உலகில் அரசு விமானச் சேவை இல்லாத நாடுகள் பட்டியலில் ஏர் இந்தியா விற்பனை மூலம் இந்தியாவும் சேர்ந்துள்ளது சோகமான விஷயமாக இருந்தாலும், தொடர்ந்து கடன் சுமையில் தத்தளிக்காமல் சுமையைக் குறைத்தது சரி என்பது தான் உண்மை.
ஏர் இந்தியா நிறுவனத்தை மொத்தமாக டாடா சன்ஸ் நிறுவனத்தின் புதிய கிளை நிறுவனமான டேலேஸ் பிரைவேட் நிறுவனம் சுமார் 18,000 கோடி ரூபாய்க்குக் கைப்பற்றியுள்ளதாக DIPAM மற்றும் மத்திய சிவில் ஏவியேஷன் அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவன ஊழியர்களின் நிலை என்ன என்பது தான் அனைவரின் கேள்வியாக உள்ளது.
நிறுவன கைப்பற்றல்
பொதுவாக ஒரு நிறுவனத்தை வாங்கினால், அதன் உரிமையாளர்கள் நிர்வாகத்தில் எந்த முடிவை வேண்டுமானாலும் எடுக்கலாம். கிட்டதட்ட இதே நிலை தான் அரசு நிறுவனங்களைத் தனியார் நிறுவனங்கள் கைப்பற்றும் போது. ஆனால் இந்த முறை மத்திய அரசும் சரி, டாடா குழுமம் சரி ஏர் இந்தியா ஊழியர்களுக்குச் சாதகமான முடிவை எடுத்துள்ளது.
ஏர் இந்தியா விற்பனை
மத்திய அரசு திட்டமிட்டபடி டிசம்பர் மாதத்திற்குள் ஏர் இந்தியாவை மொத்தமாக விற்பனை செய்துள்ளது. டாடா சன்ஸ் நிறுவனத்தின் டேலெஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சுமார் 18,000 கோடி ரூபாய்க்குக் கைப்பற்றியுள்ள நிலையில் 2,700 கோடி ரூபாய் அளவிலான நிதியைப் பணமாக மத்திய அரசு பெற உள்ளது. மீதமுள்ள தொகையை நேரடியாக ஏர் இந்தியா கடனை தீர்க்கப்படுகிறது.
ஏர் இந்தியா ஊழியர்கள்
ஏர் இந்தியா நிறுவனத்திற்கு டாடா சன்ஸ் மூலம் தீர்வு காணப்பட்ட நிலையில், ஏர் இந்தியா ஊழியர்களின் நிலை குறித்தும் மத்திய அரசு டாடா சன்ஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் ஊழியர்களுக்குச் சாதகமாக முடிவுகளை எடுக்க டாடா எவ்விதமான மறுப்பும் தெரிவிக்காமல் ஒப்புக்கொண்டு உள்ளது.
ஒரு வருட வேலைவாய்ப்பு உத்தரவாதம்
டாடா சன்ஸ் கட்டுப்பாட்டிற்குள் ஏர் இந்தியா வந்த பின்னர் ஒரு வருடத்திற்கு அனைத்து ஏர் இந்தியா ஊழியர்களுக்கும் ஒரு வருட வேலைவாய்ப்பு உத்தரவாதம் அளிக்கப்பட உள்ளது. இது பொரும்பாலன நிறுவனங்கள் செய்யாது, காரணம் செலவுகளைக் கட்டுப்படுத்த அதிரடியான நடவடிக்கை எடுக்கப்படும். இதில் முக்கியமானது ஊழியர்கள் பணிநீக்கம்.
விஆர்எஸ் திட்டம்
2வது வருடத்தின் மூலம் டாடா சன்ஸ்-ன் டேலெஸ் நிர்வாகத்தின் முடிவுகள் படி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படாமல் விஆர்எஸ் அளிக்கப்பட உள்ளதாக மத்திய சிவில் ஏவியேஷன் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கிராஜூவிட்டி, பிஎப் உண்டு
இதோடு 2வது வருடத்தில் இருந்து வெளியேறும் ஊழியர்களுக்கு இந்திய நிறுவன சட்டத்தின் படி கிராஜூவிட்டி, பிஎப் ஆகியவை அளிக்கப்படும். இதனால் ஏர் இந்தியா ஊழியர்களுக்கு அனைத்து விதமான சலுகை அளிக்கப்படுவது இன்று மத்திய அமைச்சர் உறுதி செய்துள்ளார்.
மருத்துவச் சலுகை
இதேபோல் அனைத்து ஏர் இந்தியா ஊழியர்களுக்கு ஓய்வு பெற்ற பின்னர் இந்திய அரசு சார்பில் Post Retirement Medical Benefit தொடர்ந்து அளிக்கப்படும். இந்தச் சலுகை அரசு தரப்பில் இருந்து வழக்கம் போல் தொடரும் என மத்திய சிவில் ஏவியேஷன் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசு நிலுவைத் தொகை
மேலும் தற்போது ஏர் இந்தியா ஊழியர்களுக்கு அளிக்க வேண்டிய 1,332 கோடி ரூபாய் அளவிலான நிலவை தொகையை அரசு கொடுக்காமல் பாக்கி வைத்துள்ளது. இதையும் நிர்வாகம் மாறும் முன்பு அரசு ஊழியர்களுக்கு அளிக்க உள்ளதாகவும் இன்றைய கூட்டத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளது.