முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தான் இந்தியாவின் நம்பர் 1 கம்பெனியாக இருந்தது. (சந்தை மதிப்பு அடிப்படையில்).
ஆனால் இன்று ரிலையன்ஸை ஓரம் தள்ளி, கபாலி ரஜினி போல "வந்துட்டேன்னு சொல்லி, திரும்பி வந்துட்டேன்னு சொல்லி" என டயலாக் பேசாமல் முதலிடத்தைப் பிடித்து இருக்கிறது.
அது எந்த கம்பெனி? என்ன ஆச்சு? சந்தை மதிப்பு என்றல என்ன..? என எல்லாவற்றையும் விரிவாகப் பார்ப்போம். முதலில் சந்தை மதிப்பில் இருந்து தொடங்குவோம்.
சந்தை மதிப்பு
இதை ஆங்கிலத்தில் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் என்போம். அப்படி என்றால் என்ன என்பதைப் பார்த்து விடுவோம். பங்குச் சந்தையில், பட்டியலிடப்பட்டு நிறுவனங்கள் வர்த்தகமாவதைப் பார்த்து இருப்போம். அப்படி வர்த்தகம் ஆகும் பங்குகளுக்கு ஒரு விலை இருக்கும். மொத்த பங்குகள் * ஒரு பங்கின் விலை = மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்
சுருக்கமாக சந்தை மதிப்பு
இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், ஒவ்வொரு நிறுவனத்துக்கும் மொத்த பங்குகளின் மதிப்பு (Market Capitalization) என ஒன்றைக் குறிப்பிடுவார்கள். ஒரு நிறுவன பங்கின் இன்றைய விலைக்கு, அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் விற்றால் என்ன கிடைக்குமோ அதைத் தான் மொத்த சந்தை மதிப்பு என்கிறோம்.
ரிலையன்ஸ் சரிவு
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கு விலை, கடந்த 20 டிசம்பர் 2019-ல் 1,617 ரூபாயைத் தொட்டது. ஆனால் இன்று ரிலையன்ஸின் பங்கு விலை சுமாராக 1,115-ல் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. ரிலையன்ஸ் பங்கு விலை உயர திணறியது என்றே சொல்லலாம். இன்று ஒரே நாளில் 166 ரூபாய் (13 சதவிகிதம்) சரிந்தது. ரிலையன்ஸின் உச்ச விலையான 1,617 ரூபாயில் இருந்து, கடந்த 3 மாத காலத்துக்குள் சுமாராக 502 ரூபாய் சரிந்து இருக்கிறது.
சந்தை மதிப்பு சரிவு
கடந்த, டிசம்பர் 2019-ல் ரிலையன்ஸின் சந்தை மதிப்பு சுமாராக 10 லட்சம் கோடி என்று வைத்துக் கொள்வோம். இப்போது 7.05 லட்சம் கோடி ரூபாய் தான் ரிலையன்ஸின் சந்தை மதிப்பாக இருக்கிறது. ஆக 10.00 - 7.05 = 2.95 லட்சம் கோடி ரூபாய் நம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு காணாமல் போய் இருக்கிறது.
நின்று விளையாடும் டிசிஎஸ்
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் பங்குகளும் சின்ன சின்ன விலை சரிவுகளைக் கண்டாலும், பெரிய விலை மாற்றங்களைக் காணவில்லை. எனவே டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 7.40 லட்சம் கோடியாகவே இருக்கிறது. எனவே தற்போது ரிலையன்ஸை பின்னுக்குத் தள்ளி டிசிஎஸ் "இந்தியாவிலேயே அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனம்" என்கிற பட்டத்தைப் பெற்று இருக்கிறது.