டாடா குழுமத்தின் உலகளாவிய வர்த்தகம், நிறுவனங்கள், சொத்துக்கள் என அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமைப்பாக விளங்கும் டாடா டிரஸ்ட் அமைப்பிற்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
டாடா குழுமத்தில் இருக்கும் 100க்கும் அதிகமான நிறுவனங்களுக்கு ஹோல்டிங் நிறுவனமாக இருக்கும் டாடா சன்ஸ் நிறுவனத்தில் டாடா குடும்பத்திற்குச் சொந்தமான டாடா டிரஸ்ட் சுமார் 66 சதவீத பங்குகளைக் கொண்டு உள்ளது.
டாடா சன்ஸ் நிறுவனத்தை என்.சந்திரசேகரன் நிர்வாகம் செய்து வந்தாலும், டாடா சன்ஸ் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளிலும், முதலீடுகளிலும், வளர்ச்சியில் அதிகப்படியாகப் பங்கு கொண்ட டாடா டிரஸ்ட் அமைப்பின் புதிய தலைவர்கள் நியமனம் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.
டாடா டிரஸ்ட்ஸ்
இந்தியாவின் மிகப் பழமையான தொண்டு நிறுவனமாக விளங்கும் டாடா டிரஸ்ட்ஸ் அமைப்பின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக சித்தார்த் சர்மா-ம், தலைமை செயல் அதிகாரியாக அபர்ணா உப்பலூரி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். யார் இவர்கள்..? எதற்காக இப்புதிய நியமனம்..?
ஸ்ரீநாத் நரசிம்மன்
டாடா டிரஸ்ட் அமைப்பில் 2020ல் முதல் சிஇஓ பதவியில் இருந்த ஸ்ரீநாத் நரசிம்மன் ஓய்வு பெறுவதாக 2022 அக்டோபர் மாதம் அறிவித்த நிலையில் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரிக்கான தேடல் குழுமத்திற்குள் மற்றும் வெளியிலும் நடந்து வந்தது. இதற்கிடையில் தான் மெஹ்லி மிஸ்திரி டிரஸ்டி குழுவில் சேர்க்கப்பட்டார்.
புதிய தலைவர்கள்
இதை தொடர்ந்து பல மாத தேடலுக்கு பின்பு டாடா டிரஸ்ட்ஸ் அமைப்பின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக சித்தார்த் சர்மா-ம், தலைமை செயல் அதிகாரியாக அபர்ணா உப்பலூரி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சித்தார்த் சர்மா
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிலைத்தன்மை அதிகாரியாக பணியாற்றி வந்த (chief sustainability officer) சித்தார்த் சர்மா, கடந்த ஆண்டு அவர் ஓய்வு பெற்ற ஸ்ரீநாத் பதவியில் அமர உள்ளார். இவருக்கு வயது 54.
அபர்ணா உப்பலூரி
டாடா டிரஸ்ட்ஸ் முதல் முறையாக COO பதவியை உருவாக்கிய நிலையில் ஃபோர்டு அறக்கட்டளையில் தற்போது இந்தியா, நேபாளம் மற்றும் இலங்கைக்கான திட்ட இயக்குநராக இருக்கும் அபர்ணா உப்பலூரி இப்பதவியில் அமர்த்தப்பட்டு உள்ளார். இவருக்கு வயது 48ய
முந்தைய பணிகள்
சித்தார்த் சர்மா ஜூன் 2019 இல் டாடா சன்ஸ் நிறுவனத்தில் சேரும் முன்பு ஒரு முன்னாள் அரசு ஊழியராக இருந்தார். அபர்ணா உப்பலூரி நான்கு ஆண்டுகளாக ஃபோர்டு அறக்கட்டளையில் பணியாற்று வருகிறார்.
டாடா டிரஸ்ட்ஸ் சிஇஓ, சிஓஓ
டாடா டிரஸ்ட்ஸ் சிஇஓ பதவிக்கு டாடா குழுமத்தில் இருக்கும் அதிகாரியைத் தேர்வு செய்து செய்தாலும் COO பிரிவு அதிகாரியாக வெளியில் இருந்து புதிதாக ஒருவரை நியமித்துள்ளதன் மூலம் டாடா டிரஸ்ட் இயக்கம், நிர்வாகம் மிகவும் வேகமாக இருக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
மிஸ்திரி குடும்பம்
டாடா குழுமத்தில் டாடா குடும்பத்தைத் தாண்டி அதிகப் பங்குகளை வைத்திருப்பது மிஸ்திரி குடும்பம் தான் என அனைவருக்கும் தெரியும். மிஸ்திரி குடும்பம் டாடா குழும நிறுவனங்களின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தில் சுமார் 18.4 சதவீத பங்குகளை வைத்துள்ளது.
மெஹ்லி மிஸ்திரி
மிஸ்திரி குடும்பத்தில் இரு முக்கியமான நபர்களான பலோன்ஜி மிஸ்திரி, சைரஸ் மிஸ்திரி மறைந்த நிலையில் டாடா டிரஸ்ட் தனது நிர்வாகத்தைப் பலப்படுத்த மிஸ்திரி குடும்பத்தை சேர்ந்த 62 வயதான மெஹ்லி மிஸ்திரி-ஐ (Mehli Mistry) சார் டோராப்ஜி டாடா டிரஸ்ட் மற்றும் சார் ரத்தன் டாடா டிரஸ்ட் அமைப்புகளில் டிரஸ்டியாக அக்டோபர் மாத இறுதியில் சேர்த்தது.