இந்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா சன்ஸ் நிறுவனமான டேலெஸ் பெரும் போராட்டத்திற்குப் பின்பு கைப்பற்றிய நிலையில், ஏர் இந்தியா இழந்த பெருமை, வர்த்தகம், வாடிக்கையாளர்கள், ஆதிக்கம் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும் என ரத்தன் டாடா முடிவு செய்துள்ள நிலையில் சந்திரசேகரன் தலைமையிலான நிர்வாகம் அதிரடியாகக் களத்தில் இறங்கியுள்ளது.
விமானப் போக்குவரத்துத் துறை
இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறை தான் அடுத்து வேகமாக வளரும் துறையாகப் பார்க்கப்படும் நிலையில் தான் சில மாதங்களுக்கு முன்பு கௌதம் அதானி, சில வாரங்களுக்கு முன் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, தற்போது டாடா குழுமம் எனப் பலரும் இத்துறையில் இறங்கி வருகின்றனர்.
டாடா சன்ஸ் டேலெஸ்
வெள்ளிக்கிழமை மத்திய அரசு ஏர் இந்தியாவின் ஏலத்தில் டாடா சன்ஸ் குழுமம் 2020ல் உருவாக்கிய டேலெஸ் நிறுவனம் சுமார் 18,000 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்குள் அதுவும் விடுமுறை நாட்களில் முக்கியமான டீம்-ஐ உருவாக்கியுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம்
ஏர் இந்தியா நிறுவனத்தை அரசு கட்டுப்பாட்டில் இருந்து டாடா கட்டுப்பாட்டிற்கு விரைவாகக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவும், அதேவேளையில் ஏர் இந்தியா சேவையை விரைவாகத் துவங்க வேண்டும் என்பதற்காகத் தற்காலிகமாக ஒரு புதிய குழுவை உருவாக்கியுள்ளது.
டாடா-வின் A டீம்
இப்புதிய A டீம்-ல் டாடா குரூப் அதிகாரிகள், சர்வதேச ஏவியேஷன் வல்லுனர்கள், ஏர் இந்தியா-வின் உயர் அதிகாரிகள் ஆகியோர் உள்ளனர். இக்குழுவின் திட்டம், ஏர் இந்தியா-வை எப்படி விரைவாக டாடா நிர்வாகத்தின் கீழ் சேவைக்குக் கொண்டு வருவது என்பது குறித்து ஆய்வு செய்ய உள்ளது.
ஏர் ஏசியா மற்றும் விஸ்தாரா
டாடா குழுமத்தின் கீழ் ஏற்கனவே ஏர் ஏசியா மற்றும் விஸ்தாரா ஆகிய இரு விமானச் சேவை நிறுவனங்கள் இருக்கும் நிலையில் தற்போது புதிதாக ஒரு ஏர் இந்தியா-வை டாடா வாங்கியுள்ளது. இதில் விஸ்தாரா நிறுவனம் டாடா மற்றும் சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் ஆகியோரின் முதலீட்டில் இயங்கி வருகிறது.
டேலெஸ் நிறுவனம்
இதன் மூலம் டேலெஸ் நிறுவனத்தின் கீழ் ஏர் இந்தியா மற்றும் ஏர் ஏசியா ஆகிய இரு நிறுவனங்களும் செயல்பட உள்ளது. மேலும் டாடா குழுமம் உருவாக்கிய இந்த A Team தான் ஏர் இந்தியா நிர்வாகத்தை மொத்தமாக அரசிடம் இருந்து கைப்பற்றி டாடாவிடம் கொடுக்கும் பணிகளைச் செய்ய உள்ளது.
நவம்பரில் ஒப்பந்தம்
ஏர் இந்தியா ஏலத்தில் டாடா சன்ஸ் வெற்றிபெற்றுள்ளது என அதிகாரப்பூர்வ அறிவிப்புச் செய்யப்பட்டாலும் நவம்பர் மாதத்தில் தான் ஏர் இந்தியா விற்பனை குறித்து டாடா மற்றும் மத்திய அரசுக்கு மத்தியில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
18,000 கோடி ரூபாயை
இதற்கிடையில் டாடா சன்ஸ் அறிவித்துள்ள 18,000 கோடி ரூபாயை மத்திய அரசு-க்கு அளிக்க வேண்டும். இதில் 2700 கோடி ரூபாய் நேரடியாகப் பணமாக அறிவிக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 15,300 கோடி ரூபாயைக் கடனாக வங்கிகளில் பெற்று டாடா சன்ஸ் அரசுக்கு அளிக்க உள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
இந்த 15,300 கோடி ரூபாய் அளவிலான கடனை அரசுக்கு செலுத்த டாடா சன்ஸ் தற்போது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உட்படப் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வங்கிகளுடன் டாடா குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
யார் தலைவர்?
ஆட்டோமொபைல் முதல் ஏவியேஷன் வரையில் இருக்கும் டாடா குழுமம் ஏர் இந்தியா - ஏர் ஏசியா ஆகிய இரு நிறுவனங்கள் டேலெட்ஸ் நிறுவனத்திற்குள் வர உள்ள நிலையில், ஏர் இந்தியா கைப்பற்றலுக்குப் பின்பு இந்த நிறுவனத்திற்குத் தலைவர் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.