இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் வர்த்தகத்தில் நுழைய வேண்டும் என்பதற்காக டாடா குரூப் பல முக்கியத் துறைகளில் இருக்கும் முன்னணி வர்த்தக நிறுவனத்தைக் கைப்பற்றும் திட்டத்தில் இறங்கியது. இந்த முக்கியமான திட்டத்தின் கீழ் டாடா குரூப் மளிகை பொருட்கள் விற்பனைக்காகப் பிக்பேஸ்கட் நிறுவனத்தையும், மருந்து பொருட்கள் விற்பனைக்காக 1MG நிறுவனத்தையும் கைப்பற்ற முடிவு செய்தது.
இந்தத் திட்டத்தின் படி டாடா குரூப் பிக்பேஸ்கட் நிறுவனத்துடன் பல மாதங்களாக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையின் கீழ் தற்போது முக்கியமான இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பேஸ்க்ட் நிறுவனம்
சீனாவின் முன்னணி டெக் நிறுவனமான அலிபாபா-வின் அதீத முதலீட்டில் இயங்கும் ஆன்லைன் மளிகை பொருட்கள் விற்பனை நிறுவனமான பிக்பேஸ்க்ட் நிறுவனத்தின் 68 சதவீத பங்குகளைச் சுமார் 9,500 கோடி ரூபாய் அதாவது 1.31 பில்லியன் டாலர் தொகைக்குக் கைப்பற்ற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜியோமார்ட்
இந்திய டிஜிட்டல் வர்த்தகச் சந்தையில் ஜியோமார்ட் அறிமுகமான சில மாதங்களிலேயே நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் தளமாக மாறியுள்ள நிலையில், ஜியோமார்ட் உடன் போட்டிப்போடும் வகையில் டாடா குழுமத்தின் கீழ் இருக்கும் அனைத்து ரீடைல் வர்த்தகத்தையும் டிஜிட்டல் தளத்திற்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளது டாடா.
டாடாவின் சூப்பர் ஆப்
இத்திட்டத்தின் படி டாடா தனது ரீடைல் வர்த்தகத்தை, டிஜிட்டல் வர்த்தகப் பிரிவுக்கு மொத்தமாகச் சூப்பர் ஆப் மூலம் கொண்டு வருவதன் மூலம் ஈகாமர்ஸ் துறையில் பெரிய அளவில் வளர்ச்சி அடையத் திட்டமிட்டுள்ளது. இந்த வர்த்தக முயற்சியில் பிக்பேஸ்கட் நிறுவனத்தின் சேவைகளை இணைக்க வேண்டும் என்பதே டாடா-வின் முடிவு.
பிக்பேஸ்கட் டீல்
இதற்காகச் சுமார் 13,500 கோடி ரூபாய் அளவில் மதிப்பிடு கொண்ட பிக்பேஸ்கட் நிறுவனத்தின் 68 சதவீத பங்குகளை 9,500 கோடி ரூபாய்க்குக் கைப்பற்ற உள்ளது டாடா. இந்தக் கைப்பற்றலுக்குப் பின் டாடா குழுமம் வர்த்தக விரிவாக்கத்திற்காகப் புதிதாக முதலீடும் செய்யத் திட்டமிட்டுள்ள குறிப்பிடத்தக்கது.
முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஜியோமார்ட் அறிமுகத்திற்குப் பின் தொடர்ந்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருவது மட்டும் அல்லாமல் பல நிறுவனங்களைக் கைப்பற்றித் தனது ஈகாமர்ஸ் வர்த்தகத்தைப் புதிய துறைகளில் விரிவாக்கம் செய்து வருகிறது.