இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் டாடா குழுமம் கடும் போட்டிக்கு மத்தியில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை ஏலத்தின் மூலம் கைப்பற்றியது. இந்நிலையில் வருகிற டிசம்பர் மாதம் ஏர் இந்தியா மொத்தமாக டாடா சன்ஸ் கட்டுப்பாட்டிற்குக் கொடுக்கப்பட உள்ளதாக DIPAM செயலாளர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ஏர் இந்தியா-வை கைபற்றிய கையோடு மிகப்பெரிய நிறுவனமாக மாற்ற வேண்டும் என்ற திட்டத்தில் டாடா ஆரம்பம் முதலே இருந்த நிலையில் தற்போது முக்கிய இணைப்புத் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
டாடா குழுமம்
டாடா குழுமத்தின் கீழ் ஏற்கனவே ஏர் ஏசியா மற்றும் விஸ்தாரா என்ற இரு முக்கிய விமானச் சேவை நிறுவனங்கள் இருக்கும் நிலையில் 3வதாகத் தற்போது ஏர் இந்தியா வருகிறது. இதேவேளையில் இந்தியாவில் விமானப் போக்குவரத்து சேவையைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
ஏர் இந்தியா
இப்படியிருக்கையில் டாடா குழுமம் ஏர் இந்தியாவை ஆரம்பம் முதலே சிறப்பாகவும், அதிகப்படியாகவும் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இதன் வாயிலாக மேம்படுத்தப்பட்ட நிர்வாகத்தை ஏர் இந்தியாவுக்கு அளிக்க வேண்டும் என்பதற்காக டாடா முக்கிய இணைப்புத் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
விமானச் சேவை
டாடா குழுமத்தில் இருக்கும் மலிவு விலை விமானச் சேவை நிறுவனமான ஏர் ஏசியா இந்தியா-வையும், பட்ஜெட் விமானச் சேவை நிறுவனமான ஏர் இந்தியாவின் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பிரிவை இணைக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இரு நிறுவனத்தைச் சிறப்பாக நிர்வாகம் செய்வது மட்டும் அல்லாமல் அதிகப்படியான செலவுகளும் குறைக்கப்படும்.
பங்கு இருப்பு
ஏர் ஏசியா இந்தியாவில் டாடா குழுமம் சுமார் 84 சதவீத பங்குகளை வைத்துள்ளது, இதனால் இணைப்பு திட்டத்திற்கான முடிவை உடனடியாக எடுத்துள்ளது. ஆனால் விஸ்தாரா நிறுவனத்தில் டாடா குழுமம் 5 சதவீத பங்குகளை மட்டும் வைத்துள்ளது. மீதமுள்ள பங்குகள் தனது கூட்டணி நிறுவனமான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வைத்துள்ளது.
இணைப்பு
ஏர் இந்தியாவுடன் விஸ்தாரா-வை இணைக்கத் தற்போது டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மத்தியில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தை சாத்தியப்படும் பட்சத்தில் ஏர் ஏசியா, விஸ்தாரா, ஏர் இந்தியா 3 நிறுவனங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு நாட்டின் மிகப்பெரிய விமானச் சேவை நிறுவனமாக உருவெடுக்க அதிக வாய்ப்பு உள்ளது.
ஏர் ஏசியா, விஸ்தாரா, ஏர் இந்தியா
ஏர் இந்தியாவிடம் இருக்கும் ஊழியர்கள், விமானங்கள் மற்றும் உலக நாடுகளில் இருக்கும் பார்கிங் ஸ்லாட் ஆகியவை ஏர் ஏசியா மற்றும் விஸ்தாரா வளர்ச்சிக்குப் பெரிய அளவில் உதவும். இதேபோல் ஏர் ஏசியா மற்றும் விஸ்தாராவின் நிர்வாகம் ஏர் இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும்.