டாடா குழுமத்தில் சமீபத்தில் பல முக்கிய மாற்றங்கள் நடைபெற்றதை, பலரும் கவனித்து இருப்போம்.
நிர்வாக அளவில் டாடா சன்ஸ், டாடா டிரஸ்ட் அமைப்புகளுக்கு ஓரே தலைவர் இருக்கக் கூடாது என்று தீர்மாணம் கொண்டு வரப்பட்டது, இதைத் தொடர்ந்து டாடா டிரஸ்ட் நிர்வாகக் குழுவில் மிஸ்திரி குடும்பத்தின் சார்பாக 62 வயதான மெஹ்லி மிஸ்திரி-ஐ சர் டோராப்ஜி டாடா டிரஸ்ட் மற்றும் சர் ரத்தன் டாடா டிரஸ்ட் அமைப்புகளில் டிரஸ்டியாகச் சேர்க்கப்பட்டு உள்ளார்.
வர்த்தக அளவில் பார்க்கும்போது டிசிஎஸ் அனைத்து ஊழியர்களையும் அலுவலகத்திற்கு அழைத்தது, டாடா - பிஎஸ்என்எல் இணைந்து விரைவில் 4ஜி சேவை அளிப்பது, விமானப் போக்குவரத்துத் துறையில் ஏர் ஏசியா இந்தியா பங்குகளை மொத்தமாக ஏர் இந்தியா வாங்கியது.
இந்த நிலையில் ஏர் இந்தியா தற்போது அடுத்தகட்ட திட்டத்திற்குச் செல்ல துவங்கியுள்ளது. இதனால் 2வது இடத்தில் இருக்கும் ஏர் இந்தியா விரைவில் முதல் இடத்தைப் பிடிக்கும்.
டாடா சன்ஸ்
என்.சந்திரசேகரன் தலைமையிலான டாடா சன்ஸ் நிர்வாகம் பயணிகள் விமானப் போக்குவரத்தில் ஏர் இந்தியாவுக்காகப் பெரிய தொகையை முதலீடு செய்துள்ள நிலையில், எப்படியாவது வர்த்தகத்தை அதிகளவில் கைப்பற்றி நாட்டின் மிகப்பெரிய விமானச் சேவை நிறுவனமாக இருப்பது மட்டும் அல்லாமல் லாபகரமான நிறுவனமாக இருக்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளது.
ஏர் ஏசியா இந்தியா
இந்த நிலையில் டாடா குழுமம் சமீபத்தில் மலேசியாவின் ஏர் ஏசியா கூட்டணியில் இயங்கி வந்த ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் வாங்கி விமானம், ஊழியர்கள், சேவை தளம் ஆகிய அனைத்தையும் கைப்பற்றி ஏர் ஏசியா இந்தியாவைத் தனதாக்கி கொண்டது டாடா குழுமம்.
பிரம்மாண்ட இணைப்பு
இதைத் தொடர்ந்து டாடா குழுமம் தனது நீண்ட காலத் திட்டமான இணைப்புத் திட்டத்தைத் தற்போது கையில் எடுத்துள்ளது. டாடா குழுமம் தனது விமானச் சேவை நிறுவனங்கள், வர்த்தகம், கட்டமைப்பு ஆகிய அனைத்தையும் ஏர் இந்தியா கீழ் கொண்டு வரும் மாபெரும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
இதற்காகப் பல மாதமாகச் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த டாடா குழுமம் ஏர் ஏசியா இந்தியாவை கைப்பற்றிய பின்பு அதற்கான பணிகளைத் துவங்கியுள்ளது. விஸ்தாரா நிறுவனத்தை டாடா குழுமம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியது.
விஸ்தாரா, ஏர் ஏசியா இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
இந்த நிலையில் டாடா குழுமம் தற்போது ஏர் இந்தியா என்னும் ஒரு நிறுவனத்தின் கீழ் விஸ்தாரா, ஏர் ஏசியா இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய 3 நிறுவனங்களை இணைத்து நாட்டின் 2வது பெரிய விமானச் சேவை நிறுவனமாக உயர்த்த உள்ளது. இதன் மூலம் ஏர் இந்தியா மலிவு விலை விமானச் சேவை முதல் வெளிநாட்டு விமானச் சேவை வரையில் ஏர் இந்தியா பிராண்ட் பெயரில் கொடுக்க முடியும்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிலவரம்
இந்த இணைப்பிற்குப் பின்பு விஸ்தாரா, ஏர் ஏசியா இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய பிராண்டுகளின் பெயர்கள் நீக்கப்படும். இந்த இணைப்புக்குப் பின்பு ஏர் இந்தியா நிறுவனத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 20-25 சதவீத பங்குகளை வைத்திருக்கக் கூடும். தற்போது விஸ்தாரா நிறுவனத்தில் 49 சதவீத பங்குகளை வைத்துள்ளது.
217 விமானங்கள்
தற்போதைய நிலவரப்படி ஏர் இந்தியாவில் 111 விமானங்களும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்-ல் 24 விமானங்களும், விஸ்தாராவில் 54 விமானங்களும், ஏர் ஏசியா இந்தியாவில் 28 விமானங்களையும் கொண்டு உள்ளது. இதன் மூலம் மொத்தம் 217 விமானங்கள் உடன் இந்தியா முழுவதும் உள்நாட்டு சேவையும், தெற்காசியா, அரபு நாடுகள், ஐரோப்பா, அமெரிக்கா வரையிலான வெளிநாட்டு விமானச் சேவையும் ஓரே நிறுவனத்தால் அளிக்க முடியும்.