இந்தியப் பொருளாதாரம் குறித்த செய்திகள் கடந்த சில மாதங்களாக, சர்வதேச செய்தி அளவில் இடம் பிடித்தன. காரணம் இந்தியாவில் இருக்கும் பொருளாதார மந்த நிலை.
இந்த மந்த நிலையை சரி செய்ய அரசு தரப்பு தன்னால் முடிந்த வரை அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது. உதாரணமாக தனி நபர் வரி குறைப்பு, கார்ப்பரேட் வரி குறைப்பு, பங்குச் சந்தைகளில் முதலீடு செய்து கிடைக்கும் லாபத்துக்கு செலுத்த வேண்டிய வரியை ரத்து செய்தது, வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுத்தது என மத்திய அரசு பம்பரமாக சுற்றிக் கொண்டிருக்கிறது.
ஆனால், மத்திய அரசு கையில் இப்போது வரை போதுமான காசு இல்லை. அதற்காகத் தான் மத்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து கூட, ரிசவ் தொகைகளைக் கணக்கிட்டுப் பெற்றுக் கொண்டது. ஆனால் இப்போது வரை சூழல் சரியானதாகத் தெரியவில்லை. மிக முக்கியமாக அரசு கஜானாவும், எதிர்பார்த்த அளவுக்கு வரி வருவாயால் நிறையவில்லை. அதற்கு திடீரென குறைத்த கார்ப்பரேட் வரி மற்றும் தற்போது நிலவும் பொருளாதார மந்த நிலை காரணமாகச் சொல்கிறார்கள்.
கார்பரேட் வரியைக் குறைத்ததால், அரசுக்கு நேரடியாக சுமார் 1.4 லட்சம் கோடி ரூபாய் வரி இழப்பு. அது போக, இந்தியாவில் நிலவும் பொருளாதார மந்த நிலை காரணமாக, வியாபாரம் சரியாக நடக்காமல் பல நிறுவனங்களில் லாபமும் குறைந்து இருக்கிறதாம். இதனாலும், அரசுக்கு வரும் வரி வருவாய் கணிசமாக குறைந்து இருக்கிறதாம். இதில் தனியார் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் என பாகுபாடே கிடையாது.
மத்திய அரசுக்கு வரும் நேரடி வரி வருவாயில் கார்ப்பரேட் வரி மற்றும் வருமான வரி என இரண்டு இருக்கின்றன. இந்த 2019 - 20 நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையான காலத்தில் கார்ப்பரேட் வரி விகிதம் 0.5 சதவிகிதம் மட்டுமே அதிகரித்து இருக்கிறதாம். அதே போல வருமான வரி இந்த ஏப்ரல் - அக்டோபர் காலத்தில் 5 சதவிகிதம் மட்டும் அதிகரித்து இருக்கிறதாம்.
இந்த 2019 - 20 நிதி ஆண்டில் 7.66 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரி, 5.69 லட்சம் கோடி ரூபாய் வருமான வரி, 6.63 லட்சம் கோடி ரூபாய் ஜி எஸ் டி வரி வசூலிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். ஆனால் போகிற போக்கைப் பார்த்தால் இந்த இலக்கை அடைவது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது. போதுமான வரி வருவாய் இல்லாமல் அரசு இன்னும் எவ்வளவு சிரமப்பட இருக்கிறதோ தெரியவில்லை.