டாடா குழும நிறுவனங்களின் மிகப்பெரிய பங்கு உரிமையாளர் நிறுவனமான டாடா சன்ஸ்-ன் தலைவராக என்.சந்திரசேகரன் பொறுப்பேற்ற உடன் எடுத்த முக்கியமான முடிவு டாடா குழுமம் டிசிஎஸ் நிறுவனத்தை மட்டுமே அதிகப்படியான லாபத்திற்கும், வருமானத்திற்கும் நம்பியிருக்கக் கூடாது என்பது தான்.
இதை மிகவும் குறுகிய காலகட்டத்திலேயே சாதித்துள்ளார் சந்திரசேகரன்.
டாடா குழுமம்
டாடா குழுமத்தின் வரலாறு பற்றி அறிந்த அனைவருக்குமே தெரியும் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் ஆதிக்கமும், அதன் வருமானமும். ஆனால் கடந்த சில வருடங்களாகவே டாடா ஸ்டீல் பெரிய அளவில் வர்த்தகத்தைப் பெறாமல் சில காலாண்டுகளிலும் நஷ்டத்தை எதிர்கொண்டது.
டாடா ஸ்டீல்
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் சரிவு காலத்தில் டாடா குழுமத்திற்குக் கைகொடுத்தது டிசிஎஸ் நிறுவனம் தான். ஆனால் சந்திரசேகரன் நிர்வாகத்தின் கீழ் கிட்டதட்ட 10 வருடங்கள் தொடர்ந்து ஆதிக்கம் செய்து வந்த டிசிஎஸ் நிறுவனத்தை விடவும் டாடா ஸ்டீல் அதிக லாபத்தைக் கொடுக்கும் அளவிற்கு உயர்த்தியுள்ளார்.
பணவீக்கம், போட்டி
கொரோனா தொற்றுக் காரணமாக உலகம் முழுவதும் அதீத தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டு இருந்த நாணய கொள்கையின் வாயிலாக ஐரோப்பா, அமெரிக்காவில் அதிகப்படியான பணவீக்கம் பதிவானது. இதனால் பல நுகர்வோர் பொருட்களின் விலை உச்சத்தை அடைந்தது. இதேவேளையில் டெக் சேவை துறையில் போட்டிகள் அதிகமாகக் காரணத்தால் குறைவான தொகைக்குச் சேவை அளிக்க வேண்டிய கட்டாயம் உருவானது.
ஸ்டீல் விலை
இதன் வாயிலாக ஸ்டீல் தயாரிப்புகளின் விலையும் அதிகமான காரணத்தாலும், கட்டுமானம் மற்றும் உற்பத்தி துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் ஸ்டீல் பொருட்களுக்கு டிமாண்ட் அதிகமாக இருந்த காரணத்தாலும் டாடா ஸ்டீல் அதிகப்படியான வர்த்தகத்தையும் லாபத்தைப் பெற்ற முடிந்தது.
சந்திரசேகரன்
இதற்கு ஏற்றார் போல் சந்திரசேகரன் தலைமையில் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பல நிர்வாகச் சீர்திருத்தம், உற்பத்தி மேம்படுத்துவதற்கான முதலீடுகள், வர்த்தகத்தை மேம்படுத்தும் பணிகள், நஷ்டத்தை ஏற்படுத்தும் பிரிவுகளில் தனிப்பட்ட கவனம் ஆகியவற்றை அளித்தது.
10 ஆண்டு டிசிஎஸ் ஆதிக்கம்
இதன் மூலம் டாடா ஸ்டீல் நிறுவனம் எப்போதும் இல்லாத வகையில் டிசிஎஸ் நிறுவனத்தை விடவும் அதிகப்படியான லாபத்தை இந்த 2022ஆம் நிதியாண்டில் பதிவு செய்து 10 ஆண்டு டிசிஎஸ் ஆதிக்கத்தை உடைத்துள்ளது.
லாபம்
2022ஆம் நிதியாண்டில் டிசிஎஸ் மொத்த லாபமாக 38,327 கோடி ரூபாய் பெற்று இருந்த நிலையில், டாடா ஸ்டீல் 41,749 கோடி ரூபாய் பெற்று அசத்தியுள்ளது. ஆனால் சந்தை மதிப்பீட்டை பார்க்கும் போது தலைகீழாக உள்ளது. டிசிஎஸ் 13 லட்சம் கோடி ரூபாய்க்கு மதிப்பீடு செய்யப்படும் நிலையில் ஆசியாவின் மிகவும் பழமையான டாடா ஸ்டீல் நிறுவனம் வெறும் 1.6 லட்சம் கோடி ரூபாய்க்கு மதிப்பிடப்படுகிறது.
75000 ரூபாய்
மார்ச் காலாண்டில் ஒரு டன் ஸ்டீல் விலை 75000 ரூபாயை தாண்டிய காரணத்தால் அதிகப்படியான லாபத்தையும் வருமானத்தையும் டாடா ஸ்டீல் பெற்று வருகிறது. ரஷ்யா உக்ரைன் போர், அதிகப்படியான நிலக்கரி விலை ஆகியவை ஸ்டீல் விலையை அதிகரித்துள்ளது.