இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தைக் கடந்த 5 வருடமாக டிசிஎஸ்-ன் முன்னாள் சிஇஓ-வான சந்திரசேகரன் தலைவராகப் பதவியேற்றி நிர்வாகம் செய்து வருகிறார். இவரது நிர்வாகத்தின் கீழ் டாடா குழுமம் பல முக்கிய மாற்றங்களையும் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது.
டாடா சன்ஸ் தலைவர் பதவியில் மீண்டும் சந்திரசேகரன் நியமிக்கப்படுவாரா என்று அனைவரும் எதிர்பார்த்து வரும் நிலையில் ரத்தன் டாடா மிக முக்கியமான முடிவை எடுத்துள்ளார். ரத்தன் டாடாவின் இப்புதிய முடிவு முதலீட்டாளர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதற்கு டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் செப்டம்பர் 15ஆம் தேதி மாலையில் விளக்கம் கொடுத்துள்ளார்.
டாடா சாம்ராஜ்ஜியம்
டாடா குழுமத்தின் கீழ் 10 துறையில் சுமார் 30 நிறுவனங்கள் 100 நாடுகளில் இயங்கி வரும் மாபெரும் நிறுவனம். உப்புத் தயாரிப்பில் இருந்து விமானத் தயாரிப்பு வரையில் பல துறையில் இயங்கி வரும் ஒட்டுமொத்த நிறுவனங்களின் ஹோல்டிங் நிறுவனம் தான் டாடா சன்ஸ். இந்த டாடா சன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் தான் சந்திரசேகரன்.
டாடா சன்ஸ்
டாடா சன்ஸ் நிறுவனத்தில் கடந்த 20 வருடங்களாகத் தலைவர்கள் மாறினாலும் நிர்வாக முறையில் எவ்விதமான மாற்றமும் இல்லை. இந்த வேளையில் டாடா சன்ஸ் இதுநாள் வரையில் ஒற்றைத் தலைமை அதாவது சேர்மன் தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்த நிலையில், தற்போது புதிதாக சிஇஓ பதவியை உருவாக்கத் திட்டமிடப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
புதிதாகச் சிஇஓ பதவி
சிஇஓ பதவி உருவாக்குவதன் மூலம் கார்ப்பரேட் நிர்வாகம் மேம்படுவது மட்டும் அல்லாமல், வர்த்தகத்தை இன்னும் வேகமாக நிர்வாக வளர்ச்சி அடைய முடியும் என நம்பப்படுகிறது. மேலும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் சிஇஓ தான் 153 வருடமாக இயங்கி வரும் டாடா குழுமத்தின் வர்த்தகத்தை வழிநடத்துவார் என்றும் தெரிகிறது.
டாடா சன்ஸ் சேர்மன்
இதேவேளையில் டாடா சன்ஸ் நிறுவனத்தில் ஏற்கனவே இருக்கும் சேர்மன் பதவியும் தொடரும் என்றும் கூறப்படுகிறது. இந்த இரட்டை தலைமை நிர்வாக அமைப்பு மூலம் சேர்மன் பங்குதாரர் நலன்களையும், சிஇஓ நிறுவனத்தின் வளர்ச்சிப் பொறுப்புகளையும் ஏற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
ரத்தன் டாடா
இந்த முக்கிய நிர்வாக மாற்றத்திற்கு டாடா டிரஸ்ட் அமைப்பின் உரிமையாளர் ரத்தன் டாடா தான் காரணம் என்றும், இவரின் ஒப்புதலின் அடிப்படையில் தான் இந்த நிர்வாக மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் பெயர் வெளியிட விரும்பாத டாடா குழும உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
சந்திரசேகரன் பதவி
மேலும் டாடா சன்ஸ் தலைவராக இருக்கும் சந்திரசேகரனின் பதவி காலம் பிப்ரவரி மாதம் முடிவடையும் வேளையில் இவருக்கு மீண்டும் பணி நீட்டிப்புச் செய்ய ஒப்புதல் அளிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள இரட்டை நிர்வாக முறையில் முதற்கட்ட ஒப்புதல் மட்டுமே பெற்றுள்ள நிலையில், இறுதி முடிவையோ அல்லது நடைமுறையோ செய்யப்படவில்லை.
ரத்தன் டாடா பதவி யாருக்கு
இதேபோல் 83 வயதாகும் ரத்தன் டாடா தலைமை வகிக்கும் டாடா டிரஸ்ட் அதாவது டாடா குடும்பத்தின் நிறுவனம், இந்த நிறுவனத்தை ரத்தன் டாடாவுக்குப் பின்பு யார் நிர்வாகம் செய்யப்போகிறார் என்பதை இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளது.
டாடா டிரஸ்ட் ஆதிக்கம்
1868ஆம் ஆண்டில் இருந்து இயங்கி வரும் டாடா குழுமத்தின் 66 சதவீத பங்குகள் டாடா டிரஸ்ட் நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்குக் கீழ் தான் உள்ளது. டாடா சன்ஸ் ஹோல்டிங் நிறுவனமாக இருந்தாலும் டாடா குழுமத்தின் உரிமையாளராக டாடா டிரஸ்ட் விளங்குகிறது.
டாடா சன்ஸ் இரட்டை நிர்வாகக் கட்டமைப்பு
டாடா சன்ஸ் நிறுவனத்தில் சிஇஓ பதவி உருவாக்கப்பட்டது மூலம் வர்த்தகத்தைச் சிஇஓ கவனித்துக்கொள்ளும் நிலையில், சேர்மன் பதவி மூலம் பங்குதாரர்கள் நலனை காக்கும் பணி கொடுக்கப்பட்டு உள்ளது. இந்தச் சூழ்நிலையில் டாடா டிரஸ்ட் தலைவர் பதவி முக்கியப் பங்கு வகிக்கிறது.
சந்திரசேகரன் நிலை என்ன..?
இதேபோல் டாடா டிர்ஸ்ட் தலைவர் பதவியும், டாடா சன்ஸ் சேர்மன் பதவியும் ஓரே நபருக்கு செல்லவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் டாடா குடும்ப உறுப்பினர் அல்லாமல் இதுவரை யாரும் டாடா டிரஸ்ட் தலைவர் பதவியில் இருந்தது இல்லை என்பதால் வெளி ஆட்களுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.
இந்த நிலையில் டாடா குழுமத்தின் உயர்மட்டத்தில் இருக்கும் தமிழரான சந்திரசேகரனின் நிலை என்ன..?
சந்திரசேகரன் விளக்கம்
இந்த செய்தி டாடா குழும முதலீட்டாளர்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த இந்திய வர்த்தக சந்தையையும் புரட்டி போட்டது. இதை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு இன்று மாலை சந்திரசேகரன் அவர்கள் டாடா சன்ஸ் நிர்வாக பொறுப்பில் எவ்விதமான மாற்றமும் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என முற்றுப்புள்ளி வைத்தார்.