இந்தியாவில் ஐடி சேவை துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், முன்னணி நிறுவனங்கள் தொடர்ந்து வெளிநாட்டுச் சந்தையில் இருக்கும் வர்த்தகத்தைக் கைப்பற்ற மிகவும் ஆர்வமாகப் போட்டிப்போட்டு வருகிறது.
ஏற்கனவே கைப்பற்றிய திட்டத்தைச் செய்து முடிக்கப் போதுமான ஊழியர்கள் இல்லாமல் அதிகளவிலான தட்டுப்பாடு இருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீஸ் அமெரிக்க அரசின் மாபெரும் ஐடி சேவை திட்டத்தில் பெரும் பகுதியைக் கைப்பற்றக் களத்தில் இறங்கியுள்ளது.
அமெரிக்க அரசு திட்டம்
அமெரிக்க அரசின் நேஷ்னல் இன்ஸ்டியூட் ஆப் ஹெல்த் துறையின் 50 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐடி சேவை திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த மாபெரும் திட்டத்தை மொத்தமாக ஒரு நிறுவனத்திற்கு அளிப்பதை விடவும் பல நிறுவனங்களுக்குப் பிரித்து கொடுக்க முடிவு செய்துள்ளது அமெரிக்க அரசு. இதன் மூலம் வேகமாகவும் திட்டத்தை முடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
50 பில்லியன் டாலர் மதிப்பு
50 பில்லியன் டாலர் மதிப்பிலான நேஷ்னல் இன்ஸ்டியூட் ஆப் ஹெல்த் துறையின் ஐடி சேவையைக் கைப்பற்ற கேப்ஜெமினி உட்பட பல நிறுவனங்களுடன் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனமும் போட்டிப்போட உள்ளது. இந்தத் திட்டத்தை மொத்தமாகக் கைப்பற்ற முடியாத நிலையில் அதிகளவிலான திட்டத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது டிசிஎஸ்.
125 கான்டிராக்ட்
இந்த மாபெரும் ஐடி சேவை திட்டத்தில் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் 75 முதல் 125 கான்டிராக்ட்-களைப் பெற முடிவு செய்து அதற்கான விருப்ப விண்ணப்பத்தையும் கொடுத்துள்ளது.
CIO-SP4
மேலும் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் இந்தத் திட்டத்தை CIO-SP4 அடிப்படையில் பெற வேண்டும் எனவும் விண்ணப்பத்தில் குறிப்பிட்டு உள்ளது. தலைமை தகவல் அதிகாரி - சொல்யூஷன் அண்ட் பார்ட்ன்ஸ் 4 என்பதன் சருக்கம் தான் CIO-SP4.
சப் கான்டிராக்ட் முறை
CIO-SP4 மூலம் விண்ணப்பம் செய்யப்பட்டு உள்ள காரணத்தால் டிசிஎஸ் இத்திட்டத்தைப் பெறுவதன் மூலம், சப்கான்டிராக்ட் அளிக்க முடியும். அதாவது டிசிஎஸ் நிறுவனம் பெறும் 75 முதல் 125 கான்டிராக்ட்-ல் சில பகுதியை வேறு நிறுவனங்களுக்குச் சப் கான்டிராக்ட் முறையில் அளிக்க முடியும்.
டாடா அமெரிக்கா இண்டர்நேஷனல்
டிசிஎஸ் நிறுவனம் அமெரிக்காவில் தனது கிளை நிறுவனமான டாடா அமெரிக்கா இண்டர்நேஷனல் லிமிடெட் இருக்கும் காரணத்தால் CIO-SP4 பிரிவில் முறையில் விண்ணப்பம் செய்து சப் கான்டிராக்ட் செய்ய முடியும்.
அமெரிக்க அரசு சேவை
நேஷ்னல் இன்ஸ்டியூட் ஆப் ஹெல்த் துறையின் 50 பில்லியன் டாலர் திட்டத்தில் சிறு பகுதியை டிசிஎஸ் பெற்றால் கூட அமெரிக்க அரசு சேவையில் இந்திய நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும்.
அமெரிக்க அரசு - டிசிஎஸ் வர்த்தக உறவு
இதுமட்டும் அல்லாமல் டிசிஎஸ் இத்திட்டத்தைப் பெற்று வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் பட்சத்தில் அமெரிக்க அரசு - டிசிஎஸ் நிறுவனம் மத்தியிலான வர்த்தக உறவு மிகப்பெரிய அளவில் மேம்படும்.
டாடா கன்சல்டன்சி சர்வீஸ்
உலகிலேயே மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக உயர்ந்திருக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் 2021ஆம் நிதியாண்டில் சுமார் 22.17 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தைப் பெற்று உள்ளது. மேலும் இந்நிறுவனத்தில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 5,09,058 ஆக உயர்ந்துள்ளது.
அக்சென்சர்
ஆனால் டாடா கன்சல்டன்சி சர்வீஸ்-ஐ விடவும் அக்சென்சர் ஒரு படி மேல் உள்ளது. 2021ல் அக்சென்சர் நிறுவனத்தின் மொத்த வருமானம் 50.5 பில்லியன் டாலராக உள்ளது, அதேபோல் இந்நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 6.24 லட்சமாக உள்ளது.