இந்திய அரசுக்கு சொந்தமான விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமான ஏர் இந்தியா, பல ஆண்டுகளாக அதீத கடனிலும், தொடர் நஷ்டத்திலும் இயங்கி வரும் நிலையில், மோடி தலைமையிலான மத்திய அரசு ஏர் இந்தியாவை விற்பனை செய்ய முடிவு செய்தது.
மத்திய அரசு ஏர் இந்தியாவை விற்பனை செய்யப் பல வருடங்களாக முயற்சி செய்து தோலேவி அடைந்த நிலையில், 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த ஏலத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமத்தின் டேலெஸ் நிறுவனம் சுமார் 18000 கோடி ரூபாய்க்குக் கைப்பற்றியது.
இதன் மூலம் 69 ஆண்டுகளுக்கு இந்திய அரசுக்குக் கொடுக்கப்பட்ட டாடா ஏர்லையன்ஸ் தற்போது ஏர் இந்தியா என்ற பெயருடன் மீண்டும் தாய் வீட்டுக்குத் திரும்பியுள்ளது. நேற்று மத்திய அரசுக்கும் டாடா குழுமத்திற்கு மத்தியிலான சந்திப்பில் அதிகாரப்பூர்வமாக ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்தின் முழுக் கட்டுப்பாட்டிற்கு மத்திய அரசு கொடுத்துள்ளது.
இந்நிலையில் டாடா குழுமம் தற்போது ஏர் இந்தியா நிர்வாகத்தில் புதிய மாற்றங்களைச் செய்யத் துவங்கியுள்ளது.
நிபுன் அகர்வால்
ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் நிர்வாகம் முழுமையாக டாடா குழுமத்தின் கையில் வந்துள்ள நிலையில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் உயர் துணைத் தலைவரான நிபுன் அகர்வால் ஏர் இந்தியா நிர்வாகக் குழுவின் தலைவராகவும், ஏர் இந்தியா நிர்வாகத்தை வழிநடத்துபவராகவும் இருக்க உள்ளார்.
4 ஏர் இந்தியா தலைவர்கள்
மேலும் டாடா சன்ஸ் நிர்வாகம், ஏர் இந்தியா மேனேஜ்மென்ட் கமிட்டியில் இருக்கும் 4 ஏர் இந்தியா தலைவர்கள் தொடர்ந்து பணியாற்ற உள்ளனர். நிதித்துறைத் தலைவர் வினோத் ஹெஜ்மாடி, வர்த்தகப் பிரிவு தலைவர் மீனாட்சி மாலிக், HR பிரிவு தலைவர் அமிர்தா சரண், ஆப்ரேஷன்ஸ் தலைவர் ஆர்எஸ் சந்து ஆகியோர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
அதிரடி மாற்றம் இல்லை
இந்த 4 உயர் அதிகாரிகளும் ஏர் இந்தியாவின் நிர்வாகக் குழுவுடன் இணைந்த ஏர் இந்தியா நிர்வாகத்தை இயக்க உள்ளது. மேலும் புதிய தலைவர்கள், சிஇஓ ஆகியோர் நியமிக்கப்பட்ட பின்பு இவர்கள் வெளியேற்றப்படவும் வாய்ப்பு உள்ளது. தற்போது டாடா குழுமம் ஏர் இந்தியாவில் எவ்விதமான அதிரடி மாற்றத்தையும் செய்ய விரும்பவில்லை.
விக்ரம் தேவ் தத்
ஜனவரி 18ஆம் தேதி ஏர் இந்தியா அசர்ட் ஹோண்டிங் நிறுவனத்தின் தலைவராக விக்ரம் தேவ் தத் சேர்மன் மற்றும் நிர்வாகத் தலைவராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஏர் இந்தியாவில் முக்கிய மாற்றங்கள்
டாடா குழுமத்திடம் ஏர் இந்தியா நிர்வாகம் முழுமையாக வந்துள்ள காரணத்தால் ஆன் டைம் சேவை, விமானக் கிளம்பும் நேரத்திற்கு 10 நிமிடம் முன்னதாக கேட் க்ளோசிங், மேம்படுத்தப்பட்ட உணவு சேவைகளை வழங்க முடிவு செய்துள்ளது டாடா குழுமம். மேலும் கேபின் க்ரூ முதல் பயணிகள் உடன் நேரடியாகச் சந்திக்கும் அனைவரும் சரியான உடை அணிய டாடா குழுமம் ஏர் இந்தியா ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.