டாடாவுக்கும் சரி, டாடா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரிக்கும் சரி 2020 ஒரு வித மோதலிலேயே தொடங்கி இருக்கிறது.
இந்தியாவின் பழம் பெரும் வியாபார நிறுவனங்களில் ஒன்று டாடா குழுமம். இந்தியாவில் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் தொடங்கி கடல் உப்பு வரை பல வியாபாரங்களில் ஈடுபட்டு கல்லா கட்டும் பெரு நிறுவனம்.
கடந்த 2012-ம் ஆண்டில் டாடா குழுமத்தின் முகமாகப் பார்க்கப்பட்ட ரத்தன் டாடா, தன் அன்றாட பணிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அடுத்து யார்
இந்தியாவின் தாராளமயம், உலகமயம், தனியார்மயம் தலை எடுக்கத் தொடங்கிய போது, டாடா குழுமத்தை நேர்த்தியாக வழி நடத்திய ரத்தன் டாடா ஓய்வு பெறும் போது, யார் அவருடைய தலைவர் பதவியை நிரப்புவார்கள் என்கிற விவாதம், தன்னிச்சையாகவே வரத் தானே செய்யும். அந்த 2012 கால கட்டத்தில், அடுத்த டாடா தலைவர் யார் என தொடர்ந்து விவாதம் நடந்தது. அந்த விவாதத்துக்கு அமைதியாக முற்றுப் புள்ளி வைத்தவர் சைரஸ் மிஸ்த்ரி.
பதவி காலம்
கடந்த 2012 முதல் அக்டோபர் 2016 வரை, சைரஸ் மிஸ்த்ரி, இந்தியாவின் மிகப் பெரிய வியாபார சாம்ராஜ்யங்களில் ஒன்றான டாடா குழுமத்தின் ஆறாவது தலைவராக பதவி வகித்தார். டாடா குழுமத்தில் ஏற்பட்ட பல்வேறு கருத்து முரண்பாடுகள் காரணமாக, கடந்த அக்டோபர் 2016-ல் சைரஸ் மிஸ்த்ரியை பதவியில் இருந்து நீக்கியது டாடா குழுமத்தின் இயக்குநர்கள் குழு.
ராஜினாமா
அதன் பின் டிசம்பர் 2016 கால கட்டத்தில் சைரஸ் மிஸ்த்ரி டாடா குழும நிறுவனங்களின் அனைத்து கம்பெனிகளில் இருந்து தன் இயக்குநர் பதவியை ராஜினாமா செய்தார். ஜனவரி 2017-ல், தமிழகத்தைச் சேர்ந்த என் சந்திரசேகரன் முதல் பார்சி அல்லாத டாடா குழும தலைவராக நியமிக்கப்பட்டார். அதற்கு அடுத்த மாதமே, சைரஸ் மிஸ்த்ரி டாடா சன்ஸ் இயக்குநர் குழுவில் இருந்தும் நீக்கப்பட்டார்.
வழக்கு
டாடா குழுமம், சைரஸ் மிஸ்த்ரியை தலைவர் பதவியில் இருந்து நீக்கியது தவறு என, மிஸ்த்ரி தரப்பு, தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் (NCLT) மும்பை பெஞ்சில் வழக்கு தொடுத்தார்கள். சைரஸ் மிஸ்த்ரி சார்பில், சைரஸ் இன்வெஸ்ட்மெண்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்டெர்லிங் இன்வெஸ்ட்மெண்ட் கார்ப் ஆகிய முதலீட்டு நிறுவனங்கள் தொடுத்தன. இந்த இரண்டு வழக்கையும் நிராகரித்தது தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் (NCLT).
மேல் முறையீடு
இறுதியில் சைரஸ் மிஸ்த்ரியே தனிப்பட்ட முறையில், தேசிய நிறுவன சட்ட மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் (NCLAT), தன்னை டாடா குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்கியது தவறு என வழக்கு தொடுத்தார். கடந்த 2019 டிசம்பர் 18-ல் சைப்ரஸ் மிஸ்த்ரி தொடுத்த வழக்குக்கு தீர்ப்பு வழங்கியது தேசிய நிறுவன சட்ட மேல் முறையீட்டுத் தீர்ப்பாயம் (NCLAT).
சைரஸ் பக்கம்
டிசம்பர் 18, 2019 அன்று வெளியான தீர்ப்பு, டாடா குழுமத்துக்கு எதிராகவும், சைரஸ் மிஸ்த்ரிக்கு சாதகமாகவும் வந்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. சைரஸ் மிஸ்த்ரி டாடா குழுமத்தின் செயல் தலைவராக இருக்கலாம் எனச் சொல்லி இருக்கிறது. அதோடு டாடா குழும தலைவர் என் சந்திரசேகரனை நியமித்தது சட்ட விரோதம் என்றும் தெளிவாகச் சுட்டிக் காட்டி இருக்கிறது தேசிய நிறுவன சட்ட மேல் முறையீட்டுத் தீர்ப்பாயம் (NCLAT).
நான்கு வாரம்
இருப்பினும், சைரஸ் மிஸ்த்ரி மீண்டும் டாடா குழுமத்தின் தலைவராக உடனே அமர முடியாது. அதாவது இந்த தீர்ப்பை உடனடியாக செயல்படுத்த முடியாது என பொடி வைத்தது. தீர்ப்பு வெளியாகி, நான்கு வாரங்கள் கழித்து தான் செயல்படுத்த முடியும் எனச் சொன்னது. இந்த நான்கு வார காலத்துக்குள், டாடா குழுமம், மேல் முறையீடு செய்ய விரும்பினால் செய்து கொள்ளலாம் எனச் சொல்லி இருந்தார்கள்.
மேல் முறையீடு
இப்போது தேசிய நிறுவன சட்ட மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தின், இறுதி தீர்ப்பை எதிர்த்து, டாடா குழுமம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து இருக்கிறது. அதாவது, தன் முன்னாள் தலைவரான சைரஸ் மிஸ்த்ரியை, மீண்டும் தலைவராக ஏற்றுக் கொள்ள விரும்பாமல், உச்ச நீதிமன்றத்துக்கு வந்திருக்கிறது டாடா குழுமம்.
பொறுமை
டாடா குழுமத்தின் மேல் முறையீட்டுக்கு, உச்ச நீதிமன்றம், தேசிய சட்ட மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை, உறுதி செய்யுமா..? அல்லது சைரஸ் மிஸ்த்ரியை டாடா குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்கியது சரி தான் என புதிய தீர்ப்பு வழங்குமா..? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.