இந்தியாவின் முன்னணி ஸ்டீல் கம்பெனிகளில் ஒன்றான டாடா ஸ்டீல், தன் மார்ச் 2020 காலாண்டு முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது.
டாடா ஸ்டீல் கம்பெனியின் மார்ச் 2020 காலாண்டில் 1,096 கோடி ரூபாயை நிகர நஷ்டமாகக் காட்டி இருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு மார்ச் 2019- காலாண்டில், டாடா ஸ்டீல் 2,430 கோடி ரூபாய் நிகர லாபம் காட்டியது குறிப்பிடத்தக்கது.
ஒட்டு மொத்தமாக டாடா ஸ்டீல் கம்பெனியின் கன்சாலிடேட்டட் வருவாய் 33,769 கோடி ரூபாயாகச் சரிந்து இருக்கிறது. இதற்கு முந்தைய ஆண்டு மார்ச் 2019 காலாண்டில் வருவாய் 42,423 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக டாடா ஸ்டீலின் வருவாய் மார்ச் 2019 காலாண்டை விட, மார்ச் 2020 காலாண்டில் 20 % சரிந்து இருக்கிறது.
டாடா ஸ்டீல் கம்பெனி பங்குகளின் சாதாரண பங்குகளுக்கு 10 ரூபாய் ஈவுத் தொகையும், பகுதி மட்டுமே பணம் செலுத்தி இருக்கும் சாதாரண பங்குகளுக்கு 2.504 ரூபாய் ஈவுத் தொகையும் கொடுப்பதாகச் சொல்லி இருக்கிறது கம்பெனி.
டாடா ஸ்டீல் கம்பெனியின் உற்பத்தி, கன்சாலிடேட்டடாக, கடந்த காலாண்டை விட இந்த காலாண்டில் 5 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறதாம். இந்தியாவில் டாடா ஸ்டீல் உற்பத்தி, கடந்த காலாண்டை விட இந்த காலாண்டில் 6 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறதாம்.
கொரோனா வைரஸ் தாக்கத்தினால், உலகம் முழுக்க டாடா ஸ்டீல் கம்பெனியின் உற்பத்தி சார் வேலைகள், பல்வேறு காலகட்டத்தில், மெல்ல குறைத்து இருக்கிறார்களாம். அதோடு, டாடா ஸ்டீல் கம்பெனியின் விற்பனையிலும், கொரோனா வைரஸின் தாக்கம் இருப்பதாவும் சொல்லி இருக்கிறது.
2019 - 20 நிதி ஆண்டு ஒரு சவாலான நிதி ஆண்டு தான். கடந்த நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் (ஏப்ரல் 2019 - செப்டம்பர் 2019), இந்தியப் பொருளாதாரம் மந்தமாகவே இருந்தது. அதிகம் ஸ்டீல்களை பயன்படுத்தும் ஆட்டோமொபைல் போன்ற துறைகள் வியாபாரம் செய்ய முடியாமல் திணறியதை சுட்டிக் காட்டுகிறாது டாடா ஸ்டீல் கம்பெனி.
ஒரு வழியாக மெல்ல, 2019 - 20 நிதி ஆண்டின், இரண்டாவது அரையாண்டில் தேறத் தொடங்கிய பொருளாதாரத்தை, கொரோனா வைரஸ் வந்து மீண்டும் சிதைத்துக் கொண்டிருப்பதாகச் சொல்கிறது டாடா ஸ்டீல் கம்பெனி.