டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவானது வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக என். சந்திரசேகரன் அறிவித்த பிறகு நடக்கும் முதல் கூட்டம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த என். சந்திரசேகரன், கடந்த 2017 பிப்ரவரியில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றார். அவரது தற்போதைய பதவிக்காலம் வரும் பிப்ரவரியுடன் முடியும் நிலையில் அவர் திடீரென பதவியை ராஜினாமா செய்ய போவதாக அறிவித்தார். இதனால் டாடா குழுமத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வரலாற்றிலெயே இல்லாத வகையில் டாடா பொதுக்கூழு கூட்டமும் ரத்து செய்யப்பட்டது.

இதனை அடுத்து டாடா குழுமத்தில் அடுத்த தலைவரை தேடும் பணிகள் நடந்து வருகின்றன.இதற்காக 5 பேர் கொண்ட தேர்வு குழு அமைக்கப்படுகிறது. இந்நிலையில் தான் செப்டம்பர் 17இல் டாடா சன்ஸ் வாரிய கூட்டம் நடக்கிறது. இதில் சந்திரசேகரன் ராஜினாமா, ஆண்டு பொது கூட்ட தேதி ஆகியவை குறித்து விவாதிக்கப்படுமாம்.
முன்னதாக ஆகஸ்ட் 18 அன்று டாடா குழுமத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது. ஆனால் சந்திரசேகரனின் திடீர் அறிவிப்பால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. டாடா சன்ஸ் நிறுவனத்தின் விதிகளின்படி, தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரை மீண்டும் நியமிக்க அறக்கட்டளை நியமிக்கப்பட்ட இயக்குநர்களின் பெரும்பான்மை ஆதரவு தேவை என்பதால், செப்டம்பர் 17 வாரிய கூட்டம் டாடா குழுமத்தின் எதிர்கால தலைவர் மற்றும் போக்கை தீர்மானிப்பதில் மிக முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக விளங்கும் டாடா குழுமத்தின் தலையாய நிறுவனமாக இருக்கும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரியளவில் வித்திட்டவர். ரத்தன் டாடாவுக்கு நெருக்கமானவராக இருந்தவர். ரத்தன் டாடா மறைவை தொடர்ந்து நோயல் டாடாவுக்கும் சந்திரசேகரனுக்கும் இடையே சில முரண்பாடுகள் எழுந்ததாக சொல்லப்படுகிறது.
என். சந்திரசேகரனுக்கு மீண்டும் 5 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கலாம் என வாரிய குழு இயக்குநர்கள் முடிவெடுத்த நிலையில் நோயல் டாடா அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. டாடா குழுமத்தில் பல நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தில் இயங்கி வரும் வேளையில், இதற்கான தீர்வு காணப்படாமல் சந்திரசேகரனுக்கு பதவி நீட்டிப்பு கொடுக்க முடியாது என அவர் தெரிவித்தாராம். இதன் பின்பு 6 மாதங்களாக பல கசப்பான விவாதங்களும், கருத்துக்களும் டாடா குழுமத்தின் உயர்மட்ட குழுவில் நடந்துள்ளது. இந்நிலையில் தான் சந்திரசேகரனே பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications

