இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிக்கத் துவங்கும் போது முதல் நிறுவனமாக ரிஸ்க் எடுத்து 100 சதவீத ஊழியர்களுக்கும் Work From Home கொடுத்து இந்திய ஐடி துறையில் புரட்சி செய்த டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள வேளையிலும் ஊழியர்களுக்கு வேக்சின் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ள நிலையிலும் ஊழியர்களைத் திரும்ப அழைத்துள்ளது.
இதேவேளையில் டிசிஎஸ் நிறுவனம் கொரோனா காலகட்டத்தில் உருவாக்கிய மிக முக்கியமான திட்டத்தையும் நடைமுறைப்படுத்தவும், அதற்கான பணிகளைத் துவங்க உள்ளதாகவும் அறிவித்துள்ள காரணத்தால் ஐடி ஊழியர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்
இந்தியாவின் முன்னணி ஐடி சேவை மற்றும் மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உட்பட அனைத்து ஐடி நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்க முடிவு செய்துள்ள நிலையில், டிசிஎஸ் அனைவருக்கும் முன்னோடியாக ஊழியர்களை டிசம்பர் மாதத்திற்குள் அழைக்க முடிவு செய்து உறுதியான முடிவை வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்று
இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வரும் காரணத்தால் டிசிஎஸ் சில வாரங்களுக்கு முன்பு நவம்பர் 15ஆம் தேதி முதல் அனைத்து ஊழியர்களையும் அலுவலகத்திற்கு அழைக்க முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
25/25 திட்டம்
இதேவேளையில் கொரோனா காலத்தில் டிசிஎஸ் உருவாக்கி 25/25 திட்டத்தையும் நிர்வாகத்தில் அமலாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இதன் படி 2025ஆம் ஆண்டுக்குள் டிசிஎஸ் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களும் 25/25 model கீழ் கொண்டு வரவும் டிசிஎஸ் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
ஊழியர்கள் பணி நேரம்
இத்திட்டத்தின் படி டிசிஎஸ் நிறுவனத்தின் அலுவலகங்களில் ஒரு நேரத்தில் மொத்த ஊழியர்களில் 25 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணியற்ற வேண்டும், இதேபோல் ஒரு ஊழியர்கள் எந்த வேளையிலும் 25 சதவீத பணி நேரத்திற்கு மேல் அலுவலகத்தில் பணியாற்றத் தேவையில்லை. இதனால் பெரும் பகுதி நேரம் ஊழியர் வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டும், இதேபோல் அலுவலகத்திற்கு அவ்வப்போது வர வேண்டிய கட்டாயமும் இருக்கும்.
டிசிஎஸ் செய்தி தொடர்பாளர்
டிசிஎஸ் நிறுவனத்தின் அலுவலகத்தில் தற்போது வெறும் 5 சதவீத ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்தில் இருந்து பணியாற்றி வருகிறார்கள், டிசம்பருக்குள் அல்லது 25/25 மாடல் திட்டத்தை அமலாக்கம் செய்யும் முன் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்க முடிவு செய்துள்ளோம் என டிசிஎஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார்.
ஹைப்ரிட் மாடல் முறை
இனி டிசிஎஸ் நிறுவனத்தில் ஹைப்ரிட் மாடல் முறை தான் செயல்பாட்டில் இருக்கும், நிறுவனத்தின் எதிர்காலத்தில் அலுவலகம் மற்றும் ரிமோட் வொர்கிங் இரண்டும் முக்கியப் பங்கு வகிக்க உள்ளது எனவும் டிசிஎஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.