இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் டாடா, நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் வர்த்தகத்தில் நுழைய வேண்டும் என முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக டாடா குழுமத்தில் இருக்கும் அனைத்து ரீடைல் வர்த்தகங்களையும் ஆன்லைன் விற்பனை தளத்திற்குக் கொண்டு வரும் பணிகளை மிகவும் தீவிரமாகச் செய்து வருகிறது.
இதேவேளையில் டாடா குழுமத்தின் இல்லாத வர்த்தகத்தைத் தனது சூப்பர் ஆப்-ல் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவும், புதிய வர்த்தகப் பிரிவை அறிமுகம் செய்ய வேண்டும் என்பதற்காகவும் சந்தையில் இருக்கும் முன்னணி நிறுவனங்களைக் கைப்பற்றி வருகிறது. இதன் வாயிலாகத் தான் பிக்பேஸ்கட், 1MG ஆகிய நிறுவனங்களைக் கைப்பற்றும் பணிகளைச் செய்து வருகிறது.
இந்நிலையில் டாடா குழுமம் தற்போது லோக்கல் டிஸ்கவரி தளமான ஜஸ்ட் டயல் நிறுவனத்தைக் கைப்பற்றப் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டாடாவின் அதிரடிகள்
இந்திய ஆன்லைன் ரீடைல் சந்தையில் ஜியோமார்ட், அமேசான், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் உடன் போட்டிப் போட்ட வேண்டும் எனத் திட்டமிட்டுள்ள டாடா, ஷாப்பிங், நிதியியல் சேவை, என அனைத்து ரீடைல் மற்றும் டிஜிட்டல் சேவைகளை ஓரே இடத்தில் கொடுக்க வேண்டும் என்பதற்காகச் சூப்பர் ஆப் தயாரிக்கும் பணியில் தீவிரமாக உள்ளது.
JDமார்ட் - புதிய வர்த்தகம்
இந்நிலையில் ஜஸ்ட் டயல் நிறுவனம் லோக்கல் டிஸ்கவரி தளமாக மட்டும் இருக்கக் கூடாது என முடிவு செய்து, சில நாட்களுக்கு முன்பாக JDமார்ட் என்ற புதிய B2B வர்த்தகத் தளத்தை அறிமுகம் செய்தது. இப்புதிய வர்த்தக விரிவாக்கம் டாடா குழுமத்திற்கு மிகவும் பிடித்துப்போகவே இந்நிறுவனத்தைக் கைப்பற்ற விருப்பம் தெரிவித்து ஜஸ்ட் டயல் நிறுவனத்தைக் கைப்பற்றப் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது.
ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை
இரு நிறுவனங்களுக்கு மத்தியிலான பேச்சுவார்த்தை ஆரம்பக்கட்டத்தில் மட்டுமே இருக்கிறது என்பதால் பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்திற்குச் செல்லவும் வாய்ப்பு உள்ளது, இதேவேளையில் தோல்வி அடையவும் வாய்ப்பு உள்ளது. டாடா குழுமத்தின் திட்டம் குறித்து வெளியான செய்திகள் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஜஸ்ட் டயல் பங்குகள் வளர்ச்சி
இதன் எதிரொலியாக நேற்று வெறும் 874 ரூபாய் விலைக்கு வர்த்தகம் செய்யப்பட்ட ஜஸ்ட் டயல் நிறுவனப் பங்குகள் தொடர் வர்த்தக வளர்ச்சியின் காரணமாக இன்று 1,014 ரூபாய் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் இன்று காலை வர்த்தகத்திலும் தொடர் வளர்ச்சிப் பாதையில் இருக்கும் காரணத்தால் ஜஸ்ட் டயல் நிறுவன முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.