இந்தியாவில் லாக்டவுன் காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் ஆன்லைன் பேமெண்ட் வர்த்தகம் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது. குறிப்பாக ஜியோமார்ட் தனது ஆன்லைன் வர்த்தகத்தை அறிமுகம் செய்ய அடுத்தச் சில மாதங்களிலேயே சந்தையின் முன்னணி நிறுவனங்களுடன் போட்டிப்போடும் அளவிற்கு உயர்ந்துள்ளது.
இந்நிலையில் நாட்டின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமம் ஆக விளங்கும் டாடா குழுமம் ஈகாமர்ஸ் வர்த்தகத்தில் நேரடியாக இறங்க முடிவு செய்துள்ளது.
இத்திட்டத்தில் பல மாதங்களாகப் பணியாற்றி வரும் டாடா உயர்மட்ட நிர்வாகக் குழு ஈகாமர்ஸ் வர்த்தகத்திற்காக மட்டும் சுமார் 1.2 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.
இரு முக்கிய நிறுவனங்கள்
டாடா குழுமம் ஈகாமர்ஸ் துறைக்குள் நுழையத் திட்டமிட்ட நிலையில் ஆன்லைன் மளிகை பொருட்கள் விற்பனை நிறுவனமான பிக் பேஸ்கட் மற்றும் ஆன்லைன் பார்மா விற்பனை துறையில் 1எம்ஜி நிறுவனத்தைக் கைப்பற்றி ஈகாமர்ஸ் துறைக்குள் நுழைய உள்ளது.
பிக் பேஸ்கட்
ஆன்லைன் மளிகை பொருட்கள் விற்பனை சந்தையில் நீண்ட காலமாக இந்தியாவில் வர்த்தகம் செய்யும் பிக்பேஸ்கட் தற்போது 1.4 பில்லியன் டாலர் மதிப்பீடு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்நிறுவனத்தில் சுமார் 70 சதவீத பங்குகளைச் சுமார் 940 முதல் 950 மில்லியன் டாலருக்கு கைப்பற்ற உள்ளது டாடா. இந்த நிறுவனத்தின் வாயிலாக ஜியோமார்ட்-ன் மளிகை பொருட்கள் விற்பனையுடன் போட்டிப்போட உள்ளது.
1எம்ஜி
இதேபோல் அமேசான் மற்றும் ரிலையன்ஸ் ரீடைல் தற்போது ஆன்லைன் பார்மா சந்தையில் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற முயற்சி செய்து வரும் நிலையில் 1எம்ஜி நிறுவனத்தைச் சுமார் 250 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைச் செய்து தனது ஈகாமர்ஸ் வர்த்தகத்துடன் சேர்க்க உள்ளது
மேலும் இவ்விரு நிறுவனங்கள் உடனான பேச்சுவார்த்தை தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சீனா அலிபாபா
பிக்பேஸ்கட் நிறுவனத்தில் அலிபாபா நிறுவனத்தின் 30 சதவீத பங்குகளைத் தான் தற்போது டாடா கைப்பற்ற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த உறுதியாகும் பட்சத்தில் இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் சீன முதலீட்டில் இருந்து வெளியேறும் முதல் நிறுவனமாக அலிபாபா இருக்கும்.