இந்தியாவின் மிகப்பெரிய ஒரு ஐடி நிறுவனம் டிசிஎஸ். வழக்கமாக டிசிஎஸ் நிறுவனம் ஒரு அறிவிப்பு வெளியிட்டால் பெரும்பாலான ஐடி நிறுவனங்களும் அதை தான் பின் தொடரும். அந்த வகையில் தான் கடந்த ஆண்டு ஜூன் மாத காலாண்டு முடிவுகளை வெளியிட்ட டிசிஎஸ், ஊழியர்கள் பணிநீக்கம் என்ற குண்டை தூக்கி போட்டது.
கடந்த ஆண்டில் டிசிஎஸ் 12,000க்கும் அதிகமான ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. உண்மையில் இந்த எண்ணிக்கை 20,000ஐ கடந்தது. இதனால் ஐடி ஊழியர்கள், பொறியியல் மாணவர்கள் என அனைவரும் பேரதிர்ச்சி அடைந்தனர். இந்த சூழலில் நடப்பாண்டு டிசிஎஸ் நிறுவன காலாண்டு முடிவுகள் ஒட்டுமொத்த ஐடி துறையாலும் உற்று நோக்கப்பட்டது. இந்த முறையும் பணிநீக்கம் இருக்குமா என ஊழியர்கள் அச்சத்துடன் பார்த்தனர். அந்த வகையில் அனைவருக்கும் ஒரு நல்ல செய்தியை டிசிஎஸ் வெளியிட்டுள்ளது.

டிசிஎஸ் தலைமை செயல் அதிகாரி கீர்த்திவாசன், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது பணியாளர்களின் வேலையை தட்டிப் பறிக்காது என்றும், மாறாக அது வேலையின் தன்மையை மாற்றியமைக்கும் என அவர் கூறியுள்ளார். ஏஐ தொழில்நுட்பம் ஊழியர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் என்றும், இதனால் ஊழியர்களின் வேலைவாய்ப்புகள் குறையாது என்றும் அவர் உறுதியாக கூறியுள்ளார்.
டிசிஎஸ் நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட சில பணிநீக்கங்கள் அல்லது ஊழியர் வெளியேற்றம் என்பது ஏஐ-ஆல் ஏற்படுபவை அல்ல என கீர்த்திவாசன் தெளிவுபடுத்தியுள்ளார். இது பெரும்பாலும் திறன் இடைவெளி காரணமாகவே நடப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதாவது, மாறிவரும் நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளாத அல்லது மேம்படுத்திக்கொள்ளாத ஊழியர்களே இத்தகைய சவால்களை சந்திக்கின்றனர் என கூறியுள்ளார்.
அப்படி என்றால் ஏஐ காரணமாக கூறி டிசிஎஸ் நிறுவனத்தில் இந்த ஆண்டு பணிநீக்கம் இருக்காது என்பது கீர்த்திவாசனின் பேச்சின் மூலம் தெளிவாகியுள்ளது. அதே வேளையில் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக தேவைப்படும் புதிய தொழில்நுட்ப அறிவை கொண்டவர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்புகள் இருக்கின்றன, அவர்களை தேர்ந்தெடுக்க நிறுவனம் ஆர்வமாக இருக்கிறது என அவர் கூறியுள்ளார். எனவே ஏஐ திறனை வளர்த்து கொள்பவர்களுக்கு டிசிஎஸ் வேலைவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
ஜூன் மாத காலாண்டில் மட்டும் டிசிஎஸ் நிறுவனம் 9,279 பேருக்கு வேலைவாய்ப்பு தந்துள்ளது. குறிப்பாக அண்மையில் பட்டப்படிப்பை முடித்த 14,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளது. அந்த வகையில் டிசிஎஸ் நிறுவன மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 5,93,798 ஆக உள்ளது.
ஏஐ-ஆல் வைட் காலர் வேலைகள் முழுமையாக பறி போகும் என பலரும் கூறும் நிலையில் டிசிஎஸ் அதனை மறுத்துள்ளது. வேலை செய்யும் தன்மை மாறும் என்றும் ஏஐ திறனை வளர்த்து கொள்பவர்களுக்கு வேலைவாய்ப்பு உண்டு என்றும் உறுதி தந்துள்ளது. இதனால் இந்த ஆண்டு பணிநீக்கம் இல்லை என்பது ஒட்டுமொத்த ஐடி துறைக்கும் குட் நியூஸ். கல்லூரி மாணவர்கள் தங்கள் ஏஐ திறனை வளர்த்து கொண்டால் வேலைவாய்ப்பு நிச்சயம் என்பதையும் உணர்த்துகிறது.


Click it and Unblock the Notifications

