தமிழ்நாட்டை இந்தியாவின் முக்கிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தளமாக மாற்ற வேண்டும் என்ற திட்டத்தைத் தமிழ்நாடு கையில் எடுத்துள்ளது. இதற்காக ஊழியர்களுக்கு மட்டும் அல்லாமல் MSME நிறுவனங்களுக்கும் தொழில்நுட்ப பயிற்சிகள் கட்டாயம் தேவை.
குறிப்பாகத் தமிழ்நாட்டில் இருக்கும் MSME நிறுவனங்கள் உலக நாடுகளுக்குத் தேவையான பொருட்களைத் தயாரிக்க வேண்டும் என்றால் அடிப்படை தொழில்நுட்ப அறிவும், திறனும் தேவை.
இதைச் சாத்தியப்படுத்தத் தான் தமிழ்நாடு அரசு டாடா டெக்னாலஜிஸ் உடன் கூட்டணி வைத்துள்ளது.
ஒப்பந்தம்
தொழில் பயிற்சி நிறுவனங்களை (industrial training institutes) தொழில்நுட்ப மையங்களாக (technology centres) மாற்ற தமிழக அரசுடன் டாடா டெக்னாலஜிஸ் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசுடன் இணைந்து செயல்படுவது மூலம் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம் அதிகப்படியான சமூகத் தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும், நாட்டின் பொருளாதார மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கு உதவ முடியும்.
மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள்
மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் நவீனத் தொழில்நுட்ப மையங்களை நிறுவுவதன் மூலம் கல்வித் துறைக்கும் தொழில் துறைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க வேண்டும் என்பதற்காகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
உற்பத்தித் துறை
இத்திட்டம் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு உற்பத்தி துறையில் அதிகப்படியான அறிவையும், திறமைகளைப் புகுத்த முடியும், இது தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும் என டாடா டெக்னாலஜிஸ் லிமிடெட் சேர்மன் சுப்பிரமணியன் ராமதுரை தெரிவித்துள்ளார்.