டாடா குழுமத்திற்கு சொந்தமான Tata electronics நிறுவனம் தமிழ்நாட்டின் ஓசூர் மாவட்டத்தில் தன்னுடைய ஐபோன் உற்பத்தி ஆலையை நிறுவி செயல்படுத்தி வருகிறது. ஓசூர் மற்றும் தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தந்திருக்க கூடிய டாடாவின் ஐபோன் உற்பத்தி ஆலை மூடப்படலாம் என ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்தியாவில் 2 நிறுவனங்கள்தான் ஆப்பிள் நிறுவனத்திற்கான ஐபோன்களை உற்பத்தி செய்கின்றன. இந்த இரண்டு ஆலைகளுமே தமிழ்நாட்டில் அமைந்திருப்பது தான் தனி சிறப்பு. ஃபாக்ஸ் கான் நிறுவனம் சென்னையிலும் டாடா நிறுவனம் ஓசூரிலும் ஆலை அமைத்து ஐபோன்களை உற்பத்தி செய்கின்றன. இங்கே உற்பத்தி செய்யப்படும் ஐபோன்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

டாடாவின் ஓசுர் ஆலை ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறது. ஓசுரில் அமைக்கப்பட்டுள்ள ஆலையில் டாடா நிறுவனம் ஐபோன்களுக்கு தேவையான பேக் பேனல்கள் மற்றும் பிற முக்கியமான உபகரணங்கள் ,பாகங்களை உற்பத்தி செய்கிறது. இதற்கிடையே இந்த ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் அருகில் உள்ள வேளாண் நிலங்களை மாசுபடுத்துவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
எக்னாமிக் டைம்ஸ் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில் டாடா ஆலைக்கு அருகே விவசாய நிலம் கொண்டிருக்கக்கூடிய உரிமையாளர்கள் பல மாதங்களாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு புகார் அளித்து வருகிறார்களாம், ஆலையில் இருந்து வெளியேற்றப்படக்கூடிய கழிவுநீர் தங்களுடைய நிலத்தையும் தங்களுடைய திறந்தவெளி கிணறுகளையும் மாசுபடுத்துவதாக அவர்கள் புகார் கூறியிருக்கின்றனர்.
இதனை அடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இந்த மே வரையிலான 6 மாத காலத்தில் விவசாயிகள் புகார் தொடர்பாக ஐந்து மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகளை கொண்டு விசாரணை நடத்தப்பட்டதாம். இந்த விசாரணையில் டாடா ஆலையிலிருந்து கழிவுநீரானது ஆலைக்குள்ளேயே அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்பிற்குள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அது நிரம்பி அருகில் உள்ள பகுதிகளுக்கும் சென்றது தெரிய வந்துள்ளதாம்.
இதனால் நிலத்தடி நீர் மாசு படுவதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் டாடா நிறுவனத்திற்கு அனுப்பி உள்ள நோட்டீஸில் குறிப்பிட்டு இருக்கிறது. ஏற்கனவே டிசம்பர் மாதமே இது தொடர்பாக அறிக்கையை அனுப்பியும் டாடா நிறுவனம் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தற்போது மீண்டும் ஒருமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது என்கிறது அந்த செய்தி.
டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ராய்ட்டர்ஸுக்கு அளித்த பேட்டியில் சுயநிதி ஆய்வாளர்களைக் கொண்டு இந்த புகார்களுக்கு குறித்து ஆய்வு நடத்தப்பட்டதாகவும் தங்களுடைய நிறுவனம் அனைத்து விதிமுறைகளுக்கும் இணங்க சரியாக செயல்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது . பொறுப்பான தொழில் நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகளை தான் தங்களுடைய நிறுவனம் பின்பற்றி வருகிறது என்றும் கூறியிருக்கிறது. இதற்கிடையே மாசு கட்டுப்பாட்டு வாரியம் டாடா நிறுவனத்திற்கு அனுப்பியுள்ள நோட்டீஸி இந்த விதிமீறல்களுக்கு தண்டனையாக ஆலைக்கான மின் இணைப்பு துண்டிப்பு, ஆலைக்கு பூட்டு போன்ற நடவடிக்கைகளை ஏன் எடுக்க கூடாது என வினவி இருக்கிறதாம்.
திடீரென டாடா ஆலை மீது இந்த நடவடிக்கை எடுப்பது உடனே பல வேலைவாய்ப்புகள் பறி போக காரணமாக அமையும். எனவே பிரச்சினை விரைவில் சரி செய்யப்பட்டு ஆலை தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications

