஜியோமார்ட் செயலியைப் போலவே முழுமையாக ரீடைல் வர்த்தகத்திற்குள் நுழைய உள்ளது.
சூப்பர் ஆப் திட்டம்
இதோடு உப்பு முதல் மென்பொருள் வரையில் அனைத்து துறைகளிலும் வர்த்தகம் செய்தும் டாடா குழுமம் மிகவும் குறைந்த காலகட்டத்திலேயே சூப்பர் ஆப் உருவாக்கும் பணிகளை முடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சூப்பர் ஆப் கீழ் டாடா குழுமத்தின் உணவு, நுகர்வோர் பொருட்கள், நிதியியல் சேவைகள், எனப் பலதரப்பட்ட சேவைகளும், பொருட்களும் விற்பனைக்காக அறிமுகம் செய்யப்பட உள்ளது.
டிரென்ட் நிறுவனம்
இதேவேளையில் டாடா குழுமத்தின் மற்றொரு ரீடைல் பிரிவான டிரென்ட் (Trent) நிறுவனத்தின் ஸ்டார்குவிக் சேவை தளத்தை மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது. மேலும் டிரென்ட் சூப்பர் ஆப்-ல் இணையத் திட்டமிடவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளதால், இந்நிறுவனம் தொடர்ந்து தனிப்பட்ட நிறுவனமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆன்லைன் டெலிவரி
மேலும் டிரென்ட் நிறுவனத்தின் தலைவரான நியோல் டாடா ஸ்டார்குவிக் சேவையை விரிவாக்கம் செய்வதற்காகப் புதிய முதலீட்டில் நாட்டின் பல முக்கிய நகரங்களில் Dark Stores அமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளார். இந்தக் கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் சென்று பொருட்களை வாங்க முடியாது, ஆன்லைன் மூலம் பெரும் ஆர்டர்களுக்கு மட்டும் டெலிவரி செய்வதற்காக உருவாக்கப்படும் பிரத்தியேக கடைகளாகும்.
ஆன்லைன் ஆடை விற்பனை
இதோடு ஆடை விற்பனைக்காக டிரென்ட் நிறுவனத்தின் கிளை பிராண்டான Westside நிறுவனம் தனிப்பட்ட ஆன்லைன் விற்பனை தளத்தை உருவாக்கியுள்ளது.
இதன் மூலம் வெஸ்ட்சைடு நிறுவனம் தனது தளத்திற்குப் புதிதாக வாடிக்கையாளர்களை ஆன்லைன் மூலம் பெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் கிட்டத்தட்ட ரிலையன்ஸ் டிரென்ஸ், ரிலையன்ஸ் ரீடைல், ரிலையன்ஸ் ஜியோமார்ட் வடிவத்தைப் போன்றவையாகும்.
டாடாவின் பிற வர்த்தகம்
இதுமட்டும் அல்லாமல் டிரென்ட் நிறுவனத்தின் கீழ் Zudio, Landmark ஆகிய கடைகளும் இருக்கும் காரணத்தால் தனித்தனியே வாடிக்கையாளர்களைப் பெற்று தனது டிஜிட்டல் வர்த்தகத்தை உயர்த்தி வருகிறது.
இதனால் டிஜிட்டல் வர்த்தகச் சந்தையில் டாடாவுக்கான இடம் பெரிய அளவில் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரம்மாண்ட திட்டம்
இப்படித் தனித்தனியே டாடாவின் நிறுவனங்கள் டிஜிட்டல் வர்த்தக்திற்கான தளத்தை மேம்படுத்தும் போது மிகவும் குறைந்த நேரத்தில் மொத்த வர்த்தகத்தையும் டாடாவின் சூப்பர் ஆப்-ல் இணைத்துவிடலாம். இந்தச் சூப்பர் ஆப் மூலம் அனைத்துத் தரப்பு வாடிக்கையாளர்களும் ஓரே இடத்தில் ஓரே நேரத்தில் அனைத்து விதமான சேவைகளையும் பொருட்களையும் பெற முடியும். ட
முகேஷ் அம்பானி திட்டம்
டாடாவின் சூப்பர் ஆப் திட்டம் அறிமுகம் செய்யப்படும் போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது ரீடைல் வர்த்தகத்தில் மிகப்பெரிய பின்னடைவைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.