இந்தியாவில் பாஸ்போர்ட் சேவையின் தரம் கடந்த 10 வருடத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது என்றால் மிகையில்லை.
பாஸ்போர்ட் விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்து, வெள்ளை பேக்கிரவுன்டில் போட்டோ எடுத்து அதைப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தில் ஒட்டி, மாநிலத்தில் இருக்கும் தலைமை தபால் அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று கொடுத்த காலத்தில் இருந்து இன்று, ஆன்லைன் விண்ணப்பம், டிராக்கிங், ஆன்லைன் அப்பாயின்ட்மென்ட் புக்கிங், எளிமையான மற்றும் மேம்பட்ட நேர்காணால், டிக்கெட்டிங் சிஸ்டம் எனப் பல வகையில் மேம்பட்டு உள்ளது.
தற்போது இந்திய அரசின் பாஸ்போர்ட் சேவையில் செய்யப்பட்டு உள்ள அனைத்தும் முதல்கட்ட பணிகள் மட்டுமே, 2ஆம் கட்ட பணிகளுக்கான திட்டத்தைச் செயல்படுத்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் (MEA) முடிவு செய்துள்ளது.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் (MEA) பாஸ்போர்ட் சேவா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தைச் செயல்படுத்த மீண்டும் நாட்டின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தைத் தேர்வு செய்துள்ளது. பாஸ்போர்ட் சேவா திட்டம் இன்றுவரை நாட்டின் மிகவும் கடினமான இ-கவர்னன்ஸ் திட்டமாக விளங்குகிறது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் பாஸ்போர்ட் சேவா திட்டத்தின் 2ஆம் கட்ட பணிகளைச் செய்யத் தேர்வு செய்துள்ள காரணத்தால் இன்னும் ஒன்பதரை ஆண்டுகளுக்கு இத்திட்டத்தை நிர்வகிக்கும். டிசிஎஸ் மற்றும் மத்திய அரசின் ஒப்புதல் படி இந்தக் காலகட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம்.
8,000 கோடி ரூபாய் திட்டம்
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனமோ, மத்திய அரசோ இந்த ஒப்பந்தத்தின் நிதி விவரங்களை வெளியிடாத நிலையில், மத்திய அரசின் இ-கவர்னன்ஸ் திட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வரும் சந்தை ஆய்வாளர்கள் இந்த ஒப்பந்தம் ரூ.6,000-8,000 கோடி வரை இருக்கலாம் என்று கணித்துள்ளனர்.
பாஸ்போர்ட் சேவா திட்டம்
பாஸ்போர்ட் சேவா திட்டத்தின் 2ஆம் கட்ட பணிகளில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் தற்போது பயன்பாட்டில் இருக்கும் சேவைகளை மேம்படுத்துவது மட்டும் அல்லாமல் பாஸ்போர்ட் வழங்குவதில் புதிய சேவைகளையும் மாற்றங்களையும் கொண்டு வர உள்ளது.
2ஆம் கட்ட பணிகள்
குறிப்பாக 2ஆம் கட்ட பணிகளில் இந்திய அரசு பாஸ்போர்ட்களைப் பயோமெட்ரிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, மேம்பட்ட டேட்டா அனலிட்டிக்ஸ், சாட்பாட்ஸ், ஆட்டோ ரெஸ்பான்ஸ், நேச்சுரல் லேன்குவேஜ் பிராசசிங் மற்றும் கிளவுட் சேவைகளையும் கொண்டு வர உள்ளது.
டேட்டா சென்டர்
மேலும் 2ஆம் கட்ட திட்டத்தில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் 3வது டேட்டா சென்டரை அமைக்கத் திட்டமிட்டு உள்ளது. முதல் கட்ட திட்டத்தில் ப்ரைமரி மற்றும் செக்கண்டரி டேட்டா சென்டரை அமைத்தது குறிப்பிடத்தக்கது.